Thursday, 19 December 2024

பெரியார் தொண்டர் தி. மாதவன்



கோ. மன்றவாணன்

     திருவாரூர் தங்கராசு கூட்டம் ஒன்று கடலூர் முதுநகரில்  நடந்தது. துறைமுக நகர் என்ற பெயர் அப்போது இல்லை.

   நான் கூட்டத்தில் ஒருவராகக் கலந்து கொண்டேன்.  அவருடைய வாதங்களையும் நகையாடலையும் கேட்டுக் கை தட்டினேன். அப்போது  நான் சிறுவன்.  

          பையில் பத்துக் காசு இல்லை. அந்தப் பேச்சுதான் எனக்கு அன்றைய இரவு உணவு.

            நடு இரவு நெருங்கும் நேரத்தில் கூட்டம் நிறைவடைந்தது.  


            அந்த இரவு நேரத்தில் பேருந்து வசதி  இல்லை. ஆட்டோக்களும் அறிமுகம் ஆகவில்லை.  சாமி லாரி புக்கிங் ஆபிஸ் எதிரில் ஜட்கா ஸ்டாண்ட் இருக்கும் அது வேறொன்றும் இல்லை. குதிரை வண்டி நிலையம்தான்.

அங்கிருந்து குதிரை வண்டிகள் முதுநகருக்கும் திருப்பாதிரிப்புலியூருக்கும் ஓடிக்கொண்டிருக்கும். அதில் பயணம் செய்ய காசு வேணுமே!

வரும்போது நடந்துதானே வந்தேன். திரும்பும் போதும் நடந்துதானே போக வேண்டும். ஏழ்மை நடக்க வைத்தது காலில் செருப்பும் இல்லாமல்.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் இருள் சூழ்ந்த சாலையில் நடந்து கொண்டிருந்தேன். இடையிலே மோகினி பாலம் குறுக்கிட்டது. 

திகில் பற்றி எரிய எரிய மோகினி பற்றிய பல கதைகளைப் பலர் சொல்லக் கேட்டு நடுங்காதவர்களே அன்று இல்லை. அந்தக் கதை மன்னர்களிடத்தில் பேய்க்கதை மன்னன் பி டி சாமியே தோற்றுப் போய்விடுவார்.

ஒரு பக்கம்... பேய் இல்லை என்று அறிவு சொல்கிறது. மறுபக்கம்... ஒரு வேளை பேய் இருந்துவிட்டால் என்று பயம் கவ்வுகிறது. இந்த நிலையில்… என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... என்று எம்ஜிஆர் பாட்டைப் பாடியபடி   திருப்பாதிரிப்புலியூர் நோக்கி  நடந்து கொண்டிருந்தேன். 

எனக்கு முன்னே குள்ளமான ஓர் உருவம் நடந்து போய்க் கொண்டிருந்தது. அந்த உருவம்தான் மாதவன். அவரும் அன்றைய கூட்டத்தில் என்னைப்போல் கலந்துகொண்டவர். ஆனால் அவருடன் பேசியதில்லை அப்போது.


அந்தக் காலத்தில் இருந்தே அவர் கருப்புச் சட்டைதான் அணிந்திருப்பார். நான்  கருப்புச் சட்டை அணிந்ததில்லை. பிறர் கொடுக்கும் பழைய சட்டைகளையே போட்டு வந்ததால்,   கருப்புச் சட்டை அணியும் வாய்ப்பை யாரும் தரவில்லை.

அவர் அதிர்ந்து பேசி நான் கேட்டதில்லை. அவர் கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை.

அவரால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வார். பெரும்பாலோர் அவரை எடுபிடியாகவே நடத்தினார்கள். ஆனாலும் அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. எப்படியோ யாருக்கோ இந்த சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதே அவர் நோக்கமாக இருந்தது. 

கடலூரில் எந்தக் கூட்டம் நடந்தாலும் அங்கே மாதவன் இருப்பார். எளிய தோற்றம் என்பதால் அவரை அலட்சியமாகப் பார்த்துச் செல்வார்கள் பலர். 

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் ஊரில் உள்ள பெரிய மனிதர்களைச் சிலர் போய்ப் பார்த்து மரியாதை செய்வது உண்டு. எனக்கு அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் அது போன்ற ஒரு புத்தாண்டு தினத்தில் நானும் ஒரு பெரிய மனிதரைப் பார்த்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 

யாருக்கு மரியாதை செய்வது? இந்தக் கேள்விக்கு எனக்கு உடனே பதில் கிடைத்தது. அவர்தான் மாதவன். 

யாரோ கொடுத்த பழத்தை அல்ல, பணம் கொடுத்து ஓர் ஆப்பிள் பழத்தை வாங்கிக் கொண்டு, அவர் வீட்டுக்குப் போய் வாழ்த்தினேன். பழத்தையும் கொடுத்தேன். சத்தம் இல்லாத சிரிப்போடு அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விழுப்புரம் மற்றும் கடலுார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அஞ்சல் கொண்டு செல்பவராகக் கொஞ்ச காலம் பணி புரிந்தார். அரசு நியமன வேலை இல்லை அது. கூலிக்கு வைத்துக் கொள்ளும் வெளிஆள் வேலை.

கடலூர் பெரியார் நூலகத்தில் நூலகராகவும் பணி செய்தார். திராவிடர் கழகம் அவருக்குச் செய்த கவுரவம் அது. அவருக்கு அந்த வேலை பிடித்திருந்தது. அந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்க வேண்டி இருந்ததால் இடித்துவிட்டார்கள். புது கட்டுமானப் பணியும் தடைபட்டது. அதன்பின், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் நூல்களை எல்லாம் கூட்டங்களின் போது விற்பனை செய்து வந்தார். 

அவரிடத்தில் பலர் புத்தகங்களை வாங்கிக்கொண்டு பின்னர் பணம் தருவதாகச் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் அவர்கள் தரவில்லை. இவரும் கேட்கவில்லை.  

ஒரு பெருமழையின் பொழுது அவருடைய ஓட்டு வீட்டுக் கூரை ஒழுகியதால் ஏராளமான புத்தகங்கள் வீணாகிவிட்டன. அவற்றுக்குரிய பணத்தை, நிறுவனத்துக்குச் செலுத்த முடியவில்லையே என்று வருந்தினார். 

பின்னர் நியூ சினிமா அருகில் இருந்த இந்திரா டிராவல்ஸில் இரவுக் காவலராகவும் பணிபுரிந்தார்.

தி.க., தி.மு.க., கூட்டம் மட்டுமல்லாமல் இலக்கிய கூட்டங்கள், பொதுநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் என்றாலும் அங்கே மாதவன் இருப்பார். பொதுநலப் போராட்டம் ஒன்றில் பங்கேற்றதால் நீதிமன்றத்துக்கு நடையாய் நடந்தார். வழக்கின் கடுமை அவருக்குப் புரிந்ததே இல்லை. நீதிமன்றத்தில் சிரித்தபடி நின்றிருப்பார்.

பல இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களை… பல்வேறு அமைப்புகளின் அழைப்பிதழ்களை… அவர்தான் நடையாய் நடந்து, வீடு வீடாகச் சென்று கொடுப்பார்.  ஆனால் எந்தக் கூட்ட அழைப்பிதழிலும் அவர் பெயர் இருக்காது. கூட்ட நிறைவில் நன்றி சொல்லுகின்ற பொழுது,  அழைப்பிதழைக் கொடுத்த மாதவன் பெயரை மறந்திருப்பார்கள்.  

கூட்ட அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்க்க வருவார். அழைப்பிதழை வாங்கிப் படித்தபடியே தேநீர்க் கடைக்கு அவரை அழைத்துச் செல்வேன். தேநீர் அருந்துவோம்., எனக்கு முந்திச் சென்று தேநீருக்குப் பணம் கொடுக்க முயலுவார். நான் தடுத்துவிடுவேன். 

(அப்பொழுது எல்லாம் நினைத்துக் கொள்வேன். ஒரு காலத்தில் நடந்த தி.க., தி.மு.கழகக் கூட்டங்களில் மூவர் கட்டாயம் இருப்போம். இரும்புக் கடையில் வேலை செய்யும் தங்கத் தமிழன் என்ற இராமலிங்கமும்- செருப்புக் கடையில் வேலை செய்யும் நானும்- எந்த வேலையிலும் இல்லாத மாதவனும்தாம் அந்த மூவர். கொடுத்துச் சிவந்த கரங்கள் என்று வள்ளல்களைப் பாராட்டுவார்கள். பொதுக்கூட்டங்களில் கைதட்டி கைதட்டியே சிவந்தன எங்கள் கரங்கள்.  மாதவனும் இராமலிங்கமும் அழுக்கு வேட்டி அணிந்திருப்பார்கள். அவர்களில் நான் வேறுபட்டு இருப்பேன். ஆம். அழுக்குக் கைலி கட்டி இருப்பேன். அந்த நினைவில் இருந்து மீண்டு வருகிறேன்.)

ஒரு கூட்டத்தில் அரங்கின் ஓரமாக மாதவன் நின்றுகொண்டிருந்தார். பார்வையாளராக வந்திருந்த ஓர் இலக்கிய அன்பர், “மாதவன் இந்த டீ கப்பு எல்லாம் எடுத்துப் போடக் கூடாதா,” என்று தன் வீட்டு வேலைக்காரர் போல் தாழ்த்தி அதட்டினார். மாதவனும் அந்த டீ கப்புகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய் வெளியில் போட்டார். அதையும் அவர் மகிழ்ச்சியோடுதான் செய்தார். 

தோற்றத்தை வைத்தே ஒருவரை உலகம் மதிக்கிறது. குள்ளமான உருவம். அழுக்கடைந்த ஆடை. முடிமழிக்காத முகம். தெளிவில்லாத பேச்சு என்று இருந்தால், மதிப்பார் யார்?

யாருக்கும் எந்த உதவியும் ஒருவர் செய்ய வேண்டியது இல்லை. மேக்கப் சகிதம் வந்தால் போதும். அவருக்கு மரியாதை உண்டு. மாதவனுக்கு எப்படி மரியாதை கிடைக்கும்?

மாதவனைப் பார்த்து நாம் பரிதாபப் படலாம். ஆனால் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. தன் தோளில் துண்டு அணிந்து கம்பீரமாகவே இருந்தார். 


அவர் மேடை ஏறி முகம் காட்டியதில்லை. யாரிடத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. எந்த விளம்பரமும் தேடிக் கொண்டதில்லை. ஆனாலும் கடலூரில் உள்ள பொதுநலம் சார்ந்த பிரமுகர்களுக்கு அவரைத் தெரியும். அதுவே அவருக்குக் கிடைத்த பெரும் புகழ்.

மாதவன் அவர்களின் மணிவிழாவைத் திராவிடர் கழகத் தோழர்கள் எழிலேந்தி, தென். சிவக்குமார், சின்னதுரை உள்ளிட்டோர் நடத்தினார்கள். வெண்புறா குமார் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும் மாதவனுக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். இலக்கிய அமைப்பினர் சிலரும் வேறு அமைப்பினர் சிலரும் நிகழ்வுகளில் மாதவனுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்துள்ளார்கள். இவர்கள்தாம் சேவையை மதிக்கத் தெரிந்தவர்கள். உருவத்தைப் பார்க்காது உள்ளத்தைப் போற்றியவர்கள்.

பலருக்குப் பல பதவிகளும் பட்டங்களும் கிடைத்திருக்கலாம். அந்தப் பதவிகளையும் பட்டங்களையும் விடவும் உயர்ந்தது ஒன்று உண்டு. அது, பெரியார் தொண்டர் என்ற பெருமை!

பெரியார் தொண்டர் தி. மாதவன் அவர்களுக்குக் கண்ணீர் மாலை சூட்டுகிறேன்.

கோ. மன்றவாணன்

 


Monday, 16 December 2024

வழி அடைக்கும் கல்லா? வழி அமைக்கும் கல்லா?

 


வழி அடைக்கும் கல்லா...

வழி அமைக்கும் கல்லா...


-கோ. மன்றவாணன்-


திருக்குறள் அறன் வலிஉறுத்தல் அதிகாரத்தில் ஒரு குறள்.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃது ஒருவன் 

வாழ்நாள் வழிஅடைக்கும் கல். 

வீழ்நாள் என்றால் வீணான நாள் அல்லது நாள் தவறாமல் எனப் பொருள்படும். வீழ்நாள் படாஅமை நன்று ஆற்று என்றால் நாள் தவறாமல் அறம் செய்க என்பதாகும். வள்ளுவர் நமக்கு அறிவுறுத்தும் செய்தியும் அதுதான். 

ஆனால், அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்ற வரிக்கு உரை எழுதும் பொழுதுதான், பலர் வழி தடுமாறுகின்றனர்; வழுக்கியும் விழுகின்றனர்.

மணக்குடவர், காளிங்கர், பரிமேல் அழகர், பரிதியார் உள்ளிட்ட பழம் உரையாசிரியர்கள், வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்பதற்கு அடுத்தடுத்து பிறக்கும் பிறவியைத் தடுக்கும் கல் எனப் பொருள் கூறி உள்ளனர். இதற்கு ஆதரவாகப் பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரை சேரலாம் என்ற இன்னொரு திருக்குறளையும் துணைக்கு அழைக்கலாம். அந்தக் குறளின் மெய்ப்பொருள் என்னவென இன்னொரு கட்டுரையில் ஆராயலாம்.

எல்லாரும் சொர்க்கத்துக்குப் போக ஆசைப்படுகிறார்கள். அதே வேளையில் இறந்து போக யாருமே விரும்புவது இல்லையே. இந்த முரணை எண்ணிப் பாருங்கள். ஆக எல்லா மனிதர்களும் வாழவே ஆசைப்படுகிறார்கள் 

நீடு வாழ்வார் என்ற சொல்தொடரை எழுதியவரும் வள்ளுவர்தான். அதன்படி, மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம்.  வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

“இந்த உலகம் துன்ப மயமானது.”

“மறுபிறவி உண்டு.”

நாம் இந்தப் பிறவியில் அறம் செய்தால் இறைவனை அடையலாம்.  பாவம் செய்தால் மீண்டும் மீண்டும் இந்த உலகில் நாயாய் நரியாய்ப் பிற உயிரியாய்ப் பிறந்து துன்பம் அடைய நேரிடும். 

இந்த உலகில் நாம் தீமை செய்தால் நரகத்தில் தண்டனை கிடைக்கும். நன்மை செய்தால் சொர்க்கத்தில் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

இந்தக் கருத்துகள் எல்லாம் காலம் காலமாக நம் மக்களின் மனதில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்க எந்த ஆதாரமும் கிடையாது. 

ஆனால் நம் முன்னோர்கள் ஏன் இந்த அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை மக்கள் மனதில் பதித்து வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? 

ஆனாலும் அதை நல்நோக்கத்தில் சிந்தித்துப் பார்த்தால், அதிலும் ஒரு பயன் இருப்பது தெரியவரும்.

மனித மனம் விசித்திரமானது. ஒன்றை நம்பி விட்டால், அதுவே மெய்யென உறுதி கொண்டுவிடும். அதை மாற்றுவது என்பது எளிதான செயல் இல்லை. அறிவா நம்பிக்கையா என வந்தால் பெரும்பாலும் மனது நம்பிக்கையின் பக்கமே சாய்ந்து விடுகிறது; சார்ந்து விடுகிறது.

ஒரு மனிதரை இயக்க; ஒன்றை நோக்கிச் செயல்படுத்த உளவியலில் இரண்டு வழிமுறைகள் உண்டு. ஆசையைத் தூண்டி நல்வழிப் படுத்துவது ஒன்று. அச்சுறுத்தித் தீயவழியில் செல்வதைத் தடுப்பது இன்னொன்று.

நம் முன்னோர்கள் இந்த இரண்டு வழிமுறைகளையும் கையாண்டு சமூக வாழ்வைச் சீர்படுத்த முயன்றார்கள். சமய அன்பர்களின் நோக்கமும் வள்ளுவர் சொன்னது போல், நாள்தோறும் அறம் செய்க என்பதுதான். அப்படி செய்யாவிட்டால் என்ன என்று எதிர்க் கேள்வி மக்கள் இடையே எழும். அறம் செய்வதை அலட்சியமாக அவர்கள் நோக்கவும் கூடும். 

ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. 

இந்த நிலையில்தான் அறம் செய்தால் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். இறைவனிடம் அடைக்கலம் ஆகலாம் போன்ற ஆசை வார்த்தைகள் கூறி, அறம் செய்யவும்; ஒழுக்கமாக இருக்கவும் ஊக்குவித்தார்கள். அறம் செய்யாமல் போய்விட்டால் நரகத்தில் எண்ணெய்ச் சட்டியில் வறுபடுவாய் எனவும் அச்சுறுத்தினார்கள்; 

ஆனால் இன்றைய அறிவியல்படி சிந்தித்துப் பார்த்தால் அவற்றில் எதுவும் உண்மை இல்லை. கடந்த காலங்களைவிட இன்று மக்கள் மிகுந்த அறிவைப் பெற்று இருக்கிறார்கள். நிறைய சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. 

இந்நிலையில்... ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. அந்த முறையில் திருக்குறளுக்கு உரை காண்பதே சரி என நினைக்கிறேன். அப்படியானால், வழி அடைக்கும் கல் என்பதற்குப் பிறப்பைத் தடுக்கும் கல் என்று பொருள் கொள்ள முடியாது. 

வழக்கறிஞர் கு.ச. ஆனந்தன் அவர்கள், வழி அடைக்கும் கல் என்ற சொல் தொடருக்கு வழிஅமைக்கும் கல் என்று பாடம் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஓலைச்சுவடிகளில் காலம் காலமாய் எழுதி வருகிற பொழுது... படி எடுக்கின்ற பொழுது அவ்வாறு நேரிடவும் வாய்ப்பு உண்டு. தமிழ்த்தென்றல் திரு வி கலியாண சுந்தரம் அவர்களும் வழி அமைக்கும் கல் என்ற பொருளில்தான் இந்தக் குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். அது, அறிவியலுக்கு ஏற்றதாகவும் அமைந்துவிடுகிறது.

புலவர் குழந்தை போன்றோர் வாழ்நாளில் வரும் தீமைகளைத் தடுக்கும் கல் என்று பொருள் கூறி இருக்கின்றார்கள். அதனை ஒட்டியே நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும் உரை எழுதி உள்ளார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல், வழி அடைக்கும் கல் என்பதை நேரடியாகப் பார்த்தால், ஒரு வழியை மூடும் கல் என்றே பொருள் தருகிறது. வாழ்நாள் வழி என்பதைப் பிறவி எடுத்தலுக்கான காரணம் எனச் சமயக் கருத்தோடு பொருத்திப் பொருள்கொள்வது எளிதாக இருக்கிறது. அப்படி இருக்க, இவர்கள் ஏன், தீமை வரும் வழி என்று பொருள் கொள்கிறார்கள்? தீமை என்ற சொல்லாவது அந்தக் குறளில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 

குறளில் வரும் இரு சொற்களுக்கு இடையில் நுழைந்து ஒரு பொருளைத் தருவித்தோ ஊகித்தோ உரை எழுதுவது ஒரு முறை.  மேலும் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தமிழில் உண்டு. ஏழு சீர்கள் மட்டுமே கொண்ட செய்யுள். அதனால் சீர்களுக்கு இடையே சொல்லும் பொருளும் தொக்கிவர வாய்ப்பு உண்டு. குறளின் பொருளை நிகழ்காலத்துக்குப் பொருத்திப் பார்ப்பது தேவை. இந்தக் காரணங்களால்தாம் திருக்குறளுக்குப் புதுப்புது உரை எழுத முடிகிறது. அதற்குத் திருக்குறளும் இசைகிறது. 

அடைக்கும் என்பதற்கு மூடுதல் என்பதோடு துார்த்தல் என்ற பொருளும் உண்டு அடைக்கும் என்ற சொல்லை அப்படியே எடுத்துக் கொண்டு, வேறு வகையில் பொருள் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. 

ஒவ்வொரு பாதையும் கல்பரப்பி அதாவது கல்அடைத்து உருவாக்கப்படுகிறது. நாள்தோறும் அறம் செய்பவர்களின் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்து வாழ்க்கைப் பயணத்தைச் சுகம் ஆக்குவதுதான் அடைக்கும் கல் என்று பொருள்கொள்ள முடிகிறது. வாழ்க்கைப் பாதையில் எதிர்கொள்ளும் துயரப் பள்ளங்களைத் துார்ப்பதையும் அடைக்கும் கல் என்பது   உணர்த்தும்.                   

இந்தக் கருத்துக்கு ஆதரவாகக் கலைஞர் கருணாநிதியின் உரையும் அமைந்து இருக்கிறது. அவருடைய உரை இதுதான் : 

“பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.“

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இந்த உரை ஏற்கத் தக்கது. குறளின் சொற்களை அப்படியே எடுத்துக் கொண்டு, பொருத்தமான உரை எழுதி இருக்கிறார். 

குறளில் வரும் வாழ்நாள் என்ற சொல்லை ஆராய்ந்து பார்ப்போம். இன்பம் - துன்பம், நல்வினை - தீவினை, நன்மை - தீமை என்பன போல்தாம் வாழ்நாள் - வீழ்நாள் ஆகியவை. இவை, எதிர்எதிர்த் தன்மைகள் கொண்டவை.

வீழ்நாள் என்பது வீணான நாள் அல்லது வீழ்ச்சியான நாள் எனப் பொருள் தரும். வாழ்நாள் என்பது பயனுடைய நாள் அல்லது வாழ்ந்து காட்டும் நாள் எனப் பொருள் தரும். இங்கே வாழ்நாளைத்தான் உயர்த்திப் பிடிக்கிறார் வள்ளுவர். எனவே வாழ்நாளைத் தடுக்கச் சொல்லவில்லை. அறம் செய்து ஒவ்வொரு நாளையும் பயனுடையதாக ஆக்கி நீடு வாழ்க என்றுதான் வாழ்த்தி இருக்கிறார். 

மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

திருக்குறளுக்கு இன்றைய வாழ் நிலையில் என்னவாக பொருள் இருக்க முடியும் என்று சிந்திப்பதே நிகழ்காலத் தேவையாகும்.   இந்தக் குறளுக்கு இப்படி எளிதாகப் பொருள் கொள்ளலாம்.

நாள் தவறாமல் நன்மை செய்து வந்தால்… அதுவே, வாழ்க்கைப் பாதையில் படிக்கல் ஆகும்.


                                                    -கோ. மன்றவாணன்


நன்றி

கணையாழி மாத இதழ்

நவம்பர், 2024