கவிஞர் பழ. ஆறுமுகம் அவர்களுக்குப்
பாராட்டு உரை
சிலருக்கு உணவுகூடத் தேவை இல்லை. கவிதை எழுதிப்
பசியை மறந்துவிடுவார்கள்.
சிலருக்குக் காற்றுகூடத் தேவை இல்லை, கவிதைப்
புத்தகம் இருந்தால் போதும். அதையே (சு)வாசித்துக் கொள்வார்கள்.
அந்தச் சிலரில் ஒருவர்தான் பழ. ஆறுமுகம்.
உயிரும் உடலும் சேர்ந்து இருப்பது இயற்கை.
கவிதையும் உடம்பும் சேர்ந்த அதிசயம் பழ. ஆறுமுகம்.
பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால்
கவிதையும் ஆறுமுகமும் என்று சிவன் சிவாஜியே வந்து சாட்சி சொல்லிவிடுவார்.
இப்படிக் கவிதைக்காக வாழும்.... கவிதையால்
வாழும் பழ. ஆறுமுகம் அவர்கள் எழுதி உள்ள “பாட்டருவி” என்ற கவிதை நூலைப் படித்தேன்.
மெய்யாகவே தமிழ் அருவியில் குளித்து மகிழ்ந்தது போல் மனம் குளிர்ந்தது.
உவமைக் கவிஞர் சுரதா, புதுக்கவிஞர் மு. மேத்தா,
முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி போன்ற கவி ஆளுமைகளின்
தலைமையில் கவி பாடி, புகழ் சூடி உயர்ந்து நிற்பவர் பழ.ஆறுமுகம்.
ஒரு கவிதையில்....
செருப்புத் தைக்கும் தொழிலாளரின் வறுமை வாழ்வை
விளக்குகிறார். அவருக்கு என்ன வருவாய் கிடைக்கும் என்றால், “விழிவடிக்கும் கண்ணீரே
வருவாய்.” என்கிறார்.
அதே கவிதையில்,
ஓலையிலே
மனுஎழுதிக் கொடுத்த போதும்
ஒருபயனும்
இருந்ததில்லை; ஓட்டை வீழ்ந்த
சேலையினால் சுவர்எழுப்பிச் சேர்ந்து வாழ்வோம்!
சீலைகூட உடுக்காத குழந்தை ஆவோம்! என்று
ஏழைகளின் வாழ்வைப் படம் பிடித்துச் சொல்லி இருக்கிறார்.
ஒருவர்
கவிஞர் என்றால், அவருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணம், கருணை. அது நிறையவே இருக்கிறது பழ. ஆறுமுகம் அவர்களிடம்.
அதனால்தான் அவர் கவிதைகளில் மனிதம் ஆராதிக்கப் படுகிறது.
இந்த நூலைப் படிப்பதற்கு முன் அறிந்தேன், இவர் பழ. ஆறுமுகம் என்று.
படித்த பிறகு உணர்ந்தேன், இவர் தமிழின் நூறுமுகம் என்று!
பாட்டருவி நூலைப் படியுங்கள். உங்கள் பாராட்டைப் பதுக்கி வைக்காமல் பழ. ஆறுமுகம் அவர்களிடம் சொல்லுங்கள். பாராட்டு ஒன்றுதானே கவிஞன் சேர்த்து வைக்கும் சொத்து,சுகம்!
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment