Saturday, 4 June 2022

மனத்தை வெளுக்கும் மருந்து




மனத்தை வெளுக்கும் மருந்து

கோ. மன்றவாணன்

யாப்பு இலக்கணத்தில் மணிமுடியாக ஒளிர்வது வெண்பா. அதில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா போன்ற வகைகளும் உண்டு. குறிப்பாக நேரிசை வெண்பாதான் பெரிதும் கோலோச்சி வந்துள்ளது.

வெண்பா பாடுவது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தொடக்கத்தில் எழுதும் போது தளை பார்த்து எழுத வேண்டி இருக்கலாம். எழுத எழுத இயல்பாகவே தளை தட்டாமல் வெண்பா தானாகவே வரும். தேனாகவே சுவை தரும்.

திரைப்பட நடிகரும் உரையாடல் எழுத்தாளருமான கிரேசி மோகன் பொறியியல் படித்தவர். மிக எளிமையாக இனிமையாக வெண்பாக்களை எழுதிப் பலரையும் கவர்ந்தார். பேச்சு வழக்கில் வெண்பாக்களை எழுதிப் பேர் வாங்கினார் ஆகாசம்பட்டு சேசாசலம். வெண்பா எவ்வளவு எளிமையானது இனிமையானது என்பதை மெய்ப்பித்தவர்கள் இவர்கள்.

நளவெண்பா எழுதியவரை வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தமிழ் இலக்கிய உலகம் இன்றும் புகழ்ந்து கொண்டாடுகிறது. நம் காலத்தில் பேராசிரியர் சுப்புராமன் என்பவர் அறிவியல் விதிகளை வெண்பாவில் எழுதி அசத்தி இருக்கிறார்.

அந்த வகையில் கடலூர் மண்ணுக்கும் வெண்பாவுக்கும் அண்மைக் கால வரலாறுகள் சில உண்டு.

கரூரில் பிறந்து இருந்தாலும் கடலூரில் வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் கரூர் சேதுராமன். திருக்குறள் போலப் புதுக்குறள் என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதில் திருக்குறளை மிஞ்ச வேண்டும் என்பதற்காக 1331 குறள்களை எழுதி உள்ளார். தன்னுடைய நாள்குறிப்புகளை வாழ்வின் இறுதிவரை வெண்பாவில் எழுதி வந்தார். அவ்வாறு எழுதிக் குவித்தவை பல்லாயிரம் வெண்பாக்கள்.

நாட்டரசன் கோட்டையில் பிறந்தாலும் கடலூரில் வாழ்ந்து தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வருபவர் கவிஞர் க. காத்தப்பன் ஆவார். இவரும் 3333 குறள்களைக் கொண்ட காத்தப்பர் குறள் என்ற நூலை வெளியிட்டு உள்ளார். ஏராளமான வெண்பாக்களை எழுதி உள்ளார். பல்வேறு இதழ்கள் தந்த ஈற்றடிகளுக்கு இவர் எழுதிய வெண்பாக்கள் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வெண்பா ஐயாயிரம் என்றொரு நூலையும் வெளியிட உள்ளார்.

‘கண்ணுடைய நாயகியாம் காண்’ என்ற ஒரே ஈற்றடி கொண்டு 4000 நேரிசை வெண்பாக்கள் எழுதி இருக்கிறார். இன்னும் எழுதுவார் என்று நினைக்கிறேன். ஒரே ஈற்றடிக்கு ஏற்ப இத்தனை பாக்களுக்கும் எப்படி இவரால் எதுகை அமைக்க முடிந்தது என்று வியக்காமல் இருக்க முடியாது. இந்த அருஞ்செயலை முறியடிக்க இனி யாராலும் முடியாது.

புதுவை மாநிலம்  கலிதீர்த்தாள் குப்பம் கிராமத்தில் பிறந்து இருந்தாலும் கடலூரில் வாழ்ந்து கவிதைத் தொண்டு ஆற்றியவர் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி. வெண்பூக்கள் என்ற தலைப்பில் ஓர் அரிய நூலைப் படைத்து உள்ளார். எத்தனை வகை வெண்பாக்கள் இருக்கின்றனவோ அத்தனை வகையிலும் எழுதி இருக்கிறார். நூலாக ஆவதற்கு முன்பு, சங்கப் பலகை என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்தினார். வெண்பூக்களில் அதாவது வெண்பாக்களில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சங்கப் பலகையில் பேசச் செய்தார். தமிழ் அறிஞர்கள் சொன்ன குறைகளை நீக்கியும் அறிவுரைகளைப் பின்பற்றியும் வெண்பூக்களை வெளியிட்டார். சங்க(க்) காலத்தில் இப்படித்தான் புலவர்கள் கூடிப் பாடல்களின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து உள்ளனர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். சமுத்திரம் என்ற சமற்கிருதச் சொல்லுக்கு உரிய தமிழ்ச்சொல்லான கடலைக் குறிக்கும் கடலூரில் வாழ்ந்தார். இங்குதான் பெரும்பாலான நூல்களை எழுதினார். அந்த நூல்களில் ஒன்றுதான் உலகியல் நூறு. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

மேற்சொன்ன கவிஞர்கள் வரிசையில் கடலூர் மண்ணில் பிறந்த தமிழ் இயலன் அவர்களும் வந்து சேர்கிறார். இயற்பெயர் தனசேகரன் என்றாலும் நாள்தோறும் தமிழ்ச்செல்வம் சேர்க்கும் தமிழ்சேகரன் இவர்.

கொரொனா காலத்தில் உலகம் முடங்கிப் போனது. ஆனால் இவர் முடங்கவில்லை. முன்னிலும் சிறந்து செயல்பட்டார். வலையரங்கு வழியாக நாள்தோறும் தமிழ் சார்ந்த கூட்டங்களை நடத்தினார். நடத்தியும் வருகிறார். இவர் நடத்தும் தமிழ்நிகழ்வுகள், ஆயிரத்தைத் தொட உள்ளன.

இவர் தமிழ்ப்பணி செய்யாத நாளில்லை. இவர்போல் தமிழ்ப்பணி செய்ய ஆளில்லை என்று சான்று அளிக்கலாம்.

தமிழுக்காக வாழும் இவருக்குத் தமிழக அரசு விருது அளிக்கும் நாள் விரைவில் வரும். தமிழுக்கான உயர் அமைப்புகளில்  தலைமை தாங்கும் காலமும் வரும்.

இவர் எழுதி வெளியிட்டு உள்ள “நண்பா உனக்கொரு வெண்பா” என்ற நூல் தமிழ் அன்பர்கள் இடையே பெரும் அளவில் பேசு பொருளாக உள்ளது. அந்நூல் குறித்து என்னுள் எழும் கருத்துகளை இங்கே பதிவிடுகிறேன்.

‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்பில் நாள் ஒன்றுக்கு ஒரு வெண்பா” என்ற கணக்கில் நூறு நாள்களில் நூறு வெண்பாக்களை எழுதி முடித்துள்ளார். அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டு உள்ளார். இப்படி நூல் எழுதுகிற போது கடவுள் வாழ்த்தாக ஒரு பாடலைச் சேர்த்து, நூற்று ஒரு பாடல்களாக வெளியிடுவது முற்காலப் புலவர்களின் வழக்கம். தேவை அற்ற அந்த வழக்கத்தைத் தவிர்த்து உள்ளார். முதல் பாடலில் உலகம் என்ற சொல்லை இடம்பெற வைப்பதும் பழங்கால வழக்கம். அதனையும் விலக்கி உள்ளார்.

முதல் வெண்பாவிலேயே தமிழைப் பாடுகிறார். தமிழை வாய்மொழியாகப் பார்க்காமல் வாழ்வியலாகப் பார்க்கிறார். வாழ்ந்தும் காட்டுகிறார். வாழ வழியும் காட்டுகிறார். தமிழ் உயர, தமிழன் உயர்வான் என்ற பாவாணர் கருத்து இங்கே நினைவுக்கு வருகிறது.

நூலில் நூறு வெண்பாக்கள் உள்ளன. அதனால் ‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்புப் பொருத்தம் உடையதா எனச் சிலர் கேட்கக் கூடும். முகநூல், வினவி ஊடாக ஒவ்வொரு நாளும் ஒரு வெண்பா எழுதி இருக்கிறார். நண்பருக்கு நாளும் ஒரு வெண்பா என்று தொடர்ந்து எழுதி வந்ததால், இந்தத் தலைப்புப் பொருத்தம் உடையதுதான். தென்கச்சி சாமிநாதன் ‘இன்று ஒரு தகவல்’ எனப் பேசி வந்தார். நூலாகும் போது அதில் பல தகவல்கள் இருந்தாலும் ‘இன்று ஒரு தகவல்’ என்ற தலைப்பில்தான் வெளியானது. ‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்பில் உள்ள எதுகை எடுப்பாகவும் சிறப்பாகவும் உள்ளது. தலைப்புக்கு ஒரு கவர்ச்சியையும் தருகிறது.

தன்முன்னேற்ற வாழ்க்கைக்கும் சமூக மேன்மைக்கும் தமிழ் உயர்வுக்கும் பயன்படும் கருத்துகளை நண்பருக்குச் சொல்லும் வகையில் வெண்பாக்களை அமைத்து இருக்கிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும் போது, நம் வாழ்வில் சந்தித்தவை நினைவுக்கு வரும். நம்மைச் சரிசெய்து கொள்ள ஊக்கம் தரும்.

எப்போதும் நேர்ப்பாங்காகச் சிந்திப்பவர் தமிழ் இயலன். அவரின் முன்னேற்றத்திற்கு இதுவே அடிப்படை என்று கருதுகிறேன். மென்போக்குக் கொண்டவர் இவர் என்றாலும் தமிழுக்குத் தீங்கு வருகுது என்றால் போர்வாளைத் தூக்கிவிடுகிறார்.

வீட்டுப் பணியில் இருவரும் என்ற தலைப்பில் ஒரு வெண்பா இருக்கிறது. அதை ஏற்று நடந்தால் போதும். இல்வாழ்க்கை நல்வாழ்க்கை ஆகும். அந்த வெண்பா இது.  

ஆக்கிடும் வேலைகள் அன்புடன் செய்திட;

தேக்கிய குப்பை பெருக்கிட; – ஊக்கமாய்த்

தூக்கிப் பிடித்திட; தாய்மையைப் போற்றிட

வாக்குரைக்கும் ஆண்களுக்கென் வாக்கு.

ஒரு நூலோ ஒரு கவிதையோ படித்தால் நம்முள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இந்த வெண்பா படித்தேன். அந்த நாளில் இருந்து வீட்டு வேலைகளில் நானும் சமப்பங்கு வகிக்கிறேன். சில நாள்களில் முழுப்பங்கும் ஏற்கிறேன். இது இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். துடைப்பம் ஏந்திக் குப்பையை அகற்றுவது பெண்களுக்கே உரியது அன்று. அது ஆண்களுக்கும் உரியது என்பதையும் உணர்த்துகிறார். ‘ஏணை அசைத்தலும் கூடும்; அது யார் அசைத்தாலும் ஆடும்’ என்ற பாவேந்தர் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

சாலை ஓரத்து ஏழை வணிகர்களிடம் பேரங்கள் பேசாதே என்று நண்பருக்கு அறிவுறுத்துகிறார். பெரும் வணிக வளாகங்களில் பேரம் பேசினால் மதிப்புக் குறைவு என்று நினைப்பவர்கள், வீதி ஓரத்துப் ஏழைப் பாட்டியிடம் அடாவடி பேரம் பேசுவது சரிதானா முறைதானா என்று ஏழை வணிகர்களுக்காகக் குரல் எழுப்புகிறார். அந்த வெண்பாவைப் படித்த பிறகு அன்றாட வாழ்வில் தத்தளிக்கும் ஏழை வணிகர்களிடம் பேரம் பேச நா எழாது.

மனித இலக்கண வழுவாகத் திருநர்களைக் கருதக் கூடாது. அவர்களை மனித இலக்கண வகையாக அறிய வேண்டும். புறத்தினர் மட்டும் அல்ல, பெற்றோரே மூன்றாம் பாலினரை ஒதுக்குகின்றனர். அந்நிலை மாற வேண்டும்.  ஆண்பெண் சமன்மையை உடலிலேயே உயர்த்திப் பிடிக்கும் அவர்களுக்கு நட்பைத் தரவேண்டும்... கல்வியைத் தரவேண்டும் என்கிறார்.

மனித நேயத்தையுத் தாண்டி உயிர்நேயத்தை வளர்க்கும் நோக்கில் ‘சிற்றுயிர் ஓம்பு’ என்ற வெண்பாவைப் படைத்து இருக்கிறார். இந்த வெண்பாவுக்குப் பொருத்தமாகவே நூலின் முகப்பு ஓவியம் உள்ளது. இந்த உலகம் மனிதருக்கு மட்டும் சொந்தம் இல்லை. செடி கொடிகளுக்கும் சொந்தம். சின்ன சின்ன உயிரினங்களுக்கும் சொந்தம். தமிழ் இயலன் சொல்லும் உயிர்நேயத்தை உள்வாங்கி நடந்தால் உலகம் நன்மை அடையலாம்.

ஒரு நூலகம் போல நம் மூளை அறிவு நிரம்பி இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு வெண்பா உண்டு. அப்படி இருந்தால் எந்தத் தேர்விலும் எந்த நேர்விலும் நமக்கு வெற்றி உண்டு. நாளை உலகை ஆளப் போகும் இன்றைய மாணவர்களுக்கான அறிவுரை இது. 

அடுக்கிய நூல்கள் அறிவுதரல் போலச்

சொடுக்கினால் மூளையது செய்திதர வேண்டும்

நடுக்கமிலா அப்பயிற்சி நாம்பெற்றுச் சொல்வோம்

எடுத்ததெலாம் வெற்றியே என்று


வெற்றிச் சூத்திரத்தை வெண்பாவில் வடிக்கிறார் இப்படி : 

உன்னால் முடியும் உயர்கனவே நீபெறுவாய்

உன்கனவை நெஞ்சில் உரமேற்று! – பின்னர்த்

தொடர்செயலால் பெற்றிடலாம் தொய்விலா வெற்றி

தடம்பதித்து வானம் தொடு.

உழவன் உழைப்பில் அழகாகிறது இந்த உலகு என்று உணர்த்துகிறது இந்த வெண்பா. 

உணர்ந்தே அளவாய் உணவைச் சுருக்கி

உணவே இலார்க்கென உண்ணக் கொடுக்கும்

உழவன் உழைப்பே உலகென்(று) உணரும்

அழகியலில் வாழ்கிறது அன்பு.

வெண்பாக்களில் பல சித்து வேலைகள் செய்து அசத்தி இருக்கிறார்கள் நம் புலவர்கள்; தமிழை உசத்தி இருக்கி்றார்கள் நம் கவிஞர்கள். இவரும் பதினைந்து சீர்களிலும் ஒரே எதுகை வர ஒரு வெண்பா எழுதி இருக்கிறார். அருணகிரிநாதர் சந்தம்போல் ஓசை நயம் துள்ளுகிறது. உள்ளத்தை அள்ளுகிறது. தமிழ் இயலன் அவர்களின்  வெண்பாத் திறனுக்கு இது ஓர் எடுத்துக் காட்டு. சந்தம் துள்ளும் அந்த வெண்பா இதுதான்.

             பெற்றாரும் உற்றாரும் பெற்றளிக்கும் பற்றுடையார்

கற்றோரின் சொற்றிறனும் குற்றமிலா நற்றுணையார்

சுற்றத்தால் உற்றிசைந்து சுற்றிடுவார் வெற்றியைத்தான்

முற்றாகப் பெற்றிடுவார் மற்று.

ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு பேராற்றல் உள்புதைந்து இருக்கும். அந்தத் திறனை ஊக்குவிப்பதும் பழக்குவதும் நம் கடமை. அவ்வாறு செய்தால் குழந்தைகள் வெற்றி பெறுவார்கள் என்று வெண்பாவால் அன்பாகச் சொல்கிறார்.

பயணத்திசை என்று ஒரு நூலைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டார் தமிழ்இயலன். அந்த நூலின் அட்டைப் படத்தில் தம் இரு பிள்ளைகளின் படங்களை ஓவியமாக்கி இருந்தார். நண்பா உனக்கொரு வெண்பாவிலும் முல்லை, பண்பு ஆகிய சொற்களின் ஊடாகத் தம் மக்கள் தமிழ்முல்லையையும் பண்பரசனையும் காவியமாக்கி இருக்கிறார். தமிழ்இயலன் அவர்களின் பிள்ளைப் பாசம், சிலப்பதிகாரக் காலத்துக் காவிரி போல் பொங்கிப் பெருகிப் பாய்கிறது. அன்பு பொங்கும் அந்த வெண்பா :

             குழந்தைகளைப் பாராட்டி அன்புசெய்; நாளை

அழகாகப் பூத்திடுமே முல்லை மலர்ச்சோலை!

நண்பர்போல் வைத்திடு நம்பிக்கை; பின்மகிழ்வாய்ப்

பண்புமனம் வீசுவதைப் பார்த்து!

நீடு வாழவும் நிறைவாக வாழவும் உடலையும் உள்ளத்தையும் பயிற்சியின் மூலம் பாதுகாக்க வேண்டும் என்கிறார். அதற்கு ஒரு வெண்பாவை அளிக்கிறார். படியுங்கள்; பயிற்சி செய்யுங்கள்.

             உலவுதல் நற்பயிற்சி உள்மூச்சை நோக்கல்

பலசெயலில் ஒன்றில் பதிந்துமனம் ஒன்றல்

நலமளித்தே வாழ்தல் நடுவுநிலை கொள்ளல்

கலங்கரை ஆக்கிடுமே காண்.

மாற்றுத் திறனாளி என்று குறிப்பிடுகிறோம். இவரோ மாற்றும் திறனாளி என்கிறார். மாற்றும் திறனாளி என்ற தலைப்பே, சிறகு ஏதும் இல்லாமலேயே சிந்தனை உயரத்தை எட்டிப் பிடிக்கிறது.

வெண்பா ஒவ்வொன்றுக்கும் அழகாகத் தலைப்பு இட்டு இருக்கிறார். ஒவ்வொரு வெண்பாவுக்கும் ஒற்றை வரியில் பொருளுரை சொல்வதுபோல் அந்தத் தலைப்புகள் உள்ளன.

ஊழல் என்பது நாட்டின் புற்றுநோய். இதை ஒழிக்க முடியவில்லை. கையூட்டு வாங்கினேன் கைது செய்தார்கள். கையூட்டுக் கொடுத்தேன் விட்டுவிட்டார்கள் என்ற நிலையில்தான் நம் ஊழல் ஒழிப்பு உள்ளது. ஊழல் வழக்கில் இருந்து விடுபெற ஆளும் கட்சிக்குத் தாவுதலும் ஓர் உத்தியாக உள்ளது. “ஊழல் வழக்கில் இருந்து விடுதலை செய்தால் உன் உண்டியலைப் பணத்தால் நிரப்புகிறேன்” என்று திருப்பதி வேங்கடவனிடம் வேண்டுகிறார்கள். கடவுளுக்கே கையூட்டுக் கொடுக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க வேறு வழி தெரியவில்லை கவிஞருக்கு. அதனால் அறம் பாடுகிறார். அந்த வெண்பா இது.

             ஆழ்ந்திட்ட ஊழல்நீ ஆணிவேர் ஆனதனால்

தாழ்ந்துதான் போனதே தாய்நாடு – சூழ்ந்துநின்று

வாழவிடாது ஏழையரை வாட்டி வதைக்கின்ற

ஊழலே நீமறைந்து ஓடு!

தடைச்சட்டம் இருந்தாலும் சாக்கடைக் குழிக்குள் ஏழைத் தோழர்களை இறங்க வைத்து வேலை வாங்குவதை இன்றும் பார்க்கின்றோம். அருவருப்பு, நாற்றம், நோய்த்தொற்று, உயிர்போக்கும் நச்சுஆவி, ஆகியவற்றிற்கு இடையே பணியாற்றுகிறார்கள். அவர்களின் கைகளில் மலர் தரச் சொல்கிறார் நம் மனிதநேயக் கவிஞர். அந்த வெண்பா...

             சாக்கடை அள்ளும் சரிநிகர் தோழனுக்குப்

பூக்கள் கொடுப்பாய்ப் புகழ்சேர்த்து! – தூக்கமிலாத்

தூயோர் பணியினைத் தூற்றியே வாழ்ந்திடும்

தீயோரைத் தீயால் திருத்து!

இந்த வெண்பாவில் சாக்கடை அள்ளும் தோழரைச் சரிநிகர் தோழன் என்று நமக்கு இணையாக உயர்த்திச் சொல்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அழுக்கு, குப்பை, சாக்கடை அள்ளும் அவர்களைத்  தூயோர் என்று போற்றுகிற முரண் அழகையும் கவனியுங்கள். நேர்மையானவர்களைத்தாம் தூயவர்கள் என்கிறோம் நாம். சாக்கடை அள்ளுபவர்களைத் தூயவர்கள் என்கிறார் தமிழ்இயலன்.

என்ன விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நல்லதைச் செய்வோம்; நல்லதைப் பெறுவோம் என்பதை உணர்த்துகிறது இந்த வெண்பா. 

கூடும் மழையைக் குறைசொலக் கூடாதே

வாடும் நிலையும் வருந்தும் நிலையுமே

வந்திடக் காரணம் வாழ்வியல் மாந்தரிங்குத்

தந்ததையே வானம் தரும்.

எல்லாம் இங்கு மாறும். உலகம் ஒவ்வொரு நாளும் புதிதாய் உருமாற்றிக் கொள்ளும். நாமும் நல்ல மாற்றங்களுக்கு ஏற்பப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்று நாள்தோறும் புதுப்பொலிவுடன் இருக்கச் சொல்கிறார் தமிழ் இயலன். இப்படி இயங்குவதுதான் முன்னேற்றம். மாறாமல் இருந்தால் வளர்ச்சி இல்லை. இதை உணர்த்தும் இனிய வெண்பா இது. 

பதிந்திருக்கும் பூமிப் படிமங்கள் மாறும்

குதித்திங்கே ஓடுகிற காட்டாறும் மாறும்

எதிலுமே மாற்றத்தை ஏற்றுத்தான் நாளும்

உதிக்கும் புதிய உலகு

குடி, போதையால் இளைஞர் திரள் பாழ்பட்டுப் போகிறது. போதைப் பழக்கம் இல்லை என்றால் நம் குடும்பங்கள் வளமாக வாழும். போதையை ஒழித்து நல்ல பாதையை அமைக்க வழி சொல்லும் பாடல் இது. 

படித்திட்ட நற்குறளின் பாடம் மறந்தே

குடித்தே அழியுதொரு கூட்டம் – கடிந்தும்

குடியாட்சி செய்யும்  குறைபட்ட நாட்டில்

குடியாட்சி வேண்டுமெனக் கூறு.

குடியாட்சி என்ற சொல்லை இரு பொருள்களில் பயன்படுத்தி இருப்பது சிறப்பு. குடிதான் ஆட்சி செய்கிறது என்ற நிலைமாறிக் குடிமக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார்.

மன்னிப்புக் கேட்பதை மதிப்புக் குறைவாக நினைக்கிறார்கள் பலர். ஆனால் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார் தமிழ் இயலன். 

தவறு நிகழலாம் தன்னல வாழ்வில்

தவறின் பொறுத்தருள வேண்டலே நன்று

வெறுப்பினை நீக்கிட வேறுவழி இல்லை

பொறுத்தருளக் கேட்பதைப் போன்று.

பல்லால் நாய் துரத்துவது போல் சொல்லால் துரத்தும் சிலர் உண்டு. அவர்களிடம் இருந்து விலகிச் செல் என்கிறார் இன்னொரு வெண்பாவில். ஆக... நடைமுறை வாழ்க்கையின் ஊடே, நல்வழி காட்டுகிறார் நம் கவிஞர்.

கோபுரம்போல் உயர்ந்தவர்களாக இருந்தாலும் கோபத்தால் வீழ்ந்தவர்கள் பலர் உண்டு. ஒவ்வொருவர் இடத்திலும் கோபம் இருக்கிறது. அதனை அடக்கி ஆளத் தெரிய வேண்டும். அதற்கான வழி சொல்கிறார். 

சினம்வரும் நேரம் சிறிதாய் அமைதி

உனக்கு வழங்கிடும் உள்ளொளி நன்மை

இனம்போற்றும் அந்த இனிய அமைதி

மனத்தை வெளுக்கும் மருந்து.

ஆக.... நண்பா உனக்கொரு வெண்பா என்ற இந்த நூல் நம் மனத்தைத் தூய்மை செய்கிறது. மன ஆளுமையை வளர்க்கிறது. வாழக் கற்றுத் தருகிறது.

பள்ளியில் அறவுரை வகுப்பு உண்டு. அதுபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவும் அறவுரை வகுப்புதான்.

இந்த நூலுக்கு ஒரே வரியில் மதிப்புரை சொல்லலாம்.  அதற்கும் தமிழ் இயலனின் ஈற்றடி உதவுகிறது. அந்த ஒருவரி மதிப்புரை இதுதான் : “இந்த நூல், மனத்தை வெளுக்கும் மருந்து.”

ஆரஞ்சு பழம் விற்பவர் சுவைத்துப் பார்க்க ஒருசுளை தருவார். அதுபோல்தான் சில வெண்பாக்களை உங்களுக்குச் சொன்னேன். நூறு வெண்பாக்களையும் சுவைக்க நூலைப் படியுங்கள்.

வெண்பா எழுதும் வேறுசிலர், புரியாத புலவர் நடையைப் பயன்படுத்துகிறார்கள். அது இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. தமிழ் இயலன் அவர்களின் மொழியில் புரியாத சொல் ஏதும் இல்லை. அகர முதலியைப் புரட்ட வேண்டியதும் இல்லை. உரைநூல் தேவை இல்லை. 

அனைவருக்கும் புரியும் சொற்கள்.

யாவரும் ஏற்கத் தகுந்த கருத்துகள்.

நடைமுறைப் படுத்தக் கூடிய அறிவுரைகள்.

வானைச் சிமிழுக்குள் வைத்துக் காட்டும் சுருக்கமான கூறுமுறைகள்


இவை எல்லாம் தமிழ் இயலன் அவர்களின் வெண்பாக்களில் உள்ள சிறப்புக் கூறுகள்.


வெண்பாவை இவர் காதலிக்கிறாரா... வெண்பா இவரைக் காதலிக்கிறதா... என்று பிரித்து உணர முடியவில்லை. தலைப்புகளில் கூடத் தளை தட்டவில்லை. சிறு தவறும் தலை நீட்டவில்லை.

வாழ்வியலைச் சொல்லித் தரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய நூல் இது.

பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியப் பட்டப் படிப்புகளில் பாடமாகச் சேர்க்கத் தகுதி வாய்ந்த நூல் இது.

நூலை எழுதிய கவிஞர் தமிழ் இயலன் அவர்களுக்கு வாழ்த்து மாலைகள் நூறு சூட்ட வேண்டும். அச்சாரமாக ஒன்று சூட்டுகிறேன். 

நூறென வெண்பாக்கள் நூல்முழுதும் நூற்றவரே

சாறென நம்தமிழைத் தந்தவரே – ஆறென

ஓடும் கருத்துகளில் உன்மேன்மை நான்அறிந்தேன்

நாடும் உனைப்புகழும் நன்று.  

 

 

 

 

 

1 comment:

  1. முழுமையான மதிப்புரைக்கு நன்றி ஐயா.... நூலின் சிறு பிழைகளையும் மேம்படுத்துதல்களையும் தனியாகச் சுட்டிக் காட்டிய தங்களின் பெருந்தன்மை போற்றுதற்குரியது.. மிக்க நன்றி

    ReplyDelete