நின்று பார்த்திராத
கால தேவதையின்
காலடித் தடங்களைப் பாதுகாக்கிறது
வரலாறு
உதிர்ந்த இலைகளின் நினைவு நிழலாடுகிறது
தளிர்விடும்
புதிய இலைகளில்
சோகத்தையும்
சுகமாக்குகிறது யாருக்கும்
முதல்காதலின் நினைவு
நேற்றைப் புறக்கணித்துவிட்டு
நாள் நடக்க முடியாது என்று
ஞாபகப்படுத்துகின்றன
நேற்றுச் சுட்ட இதே சூரியனும்
நேற்றுக் குளிர்ந்த இதே நிலாவும்
நினைவு தன்னைத் தானே
முடிச்சிட்டுக்கொள்கிறது
ஒவ்வொரு மரணத்திலும்
அந்த
மரணத்திலிருந்தும் ஒரு நினைவு
கொழுகொம்பு தேடிக்கொள்கிறது
நீ வேறு
நினைவு வேறு அல்ல என
மனக்கிளையில் அமர்ந்து பாடுகிறது
வாழ்க்கைக்கிளி
காலமும் உன்னைக்
கைகூப்பி வணங்க
நினைவுப் பெட்டகங்களில்
நிரம்பி ஒளிரட்டும் நன்னெறிகளே…
நினைவுப் பள்ளியில் பாடம் பயின்றே
வரவேற்கிறது
வருங்காலம்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment