Thursday, 19 December 2024

பெரியார் தொண்டர் தி. மாதவன்



கோ. மன்றவாணன்

     திருவாரூர் தங்கராசு கூட்டம் ஒன்று கடலூர் முதுநகரில்  நடந்தது. துறைமுக நகர் என்ற பெயர் அப்போது இல்லை.

   நான் கூட்டத்தில் ஒருவராகக் கலந்து கொண்டேன்.  அவருடைய வாதங்களையும் நகையாடலையும் கேட்டுக் கை தட்டினேன். அப்போது  நான் சிறுவன்.  

          பையில் பத்துக் காசு இல்லை. அந்தப் பேச்சுதான் எனக்கு அன்றைய இரவு உணவு.

            நடு இரவு நெருங்கும் நேரத்தில் கூட்டம் நிறைவடைந்தது.  


            அந்த இரவு நேரத்தில் பேருந்து வசதி  இல்லை. ஆட்டோக்களும் அறிமுகம் ஆகவில்லை.  சாமி லாரி புக்கிங் ஆபிஸ் எதிரில் ஜட்கா ஸ்டாண்ட் இருக்கும் அது வேறொன்றும் இல்லை. குதிரை வண்டி நிலையம்தான்.

அங்கிருந்து குதிரை வண்டிகள் முதுநகருக்கும் திருப்பாதிரிப்புலியூருக்கும் ஓடிக்கொண்டிருக்கும். அதில் பயணம் செய்ய காசு வேணுமே!

வரும்போது நடந்துதானே வந்தேன். திரும்பும் போதும் நடந்துதானே போக வேண்டும். ஏழ்மை நடக்க வைத்தது காலில் செருப்பும் இல்லாமல்.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் இருள் சூழ்ந்த சாலையில் நடந்து கொண்டிருந்தேன். இடையிலே மோகினி பாலம் குறுக்கிட்டது. 

திகில் பற்றி எரிய எரிய மோகினி பற்றிய பல கதைகளைப் பலர் சொல்லக் கேட்டு நடுங்காதவர்களே அன்று இல்லை. அந்தக் கதை மன்னர்களிடத்தில் பேய்க்கதை மன்னன் பி டி சாமியே தோற்றுப் போய்விடுவார்.

ஒரு பக்கம்... பேய் இல்லை என்று அறிவு சொல்கிறது. மறுபக்கம்... ஒரு வேளை பேய் இருந்துவிட்டால் என்று பயம் கவ்வுகிறது. இந்த நிலையில்… என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... என்று எம்ஜிஆர் பாட்டைப் பாடியபடி   திருப்பாதிரிப்புலியூர் நோக்கி  நடந்து கொண்டிருந்தேன். 

எனக்கு முன்னே குள்ளமான ஓர் உருவம் நடந்து போய்க் கொண்டிருந்தது. அந்த உருவம்தான் மாதவன். அவரும் அன்றைய கூட்டத்தில் என்னைப்போல் கலந்துகொண்டவர். ஆனால் அவருடன் பேசியதில்லை அப்போது.


அந்தக் காலத்தில் இருந்தே அவர் கருப்புச் சட்டைதான் அணிந்திருப்பார். நான்  கருப்புச் சட்டை அணிந்ததில்லை. பிறர் கொடுக்கும் பழைய சட்டைகளையே போட்டு வந்ததால்,   கருப்புச் சட்டை அணியும் வாய்ப்பை யாரும் தரவில்லை.

அவர் அதிர்ந்து பேசி நான் கேட்டதில்லை. அவர் கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை.

அவரால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வார். பெரும்பாலோர் அவரை எடுபிடியாகவே நடத்தினார்கள். ஆனாலும் அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. எப்படியோ யாருக்கோ இந்த சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதே அவர் நோக்கமாக இருந்தது. 

கடலூரில் எந்தக் கூட்டம் நடந்தாலும் அங்கே மாதவன் இருப்பார். எளிய தோற்றம் என்பதால் அவரை அலட்சியமாகப் பார்த்துச் செல்வார்கள் பலர். 

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் ஊரில் உள்ள பெரிய மனிதர்களைச் சிலர் போய்ப் பார்த்து மரியாதை செய்வது உண்டு. எனக்கு அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் அது போன்ற ஒரு புத்தாண்டு தினத்தில் நானும் ஒரு பெரிய மனிதரைப் பார்த்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 

யாருக்கு மரியாதை செய்வது? இந்தக் கேள்விக்கு எனக்கு உடனே பதில் கிடைத்தது. அவர்தான் மாதவன். 

யாரோ கொடுத்த பழத்தை அல்ல, பணம் கொடுத்து ஓர் ஆப்பிள் பழத்தை வாங்கிக் கொண்டு, அவர் வீட்டுக்குப் போய் வாழ்த்தினேன். பழத்தையும் கொடுத்தேன். சத்தம் இல்லாத சிரிப்போடு அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விழுப்புரம் மற்றும் கடலுார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அஞ்சல் கொண்டு செல்பவராகக் கொஞ்ச காலம் பணி புரிந்தார். அரசு நியமன வேலை இல்லை அது. கூலிக்கு வைத்துக் கொள்ளும் வெளிஆள் வேலை.

கடலூர் பெரியார் நூலகத்தில் நூலகராகவும் பணி செய்தார். திராவிடர் கழகம் அவருக்குச் செய்த கவுரவம் அது. அவருக்கு அந்த வேலை பிடித்திருந்தது. அந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்க வேண்டி இருந்ததால் இடித்துவிட்டார்கள். புது கட்டுமானப் பணியும் தடைபட்டது. அதன்பின், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் நூல்களை எல்லாம் கூட்டங்களின் போது விற்பனை செய்து வந்தார். 

அவரிடத்தில் பலர் புத்தகங்களை வாங்கிக்கொண்டு பின்னர் பணம் தருவதாகச் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் அவர்கள் தரவில்லை. இவரும் கேட்கவில்லை.  

ஒரு பெருமழையின் பொழுது அவருடைய ஓட்டு வீட்டுக் கூரை ஒழுகியதால் ஏராளமான புத்தகங்கள் வீணாகிவிட்டன. அவற்றுக்குரிய பணத்தை, நிறுவனத்துக்குச் செலுத்த முடியவில்லையே என்று வருந்தினார். 

பின்னர் நியூ சினிமா அருகில் இருந்த இந்திரா டிராவல்ஸில் இரவுக் காவலராகவும் பணிபுரிந்தார்.

தி.க., தி.மு.க., கூட்டம் மட்டுமல்லாமல் இலக்கிய கூட்டங்கள், பொதுநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் என்றாலும் அங்கே மாதவன் இருப்பார். பொதுநலப் போராட்டம் ஒன்றில் பங்கேற்றதால் நீதிமன்றத்துக்கு நடையாய் நடந்தார். வழக்கின் கடுமை அவருக்குப் புரிந்ததே இல்லை. நீதிமன்றத்தில் சிரித்தபடி நின்றிருப்பார்.

பல இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களை… பல்வேறு அமைப்புகளின் அழைப்பிதழ்களை… அவர்தான் நடையாய் நடந்து, வீடு வீடாகச் சென்று கொடுப்பார்.  ஆனால் எந்தக் கூட்ட அழைப்பிதழிலும் அவர் பெயர் இருக்காது. கூட்ட நிறைவில் நன்றி சொல்லுகின்ற பொழுது,  அழைப்பிதழைக் கொடுத்த மாதவன் பெயரை மறந்திருப்பார்கள்.  

கூட்ட அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்க்க வருவார். அழைப்பிதழை வாங்கிப் படித்தபடியே தேநீர்க் கடைக்கு அவரை அழைத்துச் செல்வேன். தேநீர் அருந்துவோம்., எனக்கு முந்திச் சென்று தேநீருக்குப் பணம் கொடுக்க முயலுவார். நான் தடுத்துவிடுவேன். 

(அப்பொழுது எல்லாம் நினைத்துக் கொள்வேன். ஒரு காலத்தில் நடந்த தி.க., தி.மு.கழகக் கூட்டங்களில் மூவர் கட்டாயம் இருப்போம். இரும்புக் கடையில் வேலை செய்யும் தங்கத் தமிழன் என்ற இராமலிங்கமும்- செருப்புக் கடையில் வேலை செய்யும் நானும்- எந்த வேலையிலும் இல்லாத மாதவனும்தாம் அந்த மூவர். கொடுத்துச் சிவந்த கரங்கள் என்று வள்ளல்களைப் பாராட்டுவார்கள். பொதுக்கூட்டங்களில் கைதட்டி கைதட்டியே சிவந்தன எங்கள் கரங்கள்.  மாதவனும் இராமலிங்கமும் அழுக்கு வேட்டி அணிந்திருப்பார்கள். அவர்களில் நான் வேறுபட்டு இருப்பேன். ஆம். அழுக்குக் கைலி கட்டி இருப்பேன். அந்த நினைவில் இருந்து மீண்டு வருகிறேன்.)

ஒரு கூட்டத்தில் அரங்கின் ஓரமாக மாதவன் நின்றுகொண்டிருந்தார். பார்வையாளராக வந்திருந்த ஓர் இலக்கிய அன்பர், “மாதவன் இந்த டீ கப்பு எல்லாம் எடுத்துப் போடக் கூடாதா,” என்று தன் வீட்டு வேலைக்காரர் போல் தாழ்த்தி அதட்டினார். மாதவனும் அந்த டீ கப்புகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய் வெளியில் போட்டார். அதையும் அவர் மகிழ்ச்சியோடுதான் செய்தார். 

தோற்றத்தை வைத்தே ஒருவரை உலகம் மதிக்கிறது. குள்ளமான உருவம். அழுக்கடைந்த ஆடை. முடிமழிக்காத முகம். தெளிவில்லாத பேச்சு என்று இருந்தால், மதிப்பார் யார்?

யாருக்கும் எந்த உதவியும் ஒருவர் செய்ய வேண்டியது இல்லை. மேக்கப் சகிதம் வந்தால் போதும். அவருக்கு மரியாதை உண்டு. மாதவனுக்கு எப்படி மரியாதை கிடைக்கும்?

மாதவனைப் பார்த்து நாம் பரிதாபப் படலாம். ஆனால் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. தன் தோளில் துண்டு அணிந்து கம்பீரமாகவே இருந்தார். 


அவர் மேடை ஏறி முகம் காட்டியதில்லை. யாரிடத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. எந்த விளம்பரமும் தேடிக் கொண்டதில்லை. ஆனாலும் கடலூரில் உள்ள பொதுநலம் சார்ந்த பிரமுகர்களுக்கு அவரைத் தெரியும். அதுவே அவருக்குக் கிடைத்த பெரும் புகழ்.

மாதவன் அவர்களின் மணிவிழாவைத் திராவிடர் கழகத் தோழர்கள் எழிலேந்தி, தென். சிவக்குமார், சின்னதுரை உள்ளிட்டோர் நடத்தினார்கள். வெண்புறா குமார் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும் மாதவனுக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். இலக்கிய அமைப்பினர் சிலரும் வேறு அமைப்பினர் சிலரும் நிகழ்வுகளில் மாதவனுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்துள்ளார்கள். இவர்கள்தாம் சேவையை மதிக்கத் தெரிந்தவர்கள். உருவத்தைப் பார்க்காது உள்ளத்தைப் போற்றியவர்கள்.

பலருக்குப் பல பதவிகளும் பட்டங்களும் கிடைத்திருக்கலாம். அந்தப் பதவிகளையும் பட்டங்களையும் விடவும் உயர்ந்தது ஒன்று உண்டு. அது, பெரியார் தொண்டர் என்ற பெருமை!

பெரியார் தொண்டர் தி. மாதவன் அவர்களுக்குக் கண்ணீர் மாலை சூட்டுகிறேன்.

கோ. மன்றவாணன்

 


Monday, 16 December 2024

வழி அடைக்கும் கல்லா? வழி அமைக்கும் கல்லா?

 


வழி அடைக்கும் கல்லா...

வழி அமைக்கும் கல்லா...


-கோ. மன்றவாணன்-


திருக்குறள் அறன் வலிஉறுத்தல் அதிகாரத்தில் ஒரு குறள்.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃது ஒருவன் 

வாழ்நாள் வழிஅடைக்கும் கல். 

வீழ்நாள் என்றால் வீணான நாள் அல்லது நாள் தவறாமல் எனப் பொருள்படும். வீழ்நாள் படாஅமை நன்று ஆற்று என்றால் நாள் தவறாமல் அறம் செய்க என்பதாகும். வள்ளுவர் நமக்கு அறிவுறுத்தும் செய்தியும் அதுதான். 

ஆனால், அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்ற வரிக்கு உரை எழுதும் பொழுதுதான், பலர் வழி தடுமாறுகின்றனர்; வழுக்கியும் விழுகின்றனர்.

மணக்குடவர், காளிங்கர், பரிமேல் அழகர், பரிதியார் உள்ளிட்ட பழம் உரையாசிரியர்கள், வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்பதற்கு அடுத்தடுத்து பிறக்கும் பிறவியைத் தடுக்கும் கல் எனப் பொருள் கூறி உள்ளனர். இதற்கு ஆதரவாகப் பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரை சேரலாம் என்ற இன்னொரு திருக்குறளையும் துணைக்கு அழைக்கலாம். அந்தக் குறளின் மெய்ப்பொருள் என்னவென இன்னொரு கட்டுரையில் ஆராயலாம்.

எல்லாரும் சொர்க்கத்துக்குப் போக ஆசைப்படுகிறார்கள். அதே வேளையில் இறந்து போக யாருமே விரும்புவது இல்லையே. இந்த முரணை எண்ணிப் பாருங்கள். ஆக எல்லா மனிதர்களும் வாழவே ஆசைப்படுகிறார்கள் 

நீடு வாழ்வார் என்ற சொல்தொடரை எழுதியவரும் வள்ளுவர்தான். அதன்படி, மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம்.  வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

“இந்த உலகம் துன்ப மயமானது.”

“மறுபிறவி உண்டு.”

நாம் இந்தப் பிறவியில் அறம் செய்தால் இறைவனை அடையலாம்.  பாவம் செய்தால் மீண்டும் மீண்டும் இந்த உலகில் நாயாய் நரியாய்ப் பிற உயிரியாய்ப் பிறந்து துன்பம் அடைய நேரிடும். 

இந்த உலகில் நாம் தீமை செய்தால் நரகத்தில் தண்டனை கிடைக்கும். நன்மை செய்தால் சொர்க்கத்தில் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

இந்தக் கருத்துகள் எல்லாம் காலம் காலமாக நம் மக்களின் மனதில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்க எந்த ஆதாரமும் கிடையாது. 

ஆனால் நம் முன்னோர்கள் ஏன் இந்த அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை மக்கள் மனதில் பதித்து வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? 

ஆனாலும் அதை நல்நோக்கத்தில் சிந்தித்துப் பார்த்தால், அதிலும் ஒரு பயன் இருப்பது தெரியவரும்.

மனித மனம் விசித்திரமானது. ஒன்றை நம்பி விட்டால், அதுவே மெய்யென உறுதி கொண்டுவிடும். அதை மாற்றுவது என்பது எளிதான செயல் இல்லை. அறிவா நம்பிக்கையா என வந்தால் பெரும்பாலும் மனது நம்பிக்கையின் பக்கமே சாய்ந்து விடுகிறது; சார்ந்து விடுகிறது.

ஒரு மனிதரை இயக்க; ஒன்றை நோக்கிச் செயல்படுத்த உளவியலில் இரண்டு வழிமுறைகள் உண்டு. ஆசையைத் தூண்டி நல்வழிப் படுத்துவது ஒன்று. அச்சுறுத்தித் தீயவழியில் செல்வதைத் தடுப்பது இன்னொன்று.

நம் முன்னோர்கள் இந்த இரண்டு வழிமுறைகளையும் கையாண்டு சமூக வாழ்வைச் சீர்படுத்த முயன்றார்கள். சமய அன்பர்களின் நோக்கமும் வள்ளுவர் சொன்னது போல், நாள்தோறும் அறம் செய்க என்பதுதான். அப்படி செய்யாவிட்டால் என்ன என்று எதிர்க் கேள்வி மக்கள் இடையே எழும். அறம் செய்வதை அலட்சியமாக அவர்கள் நோக்கவும் கூடும். 

ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. 

இந்த நிலையில்தான் அறம் செய்தால் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். இறைவனிடம் அடைக்கலம் ஆகலாம் போன்ற ஆசை வார்த்தைகள் கூறி, அறம் செய்யவும்; ஒழுக்கமாக இருக்கவும் ஊக்குவித்தார்கள். அறம் செய்யாமல் போய்விட்டால் நரகத்தில் எண்ணெய்ச் சட்டியில் வறுபடுவாய் எனவும் அச்சுறுத்தினார்கள்; 

ஆனால் இன்றைய அறிவியல்படி சிந்தித்துப் பார்த்தால் அவற்றில் எதுவும் உண்மை இல்லை. கடந்த காலங்களைவிட இன்று மக்கள் மிகுந்த அறிவைப் பெற்று இருக்கிறார்கள். நிறைய சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. 

இந்நிலையில்... ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. அந்த முறையில் திருக்குறளுக்கு உரை காண்பதே சரி என நினைக்கிறேன். அப்படியானால், வழி அடைக்கும் கல் என்பதற்குப் பிறப்பைத் தடுக்கும் கல் என்று பொருள் கொள்ள முடியாது. 

வழக்கறிஞர் கு.ச. ஆனந்தன் அவர்கள், வழி அடைக்கும் கல் என்ற சொல் தொடருக்கு வழிஅமைக்கும் கல் என்று பாடம் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஓலைச்சுவடிகளில் காலம் காலமாய் எழுதி வருகிற பொழுது... படி எடுக்கின்ற பொழுது அவ்வாறு நேரிடவும் வாய்ப்பு உண்டு. தமிழ்த்தென்றல் திரு வி கலியாண சுந்தரம் அவர்களும் வழி அமைக்கும் கல் என்ற பொருளில்தான் இந்தக் குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். அது, அறிவியலுக்கு ஏற்றதாகவும் அமைந்துவிடுகிறது.

புலவர் குழந்தை போன்றோர் வாழ்நாளில் வரும் தீமைகளைத் தடுக்கும் கல் என்று பொருள் கூறி இருக்கின்றார்கள். அதனை ஒட்டியே நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும் உரை எழுதி உள்ளார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல், வழி அடைக்கும் கல் என்பதை நேரடியாகப் பார்த்தால், ஒரு வழியை மூடும் கல் என்றே பொருள் தருகிறது. வாழ்நாள் வழி என்பதைப் பிறவி எடுத்தலுக்கான காரணம் எனச் சமயக் கருத்தோடு பொருத்திப் பொருள்கொள்வது எளிதாக இருக்கிறது. அப்படி இருக்க, இவர்கள் ஏன், தீமை வரும் வழி என்று பொருள் கொள்கிறார்கள்? தீமை என்ற சொல்லாவது அந்தக் குறளில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 

குறளில் வரும் இரு சொற்களுக்கு இடையில் நுழைந்து ஒரு பொருளைத் தருவித்தோ ஊகித்தோ உரை எழுதுவது ஒரு முறை.  மேலும் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தமிழில் உண்டு. ஏழு சீர்கள் மட்டுமே கொண்ட செய்யுள். அதனால் சீர்களுக்கு இடையே சொல்லும் பொருளும் தொக்கிவர வாய்ப்பு உண்டு. குறளின் பொருளை நிகழ்காலத்துக்குப் பொருத்திப் பார்ப்பது தேவை. இந்தக் காரணங்களால்தாம் திருக்குறளுக்குப் புதுப்புது உரை எழுத முடிகிறது. அதற்குத் திருக்குறளும் இசைகிறது. 

அடைக்கும் என்பதற்கு மூடுதல் என்பதோடு துார்த்தல் என்ற பொருளும் உண்டு அடைக்கும் என்ற சொல்லை அப்படியே எடுத்துக் கொண்டு, வேறு வகையில் பொருள் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. 

ஒவ்வொரு பாதையும் கல்பரப்பி அதாவது கல்அடைத்து உருவாக்கப்படுகிறது. நாள்தோறும் அறம் செய்பவர்களின் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்து வாழ்க்கைப் பயணத்தைச் சுகம் ஆக்குவதுதான் அடைக்கும் கல் என்று பொருள்கொள்ள முடிகிறது. வாழ்க்கைப் பாதையில் எதிர்கொள்ளும் துயரப் பள்ளங்களைத் துார்ப்பதையும் அடைக்கும் கல் என்பது   உணர்த்தும்.                   

இந்தக் கருத்துக்கு ஆதரவாகக் கலைஞர் கருணாநிதியின் உரையும் அமைந்து இருக்கிறது. அவருடைய உரை இதுதான் : 

“பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.“

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இந்த உரை ஏற்கத் தக்கது. குறளின் சொற்களை அப்படியே எடுத்துக் கொண்டு, பொருத்தமான உரை எழுதி இருக்கிறார். 

குறளில் வரும் வாழ்நாள் என்ற சொல்லை ஆராய்ந்து பார்ப்போம். இன்பம் - துன்பம், நல்வினை - தீவினை, நன்மை - தீமை என்பன போல்தாம் வாழ்நாள் - வீழ்நாள் ஆகியவை. இவை, எதிர்எதிர்த் தன்மைகள் கொண்டவை.

வீழ்நாள் என்பது வீணான நாள் அல்லது வீழ்ச்சியான நாள் எனப் பொருள் தரும். வாழ்நாள் என்பது பயனுடைய நாள் அல்லது வாழ்ந்து காட்டும் நாள் எனப் பொருள் தரும். இங்கே வாழ்நாளைத்தான் உயர்த்திப் பிடிக்கிறார் வள்ளுவர். எனவே வாழ்நாளைத் தடுக்கச் சொல்லவில்லை. அறம் செய்து ஒவ்வொரு நாளையும் பயனுடையதாக ஆக்கி நீடு வாழ்க என்றுதான் வாழ்த்தி இருக்கிறார். 

மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

திருக்குறளுக்கு இன்றைய வாழ் நிலையில் என்னவாக பொருள் இருக்க முடியும் என்று சிந்திப்பதே நிகழ்காலத் தேவையாகும்.   இந்தக் குறளுக்கு இப்படி எளிதாகப் பொருள் கொள்ளலாம்.

நாள் தவறாமல் நன்மை செய்து வந்தால்… அதுவே, வாழ்க்கைப் பாதையில் படிக்கல் ஆகும்.


                                                    -கோ. மன்றவாணன்


நன்றி

கணையாழி மாத இதழ்

நவம்பர், 2024








Thursday, 7 November 2024

ஞாலத்தைவிடப் பெரியது எது?


 

ஞாலத்தைவிடப் பெரியது எது?

கோ. மன்றவாணன்


பின்இரவு நேரம். சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. கோழிக் கோட்டில் இருந்து மஞ்ஞேரி நோக்கி அந்தப் புதிய மகிழுந்து பறக்கிறது. பின்னிருந்து துரத்தும் நிலாவால் அந்தக் காரை முந்த முடியவில்லை. இன்னும் வேகத்தை அதிகப் படுத்துவதற்காக உடலை அசைத்து நேராக அமர்கிறார் அதன் ஓட்டுநர். அதே நேரத்தில் திடீரெனச் சாலையின் குறுக்கே கை அசைத்தபடி ஒரு முதியவர் ஓடி வருகிறார்.

மின்னல் எனத் திசைமாற்றியை இடது பக்கம் ஒடித்து, வலது பக்கம் திருப்பி நிறுத்துக் கட்டையை மிதிக்கிறார், கார் குலுங்கி நிற்கிறது. வண்டியைப் பின் நகர்த்தி நிறுத்துகிறார்.

அந்த முதியவரைப் பாதுகாத்து விட்டோம் என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், திடீரெனக் குறுக்கே வந்த அவர்மீது கோபம் எரிமலையாய்க் கனல்கிறது. முதியவர் ஓட்டுநர் முன் வந்து நிற்கிறார். அப்போதுதான் சாலையின் ஓரம் கந்தல் துணிபோல ஒரு பெண் படுத்தபடியும் துடித்தபடியும் இருப்பதைப் பார்க்கிறார் அந்த ஓட்டுநர்.

எழுபது வயது மதிக்கத் தக்க அந்தப் பெரியவர், கை கூப்பியவாறு குரல் நடுங்கச் சொல்கிறார்.

“பாப்பாவுக்குப் பிரசவ வலி அதிகமாயிடுச்சு. ஆஸ்பத்திரிக்குப் போகணும். நீங்கதான் பெரிய மனசு பண்ணி உதவணும்”

அப்போது மணி இரண்டு. வாகனம் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை. அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்த ஓட்டுநர், அந்தப் பெண்ணையும் அந்த முதியவரையும் காரில் ஏற்றிக்கொண்டு முன்னிலும் அதிக வேகமாக மருத்துவ மனைக்கு விரைகிறார். மஞ்ஞேரி அரசு மருத்துவ மனையின் வாசலில் பிரேக்கைப் பிடித்துப் பெரும் உராய்வு ஒலியோடு காரை நிறுத்துகிறார். அந்த அதிர்வைக் கேட்டு மருத்துவ மனை ஊழியர்கள் வேகமாக வருகிறார்கள். அந்தப் பெண்ணைக் கைத்தாங்கலாக மருத்துவ மனைக்கு உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். அவசரப் பணியில் கவனம் செலுத்தியதால், ஓட்டுநரை அவர்கள் பார்க்கவில்லை.

அந்தப் பெண்ணுக்கு வயது பதினெட்டுதான் இருக்கும். முதியவருக்கு அவள் பேத்தியாகத்தான் இருப்பாள்.

ஓர் உயிரைக் காப்பாற்றவும் முடிந்தது; ஓர் உயிரைப் பூமிக்குக் கொண்டுவரவும் முடிந்தது என்று அந்த ஓட்டுநர் மனநிறைவு அடைந்த போது, முதியவர் அருகில் ஓடி வருகிறார்.

“உங்கப் பேரு என்ன?”

“மம்முட்டி”

“என் மன திருப்திக்காக இதை வச்சுக்குங்க” என்று சொல்லிக் கையில் ஒரு சிறு தாளைத் திணித்துவிட்டு மருத்துவ மனைக்குள் சென்று விடுகிறார்.. கைதிறந்து பார்த்தபோது அது இரண்டு ரூபாய்த் தாள்.

மம்முட்டி எனப் பேர் சொன்ன பிறகும்; முகத்தை நேருக்கு நேர் பார்த்த போதும் அந்த முதியவருக்கு அவர் மலையாள சூப்பர் ஸ்டார் என்ற விபரம் தெரியவே இல்லை.

காலத்தில் செய்த அந்த உதவிக்கு, முதியவர் கொடுத்த அந்த இரண்டு ரூபாய் சரியாகி விடுமா? இந்தப் பூமியையே கொடுத்தாலும் ஈடாகி விடுமா?

மும்பை வாங்கணி தொடர்வண்டி நிலையம். ஆறு வயது சிறுவனைக் கையில் பிடித்தபடி நடைமேடையில் கண்பார்வை இல்லாத பெண்ஒருத்தி நடந்து போகிறாள். எதிர்பாராத வகையில் சிறுவன் ரயில் பாதையில் தவறி விழுந்துவிடுகிறான். அப்போதுதான் மின்னல் வேகத் தொடர்வண்டி ஒன்று, நிலையத்தில் நுழைகிறது. சிறுவன் நடைமேடையில் ஏற முயலுகிறான். முடியவில்லை. கண் தெரியாத பெண், நடை மேடையைக் கைகளால் தட்டுத் தடவியபடி அலறுகிறாள்.

அதிவேக ரயில் மிக அருகே வந்துவிட்டது. அங்கே அது நிற்காது. “சிறுவன் உடல் சிதைந்து போகும். உயிர் பிரிந்து போகும்” என்றே நடைமேடையில் உள்ள பயணிகள் அழுகுரல் இடுகின்றனர்.

இருப்புப் பாதைத் துறையில் பணியாற்றும் ஊழியர் மயூர் செல்கா மின்னலைவிட வேகமாக ஓடி வந்து ரயில் பாதையில் குதிக்கிறார். அவரும் சிதைந்துதான் போகப் போகிறார் என்பது உறுதியான நேரம் அது. எப்படியோ சிறுவனை நடைமேடையில் ஏற்றித் தானும் ஏறும் அந்த நொடியின் நுனிப்பொழுதில்… எதுவும் நடவாததுபோல் அதிவேக ரயில் அந்த இடத்தைக் கடந்து போகிறது…

அடுத்த நொடியே உயிர்போகும் நிலையில்… உயிர்காத்த அந்த உதவிக்கு என்ன பரிசு தர முடியும்? என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த ஞாலத்தையே கொடுத்தாலும் அது போதுமா? ஞாலத்தைவிடப் பெரியது என்று புகழ்ந்தால் மனம் சமாதானம் அடையுமா?

இவைபோன்ற நிகழ்வுகள் அரிதாகச் சிலர் வாழ்வில் ஏற்பட்டு இருக்கும். இப்பொழுது உங்களுக்கு வள்ளுவரின் குறள் ஒன்று நினைவுக்கு வருமே…

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

இடர்படும் நேரத்தில் செய்யும் உதவி சிறியதுதான் என்றாலும்… அது, இந்த உலகத்தைவிடப் பெரியது. இவ்வாறுதான் உரை ஆசிரியர்கள் பொருள் உரைத்து உள்ளனர்.

உலகத்தைவிடப் பெரியது என்பதுதான் வள்ளுவரின் எண்ணமா? அதற்குள் ஏதும் நுண்பொருள் வைத்து இருப்பாரா? - என்று என் மனத்துக்குள் நெடுங்காலமாக அலை ஒன்று வந்துவந்து மோதியபடி இருந்தது.

உதவி செய்தல் என்பது ஒரு தன்மை. ஒரு பண்புநலன். அவசர காலத்தில் செய்கிற உதவி என்பது, அரிய பண்புகளிலேயே உயர்ந்த ஓர் உன்னதக் கூறு.

உலகம் என்பதோ மிகப்பெரிய நிலப்பரப்பு.

இப்போது நமக்குள் கேள்வி பிறக்கிறது. அரியதொரு தன்மையையும் பெரியதொரு பரப்பையும் ஒப்பீடு செய்வது சரி ஆகுமா? சமம் ஆகுமா? ஆகாது என்பதே என் கருத்து.

அப்படி ஆனால் அதனை எப்படிப் பொருத்தி நுண்பொருள் காண்பது?

பூமியில் உள்ள செல்வங்களை… வளங்களை எல்லாம் அள்ளிக் கொடுத்தாலும் உற்ற காலத்தில் செய்த உதவிக்கு இணை ஆகாது என்று சொன்னால் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ள முடிகிறது. ஆனால் அவ்வாறு அள்ளித் தர முடியுமா? முடியாத ஒன்றைச் சொல்லி, ஈடு காட்டுவது கவிதைக்கு அழகாக இருக்கலாம். கருத்து ஒப்புமைக்கு ஒத்து வருமா?

நிலத்தின் தன்மை என்ன என்பதை எண்ணித் தொகுத்துப் பாருங்கள்.

தாவரங்களை வளர்க்கிறது. உயிரினங்கள் வாழ உணவு வழங்குகிறது. உயிர்க்காற்றுத் தந்து உயிர் காக்கிறது. வான் அமுதாகிய மழையைத் தேக்கி வைத்துக் குடிநீர் தருகிறது. கனிம வளங்களைக் கொடுத்து உலக வாழ்வை வளப்படுத்துகிறது. இன்னும் பல. இவை யாவும் உலகம் நமக்குச் செய்யும் உதவிகள்.

காலம் உணர்ந்து செய்யும் சிறு உதவியை ஒப்பிடுகையில், ஞாலம் செய்யும் இந்த உதவிகள் மிகமிகச் சிறியவை. எப்படி?

உலகம் நமக்குத் தேவையான போது உதவி செய்யாமல் போகும். தண்ணீரைக் கோடைக் காலத்தில் கொடுக்காமல் போகிறது. மருந்துக்கு உதவும் சில தாவரங்களைத் தேவைப்படும் காலத்தில் தருவது இல்லை. எந்தப் பருவத்தில் எதைக் கொடுக்குமோ அந்தப் பருவத்தில்தான் அதைக் கொடுக்கும். கொடுக்காமலும் போகும்.

தேவைப்படாத காலத்தில் என்ன கொடுத்தாலும் அப்போதைக்கு அது பயனில்லை. தேவையான நேரத்தில் கொடுக்காமல் போனால், அது பெருமையா? அதுதான் மாணப் பெரிதா? இல்லை!

இடர்காலம் உணர்ந்து செய்யும் சிலரின் சிறு உதவிதான், ஞாலம் செய்யும் இயற்கை உதவிகளைவிடப் பெரியது.

இந்த விரிவான கருத்தாடலுக்கு ஆதரவாக நாவலர்                                     இரா. நெடுஞ்செழியனின் கருத்துரை உள்ளது. சுருக்கமாகவும் ஏற்கத் தக்கதாகவும் உள்ளது. அந்த கருத்து உரை இதோ…

பருவம் அல்லாத காலத்தில் உதவி செய்யாத உலகத்தைவிட, காலம் அல்லாத காலத்திலும் உதவி செய்கின்றவன்தான் பெருமையில் மிக்கவன் ஆவான்.

---கோ. மன்றவாணன்

நன்றி : திண்ணை இணைய இதழ்

Wednesday, 30 October 2024

தளை இல்லாத வெண்பாவா…

 

தளை இல்லாத வெண்பாவா…

கோ. மன்றவாணன்

 

மரபு கவிதைகளுக்குத் தலைமை தாங்குவது வெண்பாதான்.

அதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை; அதற்கெனப் பல கட்டுப்பாடுகள் உண்டு; அதற்குள் சிந்தனையை அடக்குவது என்பதும் எளிய செயல் இல்லை; சிமிழுக்குள் சிகரத்தை வைப்பது போன்றது என்றே பலரும் கருதுகிறார்கள்.

பெரும்புலவர்கள் பலரும் வெண்பா எழுத முடியாமல் திணறி இருக்கிறார்கள். புகழ்பெற்ற புலவர்கள் எழுதிய வெண்பாக்களில் தளை தட்டும் இடங்களைச் சுட்டிக் காட்டிப் பேர்வாங்கும் புலவர்களும் உண்டு.

வள்ளுவரின் திருக்குறளில்கூட தளை தட்டுகின்றது எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தமிழ் யாப்புகளில் கடினமானது வெண்பா. அதனால் அதனை வன்பா என்றார்கள். யாப்புகளில் மிக எளிமையானது ஆசிரியப்பா. அதனால் அதை மென்பா என்று சொன்னார்கள்.

பார்க்கப் போனால் வெண்பாவில்தான் புலவர்களும் கவிஞர்களும் அதிகம் விளையாடி இருக்கிறார்கள்.

சித்திரக் கவி என்பது தமிழ்மொழிக்கே உரிய கவிதை அமைப்பு. சித்திரங்களுக்குள் எழுத்துகளைப் பொருத்திக் கவிதை எழுதும் கலை. அத்தகைய. சித்திரக் கவிதைளில் வெண்பாதான் இடம்பெறும்.

என் சிறுவயதில் ரத பந்தனம் என்ற சித்திரக் கவிதையை எழுதி இருக்கிறேன். தேர்ப் படம் இருக்கும். அதில் கட்டங்கள் இருக்கும். அந்தக் கட்டங்களுக்குள் எழுத்துகள் அமைய வேண்டும். எதுகை, மோனை, வெண்டளை உள்ளிட்ட இலக்கணக் கூறுகளும் இருக்க வேண்டும்.

நளவெண்பா எழுதிய புகழேந்தியை, வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தமிழ்க்கவிதை உலகம் இன்றும் புகழ்கிறது.

காளமேகப் புலவரின் சிலேடை வெண்பாக்களை இன்றும் நாம் ரசித்துப் படிக்கிறோம். இன்றைய மேடைப் பேச்சாளர்களும் காளமேகப் புலவரின் வெண்பாக்களைச் சொல்லிக் கைதட்டல் வாங்குகிறார்கள்.

எண்கவனகம், பதின்கவனகம், நுாறு கவனகம் நிகழ்வுகளில் ஒரு கவனம், வெண்பா பாடுவது.

மணிமேகலை வெண்பா என்ற முழுநுாலைப் பாவேந்தர் பாரதிதாசன் எழுதி இருக்கிறார்.

இந்த நுாற்றாண்டிலும் சிலர் வெண்பாவில் காவியம் எழுதி வருகிறார்கள்.

இருபதாம் நுாற்றாண்டில் வெண்பாவுக்கு ஒரு புகழிடத்தை உருவாக்கித் தந்தவர் கவியரசர் கண்ணதாசன். அவருடைய தென்றல் இதழில் வெண்பாப் போட்டி நடத்தினார். தென்றல் இதழில் வெண்பா வந்தது என்றால், அதை எழுதிய கவிஞருக்கு, அது என்றும் வாடாத புகழ்மாலை.

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் வெண்பாக்கள் எழுதி அசத்தி இருக்கிறார். புலவர்களையே வியக்க வைத்த வெண்பாக்கள் அவை. வட்டாரப் பேச்சு வழக்கில் வெண்பாக்களை எழுதினார் ஆகாசம்பட்டு சேசாசலம்.

கரூர் இல. சேதுராமன் என்பவர் கடலுாரில் வாழ்ந்தார். தன்னுடைய நாள்குறிப்பை வெண்பாவில் எழுதி வந்தார். அதனை நான் அருகில் இருந்து பார்த்தவன். இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வெண்பாக்களை எழுதிக் குவித்தார். 1331 குறள்கள் கொண்ட புதுக்குறள் என்ற நுாலையும் வெளியிட்டார்.

காத்தப்பன் என்பவர், ஒரே ஈற்றடி கொண்டு ஐநுாற்றுக்கும் மேற்பட்ட வெண்பாக்களை எழுதித் தனி நுாலாக வெளியிட்டு உள்ளார். இருபத்து ஓராம் நுாற்றாண்டின் வள்ளுவர் எனப் போற்றத் தக்க வகையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குறள் வெண்பாக்களை எழுதி நுாலாக வெளியிட்டு உள்ளார். கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி, பலவகை வெண்பா யாப்புகளில் வெண்பாக்கள் எழுதினார்; வெண்பூக்கள் என்ற பெயரில் நுாலாகவும் வெளியிட்டார்.

வெண்பாவில் தனி நுால்கள் படைத்து வருகிறார்கள் சிலர். முகநுாலில் வெண்பாக்களை எழுதிக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள். வெண்பா இலக்கணத்தை எளிதாகச் சொல்லிக் கொடுக்கும் இணையப் பதி்வுகளும் இருக்கின்றன.

இவர்களைக் கேட்டால் வெண்பா எழுதுவது கடினம் இல்லை என்பார்கள். அவர்கள் அலட்சியமாக எழுதும் போதே அந்த வெண்பாக்கள் தளை தட்டாமல் வந்து அமையும். வெண்பாவும் ஒரு மனப்பழக்கம்.

வெண்பா இலக்கணத்தைச் சரியாகக் கற்றுக் கொள்ளாமல், சிலர் வெண்பாக்கள் எழுதுகிறார்கள். அவர்களில் தமிழ் கற்றவர்களும் உண்டு. அந்த வெண்பாக்களில் தளைகள் தட்டுகின்றன. வெண்பாவின் வடிவம் இருக்கிறதே தவிர,  வெண்டளை என்ற இலக்கணம் அறவே இல்லை.

தளை தளை என்கிறீர்களே…. அந்தத் தளைதான் என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். அந்தத் தளைதான் இன்றைய சில கவிஞர்களுக்குத் தடை.

மா முன் நிறை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்ற யாப்பு இலக்கணப் படி வெண்பாவின் சீர்கள் இருக்க வேண்டும். அதற்கு வெண்தளை அல்லது வெண்டளை என்பார்கள்.

தலை,கால் புரியாமல் சிலர் வெண்பாக்களை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். சற்று இலக்கணம் கற்க முயன்றால் அவர்களும் சரியாகவே  எழுதி விடுவார்கள்.

தளை பற்றித் தெரியாமல் எழுதுகின்ற அந்த வெண்பாக்களில் நல்ல சிந்தனைகள் இருக்கின்றன. அழகான சொல்வளம் மிளிர்கின்றன. வித்தியாசமான வெளிப்பாடுகள் உள்ளன. கவிதையின் எழில் கொஞ்சுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் அந்த வெண்பாக்களைப் புறம் தள்ள மனம் ஒப்பவில்லை.

பழங்காலத்தில் பெரும் புலவர்களில் சிலர், கவிதைகளில் பிழைகள் செய்தனர். அவற்றைத் தமிழ் உலகம் ஒதுக்கித் தள்ளவில்லை. வழுவமைதி என இலக்கணம் வகுத்து ஏற்றுக் கொண்டது.

வெண்பாக்களில் பல வகைகள் உண்டு. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா், நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா என உண்டு. அவற்றிலும் உள்வகைகள் உண்டு. “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்ற பழைய வெண்பாவில் ஒரு சீரைக் காணவில்லை. அதனையும் சவலை வெண்பா எனப் பெயர்சூட்டி ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

காலம் மாற மாற, வெண்பாக்களிலும் வேறு வகைகள் வந்தால் என்ன? அதன்படி, தளை தட்டும் வெண்பாக்களைத் தளையறு வெண்பா என்று சொல்லி நாம் ஏற்றுக் கொள்ளலாம். தளை என்றால் தடை என்ற பொருளும் உண்டு. அந்தத் தடையைச் சற்று நகர்த்தி வைத்து நடந்தால் என்ன?

தளையறு வெண்பா என்றால் அது வெண்பாவின் தலையை அறுப்பது போல் எனக் கொதித்துச் சிலர் சீறிப் பாயலாம். தளையறு வெண்பா என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால், வழுவமைதி போலத் தளைஅமைதி வெண்பா என்று அழைத்துக் கொள்ளுங்கள்.

வெண்பா இலக்கணத்தின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தலாம் என நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுக் காலமாகச் செழித்து வந்த மரபு கவிதை, மெல்ல மெல்ல… இல்லை இல்லை, விரைவாகவே மறைந்து வருகிறது. மரபுக் கவிதையை அடுத்த அடுத்த நுாற்றாண்டுக்கும் அழைத்துச் செல்லத்தான் இந்த இலக்கணத் தளர்வு தேவை என்கிறேன்.

யாப்புக் கட்டுமானத்துக்குள் சொற்களை அடுக்கி விடுவதால் அது கவிதை ஆவதில்லை. அதையும் தாண்டிக் கவிதையின் அழகு ஒளிர வேண்டும்; புதுப்புது உலகின் கதவுகளைத் திறக்க வேண்டும்.

ஆனால் ஓர் அறிவுரை

வெண்பா இலக்கணம் கற்றுக் கொள்வது மிக எளிது. கற்றுக் கொள்ளுங்கள். தளை தட்டாமல் எழுதிப் பாருங்கள்; பழகுங்கள். முடியாத போது மட்டுமே  தளைஅமைதி வெண்பாக்களை எழுதலாம்.

ஆனால் ஈற்றடியில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நாள், மலர், காசு, பிறப்பு என்ற வகையில் கடைசிச் சீர் அமைந்தால் நல்லது. அதுதான் வெண்பாவை அடையாளப் படுத்தும் முகம்.

………………………………

பனி இல்லாத மார்கழியா…

படை இல்லாத மன்னவரா…

தலை இல்லாத பெண்பூவா…

தளை இல்லாத வெண்பாவா…

என்று எங்கோ யாரோ பாடுவது, இங்கு எனக்குக் கேட்கிறது.

 

                                 -கோ. மன்றவாணன்


நன்றி  : திண்ணை இணைய இதழ் 28-10-2024

Friday, 20 September 2024

கற்றவர் அவையில் கல்லாதவர் அரங்கேற்றமா?






கற்றவர் அவையில் 

கல்லாதவர் அரங்கேற்றமா?

கோ. மன்றவாணன்

 

திருக்குறளில் உள்ள கல்லாமை அதிகாரத்தில் ஒரு குறள் :

கல்லா தவரும் நனி நல்லர், கற்றவர்முன்

சொல்லாது இருக்கப் பெறின். 


கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்பதுதான் இந்தக் குறளின் பொருள். பெரும்பாலான உரையாசிரியர்களின் உரையும் இதுதான்.  

கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்றால், கல்லாதவர்கள் கெட்டவர்களா என்றோர் உள் கேள்வி எழுகிறது. கல்லாதவர்களும் என்ற சொல்லில் வருகிற உம்மின் அழுத்தத்தைக் கவனியுங்கள். 

ஒருவர் படிக்கவில்லை என்றால்... கற்கவில்லை என்றால் அவர் கெட்டவராக ஆக முடியுமா? கல்லாதவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள். 

ஒருவர் படித்து இருப்பதனால்... நிறைய கற்று இருப்பதனால், அவர் நல்லவராக ஆகிவிட முடியுமா? கற்றவர்களில் கெட்டவர்களும் இருக்கிறார்கள். 

ஆனால், வள்ளுவரின் மெய்யான எண்ணம் என்ன? 

ஒருவர் நல்லவர் என்பதை எப்படித் தீர்மானிப்பது? ஒருவரை நல்லவர் என்பதற்குப் பல காரணங்களைச் சொல்ல முடியும். பல வகையான பண்புகளைக் கூற முடியும்.  

வாழ்க்கையில் ஒழுக்கமாய் நடத்தல்; பிறருக்குத் தீங்கு செய்யாது இருத்தல் காரணமாக ஒருவரை நல்லவர் என்று கருதுகிறோம். 

பல பண்புகளில் ஏதேனும் ஒரு பண்பில்; பல செயல்களில் ஏதேனும் ஒரு செயலில் ஒருவர் நன்னெறிப் படி நடந்து கொண்டால், அந்தப் பண்பைப் பொருத்தவரையில்; அந்தச் செயலைப் பொருத்தவரையில் அவரை நல்லவர் என்று சொல்லலாம்.  

யார் ஒருவரும் எல்லாப் பண்புகளிலும்; எல்லாச் செயல்களிலும் நன்னெறிப்படி வாழவும் முடியாது அல்லவா! 

அதன்படி, ஒரு துறை சார்ந்த அறிவைக் கற்றவர்கள் கூடும் சபையில், அந்தத் துறை சார்ந்து கல்லாதவர்  பேசாமல் இருந்தால், அந்தச் சமயத்தில் அவர் நல்லவராகவே கருதப்படுவார். தன் அறியாமை வெளிப்படவும் கற்றவரை அவமதித்தும் பேசினால், அவருடைய செயல் அவரைக் கெட்டவராகக் காட்டிவிடும். 

இப்படி... வள்ளுவர் குறளுக்குப் பொருள் கொண்டால், நல்லவர் என்பதான உரை சரிதான். 

நல்லர் என்ற சொல்லுக்கு நல்லவர் என்றும் பொருள் உண்டு. நன்மை அடைந்தவர் என்ற பொருளும் உண்டு.  ஓரிரு உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் நல்லர் என்பதற்கு நன்மை அடைந்தவர் என்றே பொருள் கொள்கின்றனர். அதன்படி மேற்கண்ட குறளுக்கு எவ்வாறு பொருள் சொல்லலாம்? 

கல்லாத ஒருவர் கற்றவர் முன் பேசாமல் அடக்கமாக இருப்பாரே ஆனால் அந்தக் கற்றவர் கற்பிக்கும் பல அறிவார்ந்த கருத்துகளைக் கல்லாதவரும் கேட்டு அறிவு பெற முடியும். இது ஒரு நன்மை. 

மேலும் கற்றவர் முன்னால் கல்லாதவர் பேசுவதன் மூலம் தன் அறியாமையை வெளிக்காட்டிப் பலரின் ஏளனத்துக்கு உள்ளாகலாம்; அவமானத்துக்கு ஆளாகலாம்.  எனவே கற்றவர் முன்னால் கல்லாதவர் பேசாமல் இருந்தாலே ஏளனத்துக்கு உள்ளாகாமலும் அவமானத்துக்கு ஆளாகாமலும் தன்னைக் காத்துக் கொள்ள முடியும். இது இன்னொரு நன்மை. 

ஆக... கற்றுத் தெரிந்தவர்கள் முன்னால் கல்லாதவர்கள் பேசாமல் இருப்பதனால் அவர்களுக்குப் பயன்கள் உண்டு; நன்மைகள் உண்டு என்பதாக அந்தக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம். 

அடுத்து,

நனி நல்லர் என்பதை நனி நல்ல என்று பாடம் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. நனி நல்ல என்பதற்கு மிகவும் நல்லது: மிகவும் நல்லவை எனப் பொருள் கொள்ளவும் முடியும்.  அதன்படி பார்த்தால், கற்றவர் முன்னால் கல்லாதவர் பேசாது இருந்தால், அதுவே மிக நல்லது என்று எளிதாகப் பொருள் வரும். 

சிலர் இப்படிக் கேட்கலாம் : "நல்ல என்பது பெயரெச்சம். நல்ல என்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு பெயர்ச்சொல் எஞ்சி நிற்கிறது. பின்னால் ஒரு சொல் வராமல் நல்ல என்ற சொல் முடிவு பெறாது." 

அவர்களுக்கு நாம் நினைவு ஊட்டுவது இதுதான். நல்ல நல்ல அவை நல்ல நல்ல என்றொரு தொடர், கோளறு பதிகத்தில் வருகிறதே. 

இன்னொரு கேள்வி எழுகிறது. கற்றவர் முன்னால் கல்லாதவர் தன் ஐயப்பாட்டைச் சொல்லிக் கற்றுக் கொள்ளக் கூடாதா? ஐயப்பாட்டை எழுப்புவதற்காகக் கற்றவர் முன் கல்லாதவர் பேசத்தானே வேண்டி இருக்கும்! தெரியாதவர், தெரிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அறிவைத் தேடும் ஒரு முயற்சிதானே அது.  

அப்படி ஐயம் தெளிவதற்காகக் கற்றவரிடத்தில் கல்லாதவர் கேட்டுத் தெரிந்து கொள்ள முயல்வதை வள்ளுவர் என்னும் பேராசிரியர் எதிர்ப்பாரா? 

இதே குறளில் இன்னொன்றையும் நாம் ஆராய வேண்டும்.  

"கற்றவர் முன் சொல்லாது இருத்தல்" என்ற வரியைக் கவனியுங்கள். சொல்லாது இருத்தல் என்று பொதுவாகச் சொல்லுகிறாரே தவிர, எதைச் சொல்லாது இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 

தன் மடத்தனமான கருத்துகளை வலியுறுத்திச் சொல்லாது இருத்தல் வேண்டும் என்பதுதான் "சொல்லாது" என்ற சொல்லின் உள்பொருள் என  அறியலாம்.  மேலும் கல்லாதவர், கற்றுத் தேர்ந்த ஓர் அறிஞரை அவமானப்படுத்தும் விதமாக,  எதையும் சொல்லக்கூடாது என்றும் ஊகிக்கலாம். 

இதனால்தான் வள்ளலார் மனம் நொந்து நொந்து பாடி இருக்கிறாரோ....  

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ என வரும் அந்தப் பாட்டில் உள்ள சில வரிகள்.... வள்ளுவர் குறளுக்குப் பொருள் கூறும் வரிகளாக உள்ளன. அவை வருமாறு: 

கற்றவர் மனத்தைக் கடுகடுத்தேனோ... 

பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ.... 

மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில், அந்தக் குறளுக்குச் சுருக்கமாகவும் சரியாகவும் பொருள் சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்.  

கற்றவர் முன்னால் கல்லாதவர் தன் மடத்தனமான கருத்துகளைப் பேசாது இருத்தல் நல்லது. 

இந்தக் குறளை நேரடியாகப் பொருள் கொண்டு, கல்லாதவர்கள் சார்பில் வள்ளுவரைக் குற்றம் சுமத்தினால், அதில் துளி அளவும் நியாயம் கிடையாது.  

கல்லாதவரைத் தாழ்த்திச் சொல்வதன் மூலம், யார் ஒருவரும் கல்லாதவராக இருக்கக் கூடாது என வலியுறுத்தவே, கல்லாமை என்னும் அதிகாரத்தை வள்ளுவர் எழுதி இருக்கிறார். 

கற்றவர்கள் பங்கேற்கும் ஆய்வு அரங்கில், கல்லாத ஒருவரையும்  ஆய்வுரை நிகழ்த்தச் சொன்னால் எப்படி இருக்கும்? என்ன நடக்கும்?

 

கோ. மன்றவாணன் 

நன்றி : திண்ணை, 15-09-2024