Wednesday, 14 September 2016


என் இலக்கு… என் ஓட்டம்… 


எட்டிப் பறிக்கும் தூரத்தில்
இருக்கும்
திராட்சைக் குலைகள் அல்ல ;
நட்சத்திரங்கள்.

கண்மூடி நின்று
கைநீட்டினால் கிடைக்கும்
வித்தைப் பொருளல்ல ;
நெற்றிவியர்வை சிந்தி
நெற்பயிர் விளைவித்தல்.

கணுக்கால் நதியில் நடந்து
கரைசேர்வதல்ல
இலட்சியம் ;
மூழ்கடிக்கும்
நெருப்பாற்றில்
நீந்திக் கடப்பதே சாதனை.

தூரத்தில் இருந்து அழைக்கிறது
சொர்க்க வனம்

இடையில்
அகழிகளைத் தாண்டி ஓட வேண்டும்

நெடிதுயர்ந்து தடுக்கும்
மலைகளில் ஏறிச்சென்றும்
துளைத்துச் சென்றும் ஓட வேண்டும்

ஆங்காங்கே
ஆளை விழுங்கும் புதைகுழிகளில் விழாமல்
ஓட வேண்டும்

என் ஓட்டம்
நிற்காது
இலக்கை அடையும் வரை

வெற்றி மேடையில் மட்டுமே
சற்றே இளைப்பாறும்
என் கால்கள்

அதன்பின்னும் விடாது என்னை
அடுத்த இலக்கு
அடுத்த ஓட்டம்

ஓடிக்கொண்டே இருப்பதுதான் 
வாழ்க்கை


 - கோ. மன்றவாணன்






No comments:

Post a Comment