உருப்பளிங்கு
-கோ. மன்றவாணன்
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள்இங்கு வாரா(து) இடர்.
இது, சரசுவதி அந்தாதியில் வரும் காப்புச் செய்யுள். இதில் வரும் உருப்பளிங்கு என்ற சொல்லைப் பார்த்து வியக்கிறேன்.
உருவத்தைக் காட்டும் கண்ணாடி போல், கலைமகள் மேனி இருப்பதாகக்கம்பர் சொல்கிறார். இதை எதிரொலிப்பதுபோல் திரைப்பாடல் ஒன்றும் உண்டு.
‘படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்’ என அந்தப்பாடல் தொடங்கும். அதில் ‘அந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா?இல்லை, உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா?’ என்று கவிஞர் கேட்டு இருப்பார்.
உருவத்தைக் காட்டும் பொருள் வள்ளுவர் காலத்திலும் உண்டு. பொதுவாக அதற்குப் பளிங்கு என்று பெயர். அதனால்தான் அவர் “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” என்ற திருக்குறளை எழுதி உள்ளார். .
நாம் பொதுவாகச் சொல்லும் கண்ணாடி என்பதில் முகம் பார்க்கிறோம். ஆடி என்பதுதான் பொதுச்சொல். அந்தச் சொல்லில் முன் ஒட்டுச் சேர்த்துக் கண்ணாடி என்றும், மூக்குக் கண்ணாடி என்றும், முகம் பார்க்கும் கண்ணாடி என்றும் பலவாறு வேறுபடுத்தி அழைக்கிறோம்.
பின்புறத்தில் வேதிப்பொருள் பூசப்பட்ட ஆடியை முகம் பார்க்கும் கண்ணாடி என்று சொல்கிறோம். அதைத்தான் ஆங்கிலத்தில் Mirror என்கிறார்கள். ஒளிபுகும் ஆடியை, அதாவது, தெள்ளிய (transparent) ஆடியை Glass என்று சொல்கிறார்கள்.
Mirror என்பதற்கும் Glass என்பதற்கும் சேர்த்தே நாம் கண்ணாடி என்ற சொல்லைப் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். பல காலமாகப் புழக்கத்தில் வந்துவிட்டதால் அவ்வாறே பயன்படுத்தலாம்.
கண்ணாடி என்ற சொல், கண்ணுக்கு அணியும் ஆடி என்றும், கண்ணால் காணும் ஆடி என்றும், கண்ணைக் காட்டும் ஆடி என்றும் விரிந்து பொருள்கள் தரும். உருவத்தைக் காட்டும் ஆடி என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.
முகம் பார்க்கும் ஆடியை அல்லது உருவத்தைக் காட்டும் ஆடியைக் குறிப்பதற்கு மிகவும் பொருத்தமாக உருப்பளிங்கு என்ற சொல் உள்ளது.
அதனால்தான் கம்பனைச் சொல்கடல் என்று சொல்கிறார்களோ...
No comments:
Post a Comment