Thursday, 19 April 2018

நதிக்கரையின் நினைவலைகள்






              நாளைய அகழ்வாய்வாளன்
              நதியோடிய தடம்தேடி
              ஒட்டக இயந்திரத்தில் பயணிப்பான்
              உலர்ந்துவிடும் நா

              நதிதந்த சீதனங்கள்
              பயிர்கள் மட்டுமல்ல
              உயிர்கள் கூட!

              நதிக்கரை ஓரத்தில்தான்
              தோன்றி இருப்பான்
              முதல் மனிதன்
              பார்த்ததில்லை அவனை நாம்

              பூமியைப் பாலையாக்கிவிட்டுப்
              புதைந்து போவான்
              கடைசி மனிதன்
              பார்க்கப்போவதில்லை அவனை நாம்

              அன்னையின் பால்சுரபியை
              அறுத்துவிட்டு
              அழுகின்றன குழந்தைகள் பால்கேட்டு

              நதிகளின் மூச்சடக்கி
              நகர்களை எழுப்பியவர்கள்
              தொண்டை விக்குகிறார்கள் நீர்கேட்டு 

              நாளைய அகராதியில் வறண்டுபோகும்
              நதி, ஆறு முதலிய சொற்களும்

              மஞ்சள் பூசிக் குளித்தாடினாள்
              மங்கலக் கண்ணகி,
              மலர்சூடி வந்த காவிரியில் அன்று

              சிட்டுக்குருவி
              செத்துக் கிடக்கிறது நீரின்றி,
              சரக்குந்து ஓடும் காவிரியில் இன்று

              மூட நம்பிக்கைகளில் மேலுமொன்று கூடியது
              நீர்கேட்டு
              நீதிமன்றம் செல்வது

              -கோ. மன்றவாணன்

Thursday, 12 April 2018

நிழலில் தேடிய நிஜம்







              திரைநிழலில் வந்தார் கதைநாயகன்
              தீபத் தட்டேந்தியது ரசிகர் திரள்

              ஷூ காலைத் தரையில் வைத்தார்
              சூறாவளியொன்று சுழன்றடித்ததே !
              எகிறி எகிறி அடித்தார் தன் எழுபது வயதில்
              இருபது வலியவர்களை;

              கைகளால் குத்திக்
              காங்கிரிட் சுவர்களைத் தகர்த்து உள்பாய்ந்தார்;
              அந்தரத்தில் பறந்தார்;
              ஹெலிகாப்டரில் தொற்றினார்;

              ஊழல் வாதிகளை உதைத்தும் துவைத்தும்
              ஊருக்குக் காட்டினார்;
              ஒட்டுமொத்த அநீதிகளையும் அழித்தொழித்து
              ஒட்டுமீசையை முறுக்கினார்
              அறத்தைக் காத்தார் ஆன்மீக அவதாரமாய்!

              அவரே
              அரசியலுக்கு வந்தார் பூமிக்கு வந்த சாமியாய்
              அடுத்த நாளே
              ஆளும்கட்சிப் பின்னணியில் “திடீராய்வு” நடந்தது

              நடுஇரவில் நடுங்கும் மனதில்
              ஞானோதயம் உதித்து ஒளிர்ந்தது

              அவரே
              ஓட்டு கேட்டு வந்தார் நேரில்
              ஊழல் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து 

              மேலும் ஒரு கட்சி கூடியதன்றி
              வேறொன்றும் காணவில்லை மக்கள் திரள்

              -கோ. மன்றவாணன்

Sunday, 8 April 2018

அலைபாயும் மனதினிலே...







             அலையிருக்காது கடலாழத்தில்
             அறிந்து சொல்கிறது மீன்
             அலை ஓய்வதில்லை மனஆழத்தில்
             அடித்துச் சொல்கிறேன் நான்

             தூக்கத்திலும் கதறுகிறது மனம்
             துக்கக் கனவலைகள் மோதி
             ஏக்கத்திலும் நசுங்குகிறது மனம்
             இன்னொருவர் உயரம் பார்த்து

             அள்ள அள்ளக் குவிகிறது பணம்
             அமைதியை வாங்க முடியவில்லை
             ஆள்அம்பு அதிகாரம் திசைதோறும்
             அச்சத்தைத் தடுக்க முடியவில்லை

             கதவு சன்னல் சாத்திவிட்டேன்
             கள்வர் நினைவு அகலவில்லை
             கடிகாரத்தை நிறுத்தி வைத்தேன்
             கால ஓட்டம் நிற்கவில்லை

             தியானப் பயிற்சியில் சேர்ந்தேன்
             ஐயாயிரம் கட்டணம் செலுத்தி
             பயிற்றுவிக்கும் பெண்ணைப் பார்த்தேன்
             பற்றிக்கொண்டது இன்னொரு தீ 

             மனதைக் கட்டிப்போடக் கயிறில்லை
             மன்றத்தின் முன் முழங்கினேன்
             பாசக் கயிறு வீசி வந்தான் எமன்
             பாதிக் கனவில் அலறினேன்

             -கோ. மன்றவாணன்