ஒரு கோப்பைக்குள் விழுந்து
எழாமல் கிடக்கிறது
இந்த உலகு
திரவத்திலிருந்து முளைத்துத்
தீண்டுகின்றன
விஷநாவுகள்
ஆசிர்வதிக்கப்பட்ட தாலியொன்று
அறுக்கப்படுகிறது
புட்டியின் மூடியைக் கழற்றும்போது
கொடூர விலங்கென உளம் திரிகிறான்
கோப்பைக்குள் விழுந்த புனிதனும்
தனக்கு மதுபடைக்கும் மனிதனைக் கண்டு
கோவிலைவிட்டு வெளியேறி இருக்கலாம்
கடவுளும்.
மதுத்துளி பட்டு எரிந்து சரிகின்றன
குடும்ப கோபுரங்கள்
மானம் என்றொரு சொல்லுக்குப் பாடைகட்டித்
தெருத்தெருவாய் இழுத்துச் செல்கின்றன
போதையின் மாயக் கைகள்
ஓரப் பார்வையால் தொட்டவனையும்
உள்ளிழுத்துக் கொள்கிறது
சவக்குழியாய் வாய்பிளந்து காத்திருக்கும்
கோப்பை...
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment