Wednesday, 14 October 2020



கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது

கோ. மன்றவாணன்


கள் விகுதி பின்னர் வந்தது. கள் விகுதியை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது. அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இந்த விவாதம் குறித்துக் கொஞ்சம் காண்போமே...

தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் கள் விகுதி இருந்ததா என்றால் இருந்தது என்பதுதான் பதில். அப்படியானால் கள் விகுதி பின்னர் வந்தது என்று எப்படிப் புறந்தள்ள முடியும்?

     முதலில் தொல்காப்பியத்தில் பார்ப்போம்.

     கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே

     கொள்வழி உடைய பலவறி சொற்கே

            - தொல்காப்பியம், சொல்லதிகாரம், பெயரியல் 15

இந்தக் கள் விகுதி அஃறிணைப் பலவின்பால் இயற்பெயர்க்கு வரும் என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் என்று உரைவிளக்கம் தருகின்றனர். ஆகத் தொல்காப்பியர் காலத்தில் கள் விகுதி இருந்துள்ளது.

     கீழ்க்கண்ட குறள்களைக் காண்போம் :


     துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

     மற்றை யவர்கள் தவம் – குறள் 263

 

     வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

     பூரியர்கள் ஆழும் அளறு  - குறள் 919 


     அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

     அவாஉண்டேல் உண்டாம் சிறிது – குறள் 1075 


ஆக இந்த மூன்று குறள்களிலும் கள் விகுதி வந்துள்ளது. 

இக்குறள்களில் முதல் குறளில் உள்ள “மற்றையவர்கள் தவம்” என்பது தவறு. “மற்றையவர்கண் தவம்” என்பதே சரி.  இந்த இரண்டும் “மற்றையவர் கடவம்” என்று புணரும். அந்த “மற்றை யவர்க டவம்” என்பதைத்தான் சொல்பிரித்து எழுதியவர்கள் “மற்றையவர்கள் தவம்” என எழுதிவிட்டனர் என்று கலிபோர்னியாவில் உள்ள பொறியாளரும் புலவருமான செந்தமிழ்ச்சேய் தெரிவிக்கிறார். இது குறித்துக் கள் மயக்கம் என்ற தலைப்பில் அவரொரு கட்டுரை எழுதி உள்ளார். அவர் சொன்னதைக் கேட்டு அந்தக் குறளை விட்டுவிடுகிறேன். ஆனால் அடுத்துவரும் இரு குறள்களில் உள்ள கள் என்பது கள் விகுதிகள்தாம். அவற்றை யாரும் கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபாகக் கொள்ளவில்லை. அந்தக் கால முறைப்படி உயர்திணைச் சொற்களுக்குக் கள் விகுதி வராது. அஃறிணைச் சொற்களுக்கு மட்டும்தாம் கள் விகுதி வரும். அந்த வகையில் பூரியர்கள், கீழ்கள் ஆகிய சொற்கள் உயர்திணையாகிய மக்களைச் சுட்டுகின்றன. ஆனால் வள்ளுவர் ஏன் உயர்திணையில் கள் விகுதியைச் சேர்த்தார் என்ற கேள்வி எழுகிறது? அதற்கும் புலவர் செந்தமிழ்ச்சேய் விளக்கம் அளிக்கிறார். அவர்கள் மக்கள் என்றாலும் அவர்களிடத்தில் உயர்பண்புகள் இல்லாமையால் அஃறிணையாக உணர்த்திக் “கள்” விகுதியைச் சேர்த்து எழுதி உள்ளார் என்பதுதான் அந்த விளக்கம். இவ்வாறு சொற்களில் குறியீட்டுத் தன்மைகளை ஏற்படுத்திப் பொருள் உணர்த்துவது கவிஞர்களுக்கே உரிய தனி அதிகாரம். 

தொல்காப்பியம், திருக்குறள் மட்டுமல்ல. பிற சங்க இலக்கியங்களிலும் கள் விகுதி ஆளப்பட்டுள்ளது. பதிற்றுப் பத்தில் அரண்கள் என்றும் ஐங்குறு நூற்றில் மயில்கள் என்றும் கலித்தொகையில் சொற்கள் என்றும் எடுத்துக் காட்டுகள் உள்ளன.

எது எப்படி இருப்பினும் தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் சங்கப் புலவர்கள் காலத்திலும் கள் விகுதி இருந்துள்ளது. ஆனால் கள் விகுதி பிற்காலத்தில் வந்தது என்று சில கட்டுரைகள் வந்துள்ளன. இதிலிருந்து ஓர் உண்மையை ஊகித்து அறியலாம். முற்காலத்தில் கள் விகுதியின் பயன்பாடு மிகக்  குறைவாக இருந்துள்ளது. பிற்காலத்தில்தான் அதன் பயன்பாடு அதிகம் ஆனது என்று அமைதி கொள்ளலாம். 

அடுத்ததாகக் கள் விகுதியை அஃறிணைக்கு மட்டும்தான் சேர்க்க வேண்டுமா? உயர்திணைக்குச் சேர்க்கக் கூடாதா? எனக் கேள்விகள் எழுகின்றன.

என்னதான் செந்தமிழ்ச்சேய் விளக்கம் அளித்தாலும் மேற்கண்ட குறள்களில் இலக்கணப்படி உயர்திணையான மக்களைச் சுட்டியபோது “கள்“ விகுியை வள்ளுவர் பயன்படுத்தி இருக்கிறார். எனவே கள் விகுதியை இரு திணைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று வாதிட முடியும். பொதுவாக முற்காலத்தில் அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் கள் விகுதி பொருத்தப்பட்டது. 

அரசர் என்ற சொல் ஒருமையா பன்மையா என்றால் பன்மை என்றே நம் இலக்கணம் சொல்கிறது. அரசர் என்ற சொல்லுக்கு ஒருமை என்ன என்று கேட்டால், அரசர் என்றே சொல்வார்கள். இருவராக இருந்தாலும் அரசர் என்றே எழுதுவார்கள். அரசர் என்பது ஒருமையா பன்மையா என்பதை எண்ணிக்கையை வைத்தே ஊகித்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அரசன் என்றால் ஒருமைதான் என்று முடிவாகத் தெரியும். ஆனால் தமிழ்ப்பண்பாட்டில் அரசன் என்று அன் விகுதி போட்டுச் சொல்வதை மதிப்புக் குறைவாகக் கருதுகிறார்கள். அதனால் அர் என்கிற பன்மை விகுதியை இட்டு அரசர் என்று மரியாதையாகச் சொல்வது வழக்கமாகி இருக்கிறது. இதனை மரியாதைப் பன்மை என்று இலக்கணம் சுட்டுகிறது. இது போலவே அரசி என்பது ஒருமையைக் குறிக்கும். ஆனால் அரசியார் என்று மரியாதைப் பன்மையில் சொல்வார்கள்.

புலவர் என்ற சொல் ஒருவரைக் குறிக்கிறதா ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிக்கிறதா என்றால் இரண்டையும் குறிக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க என்ன வழி?

புலவர் என்றால் ஒருவரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். புலவர்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிப்பதாகச் சொல்லலாம் என்று முடிவு செய்துவிட்டால் ஒருமை பன்மை சிக்கல் தீர்ந்துவிடும்.

ஆனால் புலவர் அரசர் என வருகிற சொற்களில் ஏற்கனவே “அர்” விகுதி வந்துவிட்டது. புலவர்கள்,  அரசர்கள் ஆகிய சொற்களில் அர் என்ற விகுதியும் அத்துடன் சேர்ந்து கள் விகுதியும் உள்ளது. ஒரு சொல்லில் இரு விகுதிகள் வருவன சரியில்லை என்று சிலர் கூறுகிறார்கள், இரு விகுதிகள் வந்தால் என்ன குறைந்துவிடும்?

தமிழில் உள்ள விகுதிகளைப் பட்டியல் இட்டுள்ளனர். அதன்படிச் சில பகுசொற்களை நுட்பமாக ஆராய்ந்தால் இரு விகுதிகள் இருக்கும். ஆனால் இறுதி விகுதிக்கு முன் வரும் விகுதியைச் சாரியை என்று சொல்லிவிடுகின்றனர். வந்தனர் என்ற சொல்லை வா+த்(ந்)+த்+அன்+அர் என்று பகுத்துரைக்கலாம். இப்பகுப்பில் அன்+அர் என இருவிகுதிகள் உள்ளன. ஆனால் இங்கே அன் என்பதைச் சாரியை என்கின்றனர். ஒரு சொல்லில் ஒரு விகுதி மட்டும்தான் வரும் என்று உறுதியாக இருக்கின்றனர். விகுதி என்றாலே இறுதி என்றுதான் பொருள் என்றும் சொல்கிறார்கள். அதுபோல் வந்தார்கள், அரசர்கள் போன்ற சொற்களில்  உள்ள அர் ஆர் ஆகியவற்றைச் சாரியை என்றோ, வேறொன்றாகவோ சொல்லிக் கொண்டால் என்ன என்றோர் எண்ணமும் எழுகிறது. இதை இன்றைய நிலையில் யாரும் ஏற்க மாட்டார்கள். சில தமிழறிஞர்கள் சொல்வது போல் அரசர்கள் என்பதிலும் வந்தார்கள் என்பதிலும் இரு விகுதிகள்தாம் வருகின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்வோம். தற்கால நடைமுறையில் இரு விகுதிகள் கொண்ட சொற்கள் வந்துவிட்டன. அதனால் ஒரு சொல்லில் இரு விகுதிகள் வரலாம் என்று இசைவு தந்தால் தமிழ்த்தாய் மறுப்பாளா என்ன?

மரியாதைப் பன்மையை முன்னிட்டு நாம், யாம் என்று சிலர் சொல்லியும் எழுதியும் இருக்கிறார்கள். நாம் என்பதும் யாம் என்பதும் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்ற கேள்வி முன்னரே எழுந்துள்ளது. அதனால்தான் நாங்கள் என்றும் யாங்கள் என்றும் உயர்திணையில் “கள்” சேர்த்து ஒருமை பன்மை மயக்கத்தைத் தெளிய வைத்துள்ளார்கள்.

இவ்வாறு மரியாதைப் பன்மையில் ஏற்படும் ஒருமையா பன்மையா என்ற குழப்பத்தைத் தீர்க்க அர் விகுதியோடு கள் விகுதியைச் சேர்த்து வந்துள்ளோம். இது நெடுங்காலமாகவே பயன்பாட்டில் உள்ளது. எந்த இடரும் ஏற்படுவதில்லை.

சங்க காலத்தில் கள் விகுதி அஃறிணைப் பன்மைக்கு வந்துள்ளது. வராமலும் இருந்துள்ளது. கள் விகுதி இல்லாமல் அஃறிணைப் பன்மையை எவ்வாறு சுட்டினார்கள் என்று ஒரு கேள்வி எழுகிறது.

குறுந்தொகையில் “காலே பரிதப்பினவே” என்றொரு சொல்தொடர் உள்ளது. இதன் பொருள் கால்கள் ஓய்ந்தன என்பதாகும். காலே என்பதில் உள்ள கால் அஃறிணை ஒருமை ஆகும். பரிதவிப்பினவே என்பதில் பன்மை வினைமுற்று இருக்கிறது. இந்த வினைமுற்றைக் கொண்டு கால் என்பது கால்கள் என உணர்த்தி உள்ளார்கள். இதுபோலவே “கலுழ்ந்தன கண்ணே” என்றொரு சொல்தொடர் நற்றிணையில் உள்ளது. இதன் பொருள் அழுதன கண்கள் என்பதாகும். கலுழ்ந்தன என்ற பன்மை வினைமுற்றைக் கொண்டு கண் என்பதைக் கண்கள் என்று உணர்த்தினர். நெகிழ்ந்தன வளையே என்றும் நற்றிணையில் உள்ளது.

தற்காலத்தில் நாம் “பறவைகள் வந்தன” என்று எழுதுகின்றோம். இந்தச் சொல்தொடரில் “வந்தன” என்னும் பன்மை வினைமுற்று இருந்தாலும் பறவைகள் என்பதில் “கள்” விகுதி சேர்ந்து உள்ளதைக் கவனியுங்கள். சில சங்க இலக்கியங்களில் கையாண்டவாறு பறவை வந்தன என்று எழுதி, பன்மை வினைமுற்றைக் கொண்டு பறவை என்பது பறவைகள்தாம் என உணர்த்தலாம். ஆனால் இன்றைய தமிழாசிரியர்கள் பறவை வந்தது என்று திருத்துவார்கள். ஆகவே, அப்படி இப்படி என்று எப்படியும் ஒருமை பன்மை மயக்கம் வந்துவிடக் கூடாது என்ற கூடுதல் முன் எச்சரிக்கையோடுதான் இந்தக் கள் விகுதியை இணைத்திருக்கிறார்கள்.

வந்தார்கள் என்று எழுதக் கூடாது. வந்தனர் என்றுதான் எழுத வேண்டும் என்று சிலர் இன்றும் விடாப்பிடியாகச் சொல்லி வருகின்றனர் / வருகின்றார்கள். இதுபற்றிப் பார்ப்போம்.

ஆடு வந்தது என்று அஃறிணை ஒருமையைச் சுட்டுகிறோம்.

ஆடுகள் வந்தன என்று அஃறிணைப் பன்மையைக் குறிக்கிறோம்.

இதில் உள்ள வந்தன என்பதில் இருந்துதான் வந்தனர் என்று உயர்திணைப் பன்மையை உருவாக்கிக் கொண்டுள்ளோம். ஆனால் தற்காலப் பேச்சு வழக்கில் வந்தனர் என்று சொல்வதில்லை. ஒருமையில் வந்தார் என்றும் பன்மையில் வந்தார்கள் (வந்தாங்க) என்றும் பேசுகின்றோம். வந்தனர் என்ற பயன்பாடு நீண்ட காலமாகவே உள்ளது. வந்தனர் என்றாலும் வந்தார்கள் என்றாலும் பொருள்குழப்பமோ ஒருமை பன்மை மயக்கமோ ஏற்படவில்லை. ஆக வந்தனர் என்றும் பயன்படுத்தலாம். வந்தார்கள் என்றும் பயன்படுத்தலாம் என்று நெகிழ்வதே சரியாகும். கற்றலிலும் கற்பித்தலிலும் வந்தார்கள் என்பது எளிமையானது. பன்மைப் பெயர்ச்சொற்களிலும் பன்மை வினைமுற்றுகளிலும் கள் விகுதியைச்  சேர்ப்பது தெளிவு கிடைப்பதற்கே.

எனவே

தொல்காப்பியத்தில் சொல்லிவிட்டதால் கள் விகுதியை அஃறிணைப் பன்மைக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் உயர்திணைப் பன்மைக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் கைவலிக்கப் பிடித்துத் தொங்க வேண்டாம். எளிமை இனிமை தெளிமை கருதி விதி தளர்த்தல் செய்யலாம். நமக்கு முன்பே விதி தளர்த்தல் நடந்தும் விட்டது. பல தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தற்காலத்தில் கள் விகுதியை உயர்திணைக்கும் பயன்படுத்தலாம் அஃறிணைக்கும் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்துகொள்வதே தமிழுக்கு நலம் சேர்க்கும். அதுபோலவே ஒருமையா பன்மையா என்பது பற்றிய தெளிவுக்காக ஒரு சொல்லில் இரு விகுதிகள் வரலாம் என்றும் இசைந்து கொடுப்பதே தமிழுக்கு வளம் சேர்க்கும்.

இனி, யார் என்ன செய்தாலும் எப்படி அழுது புரண்டாலும் தமிழில் கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது.

 

நன்றி :

திண்ணை, 04-10-2020

 

Monday, 5 October 2020

பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்

 


பதிப்பகச் சூழலில்

செம்மையாக்குநர்கள்

 கோ. மன்றவாணன்

டிட்டிர் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. திருத்தர் என்கிறார்கள். செம்மையாக்குநர் என்கிறார்கள். பதிப்பாசிரியர் என்கிறார்கள். இதுகுறித்துச் சரியான சொல்காண வேண்டும். அதுவரை செம்மையாக்குநர் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

ஆங்கிலப் பதிப்பக உலகில் தொழில்முறை செம்மையாக்கம் உள்ளது. தமிழில் அப்படி இல்லை. என்றாலும் தெரிந்தோ தெரியாமலோ சிறுஅளவில் செம்மையாக்கப் பணி இங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சிலர், தாங்கள் எழுதும் படைப்புகளை நூலாக்கும் போது, தமக்குத் தெரிந்த எழுத்தாளர்களிடமோ வாசகர்களிடமோ காட்டிக் கருத்துக் கேட்கிறார்கள். தம் படைப்புகளைச் சரிபார்க்கவும் திருத்தம் செய்யவும் இத்தகைய அணுகுமுறை உதவுகிறது. அவ்வாறு உதவியவர்களைத் தங்களின் முன்னுரையில் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார்கள்.

சங்க காலங்களில்கூடச் சங்கப் பலகை என்ற அமைப்பை வைத்திருந்தார்கள். அதில் பல புலவர்கள் இருந்தார்கள். ஒருவரின் படைப்பை ஆராய்ந்து அதில் இருக்கிற தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவார்கள். தவிர்க்க வேண்டியவற்றைச் சொல்வார்கள். அந்த வகையில் ஒவ்வொரு படைப்பும் செம்மையாக்கம் செய்யப்பட்டதாக அறிகிறோம். பின்னர் ஏன் அத்தகைய அமைப்பு மறைந்து போனது என்று ஆராய வேண்டி உள்ளது.

அதை மீட்டெடுக்கும் முயற்சி ஒன்று கடலூரில் நடந்தது. கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி என்பவர் வெண்பூக்கள் என்றொரு நூல் எழுதினார். அதைப் படிகள் எடுத்துப் பல இலக்கிய அறிஞர்களிடம் முன்னரே கொடுத்தார். அதில் உள்ள குறை நிறை சுட்டவும் சீர்செய்யவும் கூறியதோடு அதையே சங்கப் பலகை என்ற பெயரில் இலக்கிய நிகழ்வாக நடத்தினார். கொஞ்சம் பெரிய நூல் என்பதால், அந்த நூல் பகுதிகளை மூன்றாகப் பிரித்து மூன்று வெவ்வேறு நாள்களில் அந்த நிகழ்வுகளை அமைத்தார். குறைகள் களையவும் நிறைகள் சேரவும் பல திருத்தங்களை அறிஞர் பெருமக்கள் தெரிவித்தனர். அந்த நிகழ்வுகளில் நானும் பார்வையாளராகக் கலந்துகொண்டேன். நூல் செம்மையாக வருவதற்கு இதுவும் ஒரு நன்முறை என்றே எனக்குத் தோன்றியது. எந்தப் படைப்பாளரும் தன் குறை பலர் முன்னிலையில் வெளிப்படுத்தப்படுவதை விரும்ப மாட்டார். குறையோ நிறையோ எதுவோ என்றாலும் பலர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டுத் திருத்தம் செய்துகொள்ள முன்வந்த க.பொ. இளம்வழுதி அவர்களைப் பாராட்ட வேண்டும்.

பூமிக்கு வந்த நட்சத்திரங்களைப் போல எழுத்தாளர்கள் நிறைந்துள்ளனர். ஆனால் படைப்புகளைச் செம்மையாக்கிப் பதிப்பீடு செய்யும் வழிமுறைகளை அவர்கள் அறியவில்லை. இந்த நிலையில்தான் பதிப்பகங்களை நாடுகிறார்கள். எழுத்தாளர் எழுதித் தந்தவாறு நூலை அச்சிட்டு வெளியிடுவது மட்டுமே போதுமானது அல்ல. எழுத்தாளரின் படைப்பை ஆய்வுக்கு உட்படுத்தி மேம்படுத்த வேண்டும். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்குத்தான் செம்மையாக்குநர்கள் தேவைப்படுகிறார்கள்.

தமிழில் செம்மையாக்குநர்கள் யார்யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருந்தால் விரல் எண்ணிக்கைக்குள்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் சில அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும்.

ஒரு செம்மையாக்குநர் பரந்துபட்ட வாசிப்புப் பழக்கம் கொண்டவராக இருத்தல் முதன்மையானது, தவறில்லாமல் எழுதுவதற்குரிய இலக்கணம் தெரிந்தவராக இருப்பது முக்கியமானது. தட்டச்சு, வடிவமைப்பு, அச்சிடல் பற்றிய நுணுக்கங்களை அறிந்தவராக இருத்தல் மேன்மையானது. தற்கால இலக்கியப் போக்குகளையும் நாட்டு நடப்புகளையும் அறிந்து வைத்திருத்தல் நல்லது. ஐயம் ஏற்படும் இடங்களில் வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறத் தயங்கக் கூடாது. எழுத்தாளரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து நடக்க வேண்டும். திருத்துவதால் எழுத்தாளரைவிடத் தான் மேம்பட்டவர் என்ற எண்ணம் தகாது. படைப்பைச் சீர்படுத்தவே முயல வேண்டும். இம்மியளவும் சீர்குலைவுக்குக் காரணமாகிவிடக் கூடாது. மொத்தத்தில் பதிப்புத் துறையில் சில ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளோடு செம்மையாக்குநர்கள் கிடைத்தால் நற்பேறு.

தங்கள் படைப்புகளுக்குத் தாங்களே செம்மையாக்குநர்களாக இருக்கத்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் விரும்புகிறார்கள். எனினும் தமிழில் செம்மையாக்குநர்களின் அவசியம் மெல்ல மெல்ல உணரப்படுகிறது.

ஜெயமோகன் அவர்கள், ஆழமான இலக்கிய ஞானமும் உலக ஞானமும் கொண்டவர். அவர்தான் பிறருக்கு வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் எழுதிய வெண்முரசு நாவல்களுக்கான செம்மையாக்கப் பணிகளை ஸ்ரீநிவாசன் – சுதா இணையர் மேற்கொண்டார்கள். அந்த இணையரை இணை ஆசிரியர்கள் என்றே பெருமைப்படுத்துகிறார் ஜெயமோகன்.

எழுத்தாளர் மெளனி அவர்களை நாம் அறிவோம். அவரின் சிறுகதைகள் பலவும் எம்.வி. வெங்கட்ராம் அவர்களால் திருத்திச் செம்மையாக்கம் செய்யப்பட்டவைதாம் என்பதை அறிவீர்களா?

படைப்பாளர்கள் சிலருக்கு அறிவுச் செருக்கு  இருக்கும். படைப்பைப் பாராட்டினால் ஏற்றுக்  கொள்வார்கள். குறைசுட்டினால் ஏற்க மறுப்பார்கள். மேலும் குறை சொன்னவரையே வெறுப்பார்கள். தெளிவாகவே தென்படும் முரணைச் சுட்டிக் காட்டினாலும், அதற்குப் புதியதாக ஒரு வழுவமைதி வகுப்பார்கள். “அவர் என்ன, என்னைவிட மேலானவரா? எனக்குத் தெரியாதது அவருக்குத் தெரியுமோ?” என்று செம்மையாக்குநர்களை  எழுத்தாளர்கள் ஏற்பதில்லை. படைப்பை மேம்படுத்தவே செம்மையாக்குநர்கள் உதவுகிறார்கள்; உழைக்கிறார்கள் என்பதை எழுத்தாளர்கள் உணர்தல் வேண்டும்.

ஒருவர் தன் கவிதையைத் திருத்தம் செய்து கொடுங்கள் என்று பணிவாகச் சொல்வார். கவிதையில் தேர்ந்த ஒருவர், அதனைச் செம்மை செய்து தருவதோடு, கவிதை இந்த இடத்திலேயே முடிந்துவிடுகிறது. அதற்கு அடுத்துவரும் மூன்று வரிகள் தேவையில்லை என்பார். அவரிடத்தில் அந்தக் கவிஞர், “ஆமாங்கய்யா சரிங்கய்யா” என்று சொல்லிவிட்டுப் போவார். நூல் வெளிவரும் போது, அந்த மூன்று வரிகளும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கும். தம் வரிகளை நீக்கப் பெரும்பாலும் கவிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. இதனாலும் தமிழில் செம்மையாக்கம் என்பது தனியாக நிகழவில்லை.

ஒற்றுப்பிழை, சொற்பிழை, இலக்கணப்பிழை பற்றிப் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அக்கறை இல்லை. அவை பிழைகள் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. பிழை திருத்தங்கள் சொன்னால் அவர்கள் பொருட்படுத்துவதும் இல்லை.

அதே நேரத்தில், படைப்பாளர்களின் புனைவுமொழியைப் புரிந்துகொள்ளாமல் இயந்திரத்தனமான மொழிப்புரிதலோடு பிழைதிருத்தினால்  படைப்புச் சிதைவுறும் என்று ஜெயமோகன் சுட்டிக்காட்டி உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூறியது கூறல் என்பது பெரும்பாலும் வருகிறது. முந்தைய பத்தியில் சொன்னவற்றை இரண்டொரு பத்திகள் தள்ளி, வேறு சொற்களில் அதே கருத்தைச் சொல்பவர்கள் உண்டு. தொடர்புடைய செய்திகளைக் கலைத்துப் போட்டிருப்பார்கள். தேவைக்கு மேல் சொற்களைக் குவிப்பவர்கள் உண்டு. அதனால் பொருள்மயக்கம் ஏற்படும் நிலையும் நேருவது உண்டு. தற்காலப் படைப்புகளில் இருவேறு பொருள்தரும் சொற்றொடர்களும் பொருத்தமற்ற சொற்பயன்பாடுகளும் வருகின்றன. 

     கட்டுரைத் தொகுப்பாக இருந்தால், ஒரு கட்டுரையில் உள்ள செய்திகள் வேறொரு கட்டுரையில் இருக்கும். சில போது ஒரே செய்தி அடிக்கடி வரும். வரலாற்று நிகழ்வுகளையும் ஆண்டுகளையும் தவறாகக் குறிப்பிட்டு இருப்பார்கள். ஒரு கட்டுரையில் சொன்னதில் இருந்து, இன்னொரு கட்டுரையில் முரண்பட்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் சுவடு தெரியாமல் சரி செய்ய செம்மையாக்குநர்கள் உதவுவார்கள்.

பிழை திருத்தமும் செம்மையாக்கத்தின் ஒரு பகுதிதான். ஆனால் தமிழ்ச்சூழலில் பிழை திருத்தம் மட்டுமே நடக்கிறது. அதற்கும் கூடத் தகுதியான பிழை திருத்தர்கள் கிடைப்பதில்லை.

தம் கைப்பட எழுதும்போது ஏராளமான எழுத்துப் பிழைகளோடும் இலக்கணத் தவறுகளோடும் எழுதுகிற எழுத்தாளர்கள் சிலர் உண்டு. ஆனால் இவர்கள் அபாரமான படைப்பாற்றல் மிக்கவர்கள். செம்மையாக்குநர்களின் துணையோடு பிழைகளைக் களைந்து விடலாம். இவர்களின் படைப்பாற்றலுக்கு இணையாக இன்னொருவரைத் தேட முடியாது. இலக்கணம் படித்துத்தான் இலக்கியம் எழுத வரவேண்டும் என்றால் இங்கே நா. பார்த்தசாரதிதான் மிஞ்சுவார்.

நாளிதழ்களில் பருவ இதழ்களில் செம்மையாக்கம் செய்வதற்கு என்றே ஆசிரியர்கள் இருக்கின்றனர். நாளிதழுக்கு ஒரு படைப்பை அனுப்பினால் அதனைச் செம்மையாக்கம் செய்து அழகாக வெளியிடுகிறார்கள். பெரும்பாலும் 500 சொற்களுக்குள் இருக்க வேண்டும். ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்கள் என்ற அளவுக்குள் வர வேண்டும் என்று அங்கேயும் சில வரையறைகள் வைத்திருக்கிறார்கள். அதனால் படைப்பைச் செம்மையாக்கம் செய்வதைவிட, படைப்பின் அளவைக் குறைப்பதே சில இதழாசிரியர்களின் எடிட்டிங் கலையாக உள்ளது. அவர்கள் அப்படி வெட்டி எறிவதற்கு எழுத்தாளர்களின் இசைவைப் பெறுவதில்லை. படைப்பைச் சுருக்கவும் திருத்தவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு என்று தங்கள் இதழில் முன்னரே குறிப்பிட்டு விடுகிறார்கள்.

தங்கள் படைப்பில் எதையும் வெட்டக் கூடாது என்றும் எதையும் திருத்தக் கூடாது என்றும் இதழாசிரியர்களுக்குக் கட்டளை இடும் பெரிய எழுத்தாளர்களும் உண்டு. புகழ்மிகு எழுத்தாளர்கள் எதை எப்படி எழுதினாலும் அதில் எந்தத் திருத்தமும் செய்யாமல் அப்படியே வெளியிடுகிற இதழாசிரியர்களும் உண்டு.

தமிழகத்தின் தலைசிறந்த நாளிதழுக்கு அறுநூறு சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை அனுப்பினேன். நானூறு சொற்களில் அந்தக் கட்டுரையைச் சுருக்கியதோடு அருமையான தலைப்பும் சூட்டி வெளியிட்டு இருந்தார்கள். வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  பொருத்தமான படமும் அழகான பக்க வடிவமைப்பும் செய்திருந்தார்கள். படித்துப் பார்த்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போதுதான் எடிட்டிங் கலை எவ்வளவு முக்கியமானது; அவசியமானது என்பதை உணர்ந்தேன். உடனே அந்த இதழ் ஆசிரியருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மடல்விடுத்தேன்.

பொதுவாக எடிட்டிங் என்றால் அது திரைப்படத் துறை சம்பந்தப்பட்டது என்றே பலரும் அறிவார்கள். ஒரு படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதற்கும், குழப்பம் இல்லாமல் கதை சொல்வதற்கும் எடிட்டிங் முக்கியமானது. எடிட்டிங் சரி இல்லாததால் தோல்வி கண்ட படங்கள் பல உண்டு. திரைப்படத்துக்கு அடுத்ததாக, இதழ்களில் எடிட்டிங் கலையைக் கையாண்டு வருகிறார்கள். தமிழ்ப் பதிப்பகச் சூழலில்தான் எடிட்டிங் பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

படைப்புகளைச் செம்மையாக்கம் செய்து வெளியிடுவதில் அக்கறை கொண்ட பதிப்பகங்கள் மிகக்குறைவாக உள்ளன. பெரும்பாலான பதிப்பகத்தார் வணிகர்களாக இருக்கிறார்களே தவிர, இலக்கிய நுகர்வு கொண்டவர்களாக இல்லை. அதனாலும் செம்மையாக்கம் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. பிழை திருத்தும் பொறுப்பையும் எழுத்தாளர்களிடமே விட்டுவிடுகின்றனர். அவர்கள் சுட்டிய பிழைகளை மட்டும் சரிசெய்துவிட்டு, அந்தக் கோப்பை அப்படியே அச்சகத்துக்கு மின்னஞ்சல் செய்துவிடுகிறார்கள்.

பொதுவாக நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரியாது. அடுத்தவர்களின் பார்வையில்தான் அவை தென்படும். அதனால், படைப்பை எழுதி முடித்தவுடன் செம்மையாக்குநர்களிடம் தரவேண்டும். அப்போதுதான் எழுத்தாளருக்கே தெரியாத தவறுகள், முரண்கள், தெளிவின்மைகள், தொய்வான இடங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து சரிசெய்ய முடியும்.

செம்மையாக்கம் செய்யும்போது எழும் ஐயங்களைக் களைய ஆசிரியருடன் விவாதித்துத் தீர்வுகாண வேண்டும். செம்மையாக்கம் செய்து முடித்தவுடன் ஆசிரியரின் இசைவு பெறுதல் இயற்கை நீதிகளில் ஒன்று.

எழுத்தாளர்கள் உணர்வு வேகத்தில் தமக்குள்ளிருந்து வருவதை எல்லாம் கொட்டி விடுவார்கள். எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப அவற்றை ஒழுங்கமைக்க வேண்டியது அவசியம். அந்த இடத்தில்தான் செம்மையாக்கத்தின் இன்றியமையாமை ஏற்படுகிறது. அதனால் பதிப்பகச் சூழலில் வடிவமைப்போர், அச்சிடுவோர் என்பனர் போல், செம்மையாக்குநர்கள் என்று ஒரு பிரிவினர் உருவாக வேண்டும்.

எழுத்தாளரும் செம்மையாக்குநரும் ஒரே திசையில் இணைகோடுகளாக பயணிக்கும் வகையில் நற்சூழலைப் பேணிக் காக்க வேண்டும்.

பரிந்துரை :

ஜெயமோகன் தளத்தில் “வெண்முரசின் இணையாசிரியர்கள்” என்ற கடிதத்தைப் படியுங்கள்.

எடிட்டிங் பற்றி ஜா. ராஜகோபாலனும் காளி ப்ரஸாத்தும் இணைந்து ஒளிஒலிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதையும் பாருங்கள்.

நன்றி :

திண்ணை, 27-09-2020