Thursday, 28 February 2019

நிகழ்ந்தும் நிகழாத...


















நிகழ்ந்தும் நிகழாத.....

கோ. மன்றவாணன்

ஜெகதீசன் வேகமாக வந்து என் கடைவாசலில் தன் வாகனத்தை அவசர அவசரமாக நிறுத்திய போது ஸ்டாண்ட் சரியாக விரியாததால் வாகனம் கீழே சரிந்தது. அதை அவர் கவனிக்காமல் படியேறி என் கடைக்குள் வந்தார். கண்கள் அழுது அழுது சிவந்து போனதுபோல் தெரிந்தது. “என்னாச்சு ஜெகதீசுக்கு” என்று என்மனம் பதற, நான் இருக்கைவிட்டு எழுந்து அவரை நோக்கி வந்து, “என்ன ஜெகதீஷ்... ஒரு மாதிரி இருக்கீங்க? என்ன நடந்துச்சு?” என்று கேட்டேன்.

அதற்கு அவர் பதில் சொல்லாமல் “வாங்க ஸ்கூலுக்குப் போலாம்” என்று விரைவுப்படுத்தியதோடு கீழே விழுந்துகிடந்த வண்டியை நிமிர்த்தி ஸ்டார்ட் செய்தார். நான் பின்னிருக்கையில் அமர்ந்தேன். வழக்கத்தைவிட அதிவேகமாக வண்டியை ஓட்டினார். அந்த வேகத்தில் நான் கீழே விழுந்துவிடுவேனோ என்று அச்சமாக இருந்தது. ஆனால் அதை அவரிடத்தில் தெரிவிக்கவில்லை. அவர் பையனும் என் பையனும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அவருடைய அவசரத்தைப் பார்க்கும்போது அவர் பையனுக்கு ‘ஏதோ ஆயிடுச்சு” என்று மட்டும் மனசு சொல்லியது. 

கம்மியம்பேட்டைப் பாலம் வழியாகச் சென்று, செம்மண்டலத்தில் கிழக்குப் புறமாகத் திரும்பினார். எதிரே வேகமாக வந்த டவுன் பஸ் டிரைவர் சாமர்த்தியமாப் பிரேக் அடித்து நிறுத்தியதால் நாங்கள் மோதாமல் நிலைதடுமாறி வாகனத்தோடு சாய்ந்தோம். “யோவ் அறிவிருக்காயா? நீ வந்து மோதிடுவே. போலீசுல பெரிய வண்டின்னு என் பேர்ல வழக்குப் போடுவாங்க. நான்தான் ஜாமின் கீமின்னு செலவு பண்ணனும். வருஷக் கணக்கா கோர்ட்டுக்கு நடக்கணும்” என்று கோபமாகப் பேசினார். பஸ்ஸூக்குள் இருந்தவர்களும் எங்களைப் பார்த்துத் திட்டினார்கள். என்ன திட்டினார்கள் என்று இப்போது நினைவுக்கு வரவில்லை. 

பரபரப்பிலும் பதற்றத்திலும் வாகனத்தை ஓட்டிய தன்மேல்தான் தவறு என்பது ஜெகதீசனுக்குத் தெரியாமல் இல்லை. எங்கள் மனக்கவலையில் அந்த வசவுகள் எதுவும் எங்களுக்குள் இறங்கி இரசாயன மாற்றம் ஏதும் செய்யவில்லை. மீண்டும் வாகனத்தைத் தூக்கி நிறுத்தி ஸ்டார்ட் செய்து புறப்பட்டோம். கடலூரின் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றான ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நுழைவுக் கேட்டின்மேல் மோதிவிடுவதுபோல் போய்நின்றது ஜெகதீசன் ஓட்டிய வண்டி. “தமிழ்ச்சங்கத்துல பொறுப்பாளர்களாக இருந்துட்டுப் பிள்ளைகள இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வைக்கறீங்களே” என்று எங்களைப் பிறர் குத்திக்காட்டுவது நினைவுக்கு வந்து போனது. 

எங்கள் அவசரத்தையும் பதற்றத்தையும் கவனித்த வாட்ச்மேன் வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே அனுமதித்தார்.

பள்ளி முதல்வர் நடராசன் எங்கள் பதற்றத்தைப் புரிந்து உட்காரச் சொன்னார். நாங்கள் உட்காரவில்லை.

“சார், பையனப் பாக்கணும்”
“இரண்டு பேர்ல யாருடைய பையன்?”
“ரமேஷ் சார் பையன் பாரத்” என்றார் ஜெகதீசன்

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. வயிற்றின் வலப்புறத்தின் உள்ளிருந்து அஞ்சாறு தவளைகள் துள்ளிக் குதித்து ஓடுவன போல் இருந்தது. கைவிரல்களின் நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை. சட்டென்று முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் வியர்வைப் பொங்கியது. பயம் என் குரலைக் கம்மி செய்தது. கணீரென்று மேடையில் பேசிய என்குரல் பயத்தால் ஒடுங்கிப் போனது. பேச முயன்ற போது ஒலிக்குப் பதிலாகப் பெரும்பாலும் காற்றுதான் வந்தது. பள்ளி முதல்வர் அங்கிருந்த ஆசிரியைகளிடம் சொல்லி என்னை ஓர் அறைக்கு அழைத்துப்போய் அமர வைத்தார்கள். தண்ணீர் கொடுத்தார்கள். குடிக்க மறுத்துவிட்டேன். ஏசி போட்டார்கள். எனினும் என் வியர்வை அடங்கவில்லை.

சுதாகரித்து ஜெகதீசனிடம் கேட்டேன். ”என்னாச்சு என் மகனுக்கு?”
“எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க”

அய்யோ என்று அலறுவது தெரிகிறது. ஆனால் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. கண்ணீர் மலமலவென வழிந்தது. சேரில் இருந்து சரிந்து கீழே விழுந்தேன்... புரண்டேன். அந்தத் தகவல் பொய்யாகி விடாதா என்று கடவுளிடம் வேண்டினேன். செடல் போட்டுக்கொள்வதாக பஸ் ஸ்டாண்ட் நாகம்மாளிடம் உறுதி சொன்னேன். ஒரு வயது இருக்கும்போது அவனுக்கு இதயத்தில் ஓட்டை. சென்னைக்குச் சென்று மருத்துவர் செரியன் அவர்களிடம் காட்டினேன். அவர் சிகிச்சை அளித்தார். அந்த இதயக் கோளாறுதான் மறுபடியும் ஏற்பட்டு இப்படி ஆகிவிட்டதோ என்று கருதிய போது, என் இதயத்தில் ஈட்டிகள் இறங்கின.

சற்று நேரத்தில் பாரத் வகுப்பறையில் இருந்து அழுதபடியே ஓடி வந்தான். உடன் ஒரு ஆசிரியரும் அவன் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து ஓடி வந்தார்.

“என் டாடிக்கு என்னாச்சு” என்ற பயத்தில் வந்தவனைப் பார்த்ததும் தளர்ந்து சுருண்டு கிடந்த எனக்கு எப்படித்தான் தெம்பு வந்ததோ, பட்டென எழுந்து அவனைக் கட்டிப்பிடித்துத் தூக்கி முகம் தலை எல்லாம் முத்தம் இட்டேன். கண்ணீரும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு மனோபாவத்தில் உணர்ச்சியின் உச்சி முகட்டில் நான் இருந்தேன். அந்த அனுபவத்தை எந்த எழுத்தாளராலும் விவரிக்க முடியாது என்றுதான் நம்புகிறேன்.. 

இதைப் பார்த்ததும் ஜெகதீசனுக்கும் மகிழ்ச்சிதான். கூடவே ஒரு தர்ம சங்கடமும் பிடுங்கித் தின்னும் அவமானமும், தீர விசாரிக்காமல் எனக்கு அதிர்ச்சியைத் தந்துவிட்ட தத்தளிப்பிலும்  அவர் தவித்ததை உணர்ந்தேன். ஆனால் அவர்மீது கோபம் ஏதும் இல்லை. நல்லெண்ணத்திலும் என்மீது உள்ள உண்மையான அக்கறையாலும்தான் அவர் அப்படிச் செய்தார் என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அவரின் தர்ம சங்கடத்தையும் தவிப்பையும் போக்கும் வகையில் அவரின் இருகைகளையும் பற்றி அணைத்துக்கொண்டேன்.

நானும் ஜெகதீசனும் இளம்வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். நான் ஓவியத்தைத் தொழிலாகவும் எழிலாகவும் செய்து வருகிறேன். ஜெகதீசன் வேளாண் துறையில் சாதாரண ஊழியராகப் பணியாற்றுகிறார். துறையின் துணை இயக்குநர்கள் இணை இயக்குநர்கள் ஆகியோரிடம் பரிந்துரைத்து வேளாண் திட்டங்கள் குறித்த சுவர் விளம்பரம், ஃபிளக்ஸ் விளம்பரம் ஆகிய ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுத் தந்து எனக்கு எப்போதும் உதவுகிறார்.

அன்று அலுவலகத்தில் இருந்த ஜெகதீசன் செல்பேசியில் வாட்ஸ் அப் தகவல் ஒன்று வந்தது. அனுப்பி இருந்தவர் ஸ்ரீதேவி. “ரமேஷ் அவர்களின் மகன் ரயில்மோதி இறந்துவிட்டார்.” இந்தத் தகவலைப் படித்ததும் அதிர்ந்துதான் போனார்.

“ரமேஷிடம் எப்படிப் போன் போட்டுப் பேசுவது? அவருக்கு இந்தத் தகவல் தெரியுமா? ஒரு வேளை தெரியாமல் இருந்தால் நாம் சொல்லி அவருக்கு அதிர்ச்சியில் ஏதாவது ஆகிவிடுமா?” என்று பதைபதைத்துள்ளார்.  என்ன செய்வது என்று தெரியாமலும் புரியாமலும் “டெத் ஒண்ணு. அவசரமாகப் போறேன்”னு அலுவலகத்தில் சொல்லிவிட்டுத்தான் வாகனத்தில் வேகமாக வந்திருக்கிறார். ஆனால் அவர் வாட்ஸ்அப்பின் தகவலை முழுமையாக உள்வாங்கவில்லை. ரமேஷ் மகன் இறந்துவிட்டார் என அவர் மனதில் பதிந்து, பள்ளியில்தான் அந்தத் துயர்நிகழ்வு நடந்ததாக அவசர கதியிலும் மனப்பதற்றத்திலும் காட்சியை அவராகவே வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

லுவலகத்தில் பணியில் இருந்த போது ஸ்ரீதேவியின் செல்போனில் வாட்ஸ்அப் ஒலி எழும்பியது. அவர் வணிகவியல்தான் படித்தவர் என்றாலும் சங்க இலக்கிய அறிவாற்றலில் பல தமிழ்ப்பேராசிரியர்களுக்கு மேம்பட்டவர். இலக்கிய வட்டத்தில் நல்ல பெயர் உண்டு. அதனால் அவருக்கு நட்பு வட்டமும் பெரிதாக இருந்தது. வாட்ஸ் அப் செய்தியைத் திறந்து பார்த்தவருக்குப் பெருத்த அதிர்ச்சி. “ரமேஷ் அவர்களின் மகன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.” இதுதான் அந்தச் செய்தி. ரமேஷ் ஓவியர் மட்டுமல்ல நல்ல கவிஞரும் கூட. சமூக நற்பணி மன்றங்கள் அனைத்திலும் அவரின் குரல் ஒலிக்காமல் இருந்ததில்லை. எல்லாருக்கும் நல்லவராக வாழ்வது என்பது இயலாத ஒன்று. ஆனால் எல்லாருக்கும் நல்லவராய் வாழ்ந்து காட்டும் அதிசய மனிதர் அவர். எந்த நேரமானாலும் யார் என்ன உதவி கேட்டாலும் ஓடிவந்து உதவும் குணமும் அவருடையது என்ற ரமேஷின் குணச்சித்திரம் ஸ்ரீதேவியின் மனத்தில் அழுத்தமாக வரையப்பட்டிருந்தது.

ரமேஷ் என்ற பெயரைப் பார்த்ததும் அதிர்ந்த ஸ்ரீதேவி அந்தத் தகவலை மற்ற இலக்கிய அன்பர்களுக்கு முன்னகர்த்தினார். அந்த நேரத்தில் பாண்டியன் அவர்களிடமிருந்து போன் வந்தது. அவர் பேசத் தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி,

“சார்... ரமேஷ் மகன் ரயிலில் விழுந்து இறந்துட்டானாம். என்னென்னு விசாரிச்சிங்களா?”

“விசாரிச்சிட்டுச் சொல்றேன்” என்றவர் போனை வைத்துவிட்டார். காத்திருந்து பார்த்தும் பாண்டியனிடமிருந்து விசாரிப்புத் தகவல் எதுவும் வரவில்லை. அலுவலகத்தில் அவசர வேலைகள் இருந்தன. அவற்றைச் செய்ய ஸ்ரீதேவிக்கு மனம் ஓடவில்லை. “வேற யாரை விசாரிக்கலாம்“ என்று யோசித்தபடி செல்போனில் இருந்த காண்டாக்ட் பகுதியில் தேடினார்.

அந்த நேரம் சொல்லி வைத்தாற்போல் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் வந்தார். அவரை விசாரித்த போது சொன்னார். ”நீங்க நினைக்கிற மாதிரி இறந்து போனது ஓவியர் ரமேஷ் மகன் இல்லீங்க. கம்யூனிஸ்ட் கட்சி ரமேஷ் மகன்தான் ரயிலில் விழுந்து இறந்துட்டார்.”

இதைக் கேட்ட ஸ்ரீதேவிக்கு இன்னும் அதிர்ச்சி. கம்யூனிஸ்ட் ரமேஷின் மனைவி அவருக்கு நெருங்கிய தோழி. அனிச்சம் இலக்கியக் கூடல் நிகழ்ச்சிக்கெல்லாம் ரமேஷ் குடும்பத்துடன் வருவார். அவருடைய பையன் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் டீ பிஸ்கெட் பரிமாறுவதற்கு உதவி இருக்கிறான். ஸ்ரீதேவியின் மனக்கண்ணில் அவனின் சூரிய முகம்  ஒளிர்ந்தது.

காலையில் வீட்டைவிட்டு சைக்கிளில் சென்றவன் இன்னும் வரவில்லை என்று நேற்று இரவு 2 மணிவரை கடலூரில் உள்ள எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட் ரமேஷ் தன் மகனைத் தேடித் தேடி அலைந்து பார்த்திருக்கிறார். பல நண்பர்களும் தேடி ஓய்ந்துபோனார்கள். அவனுடைய நண்பர்கள் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று விசாரித்துப் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.

விடிகாலை 3 மணியளவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, எப்படியும் தன் மகன் வந்து சேர்வான் என்ற நம்பிக்கையில் கண்ணயர்ந்தார் ரமேஷ். ஆனா அவருடைய மனைவி மட்டும் தூங்காமல் அழுது அழுது கண்களும் முகமும் வீங்கிப் போயிருந்தது.

அவருடைய பையன் 12 ஆம் வகுப்பு படித்தான். மூன்று முறை தேர்வு எழுதியும் அவனால் தேர்ச்சி அடைய முடியவில்லை. அதுபற்றி எதுவும் கோபமாகப் பேசியதில்லை ரமேசும் அவருடைய மனைவியும். பிள்ளைகளின் உளவியல் தெரிந்து நடக்கக் கூடியவர்கள். பெற்றோர் பிள்ளைகள் அணுகுமுறை, ஆசிரியர் மாணவர் அணுகுமுறை பற்றியெல்லாம் கல்வி நிகழ்ச்சிகளில் பேசி இருக்கிறார் ரமேஷ்.. அதனால் அவர் அவனை அடித்ததும் இல்லை. கண்டித்ததும் இல்லை.

“ஒருவேளை கடிதம் எதுவும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறானா” என்று வீட்டில் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார். அலமாரியில் துணிமணிகளை எல்லாம் அவசர அவசரமாகச் சரித்துத் தள்ளித் தேடினார். கடிதம் எதுவும் இல்லை. கீழே தள்ளிய பொருட்களை எடுத்து உள்ளே வைக்காமல் அலமாரியை மூடிவிட்டு வந்து படுக்கையில் சாய்ந்தார்.

காலை ஆறு மணிக்கு ரமேஷ் செல்போன் மூன்றுமுறை அலறி ஓய்ந்தது. யாரும் அதை எடுத்துப் பேசவில்லை. வெளியில் கிடந்த துணிமணிகளை எடுத்து உள்ளே வைப்பதற்காக அலமாரியைத் திறந்த ரமேஷின் மனைவியின் கண்களில் கணவரின் செல்போன் தெரிந்தது. அவசரத்தில் தன் செல்போனை அலமாரியில் வைத்துவிட்டு மறந்துவிட்டிருக்கிறார் என்று தெரிந்தது. அதில் மூன்று மிஸ்டுகால் இருந்ததைப் பார்த்து, “என்னங்க... போன அலமாரியில வைச்சிட்டீங்க. மூணு மிஸ்டுகால் வந்துருக்கு. என்னன்னு கேளுங்க” என்று சொல்லி ரமேஷிடம் கொடுத்தார்.

முக்கியமான தகவலாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டார்.

“சார்.. நான் ரமேஷ் பேசுறேன்.”
“சார்... நாங்க ஸ்டேசனிலிருந்து பேசறோம். பல தடவை உங்கள தொடர்புகொள்ள முயற்சி செஞ்சோம். நீங்க எடுக்கல.”
“சார்... பையனைத் தேடி அலைஞ்சதுல கொஞ்சம் தளர்ந்துபோய் படுத்துட்டேன். ஏதாவது தகவல் கிடைச்சுதாங்களா?
“இல்ல சார். ஆனா... டீ சர்ட்டும் பள்ளிக்கூட யூனிபார்ம் பேண்ட்டும் போட்ட ஒரு சின்ன வயசுப் பையனோட பாடி ஆஸ்பிட்டல இருக்குது. ரயில்வே போலீசார் சொன்னாங்க. நிச்சயமாக ஒங்க மகனா இருக்க மாட்டான். எதுக்கும் ஒருதடவை போய் பாத்துட்டு வந்துடுங்க.”

ரமேஷின் கையிலிருந்து செல்போன் நழுவிய நிலையில் அதை சுதாகரித்துப் பிடித்துக்கொண்டார்.

“என்னங்க பேசினிங்க? ஏதாவது தகவல் கிடைச்சுதுங்களா?”
...........
“என்ன பேச மாட்றீங்க? நம்ம பையனுக்கு எதாவது ஆயிடுச்சா?”
“எதுவும் ஆவாதும்மா.”
“கொஞ்சம் இரு. ஒரு இடத்துக்குப் போயிட்டு வந்துடுறேன்.”
“எங்கப் போறீங்க? நானும் வரேன்”
“இரும்மா... கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.”
“எங்கப் போறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க. எம்மனசு அமைதியா இருக்காது?”
“இல்லம்மா... கட்சி ஆபிசுக்குப் போயிட்டு வந்துடுறேன்.”

மருத்துவமனை ஊழியர் அய்யாசாமிக்குப் போன் செய்து மருத்துவமனைக்கு வரும்படிச் சொல்லிவிட்டுத் தனது ஹோண்டா சைனில் பறந்தார்.

மருத்துவமனை ஊழியர்கள் சங்கத் தலைவர் அய்யாசாமி காத்திருந்தார். “மார்ச்சுவரியைப் பார்க்கணும்” என்றார் அவரிடம். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மார்ச்சுவரிக்கு ரமேசை அழைத்துச் சென்று காண்பித்தார் அய்யாசாமி.

ஒரேஒரு பாடிதான் கிடத்தப்பட்டிருந்தது. கிடத்தப்பட்டிருந்தது என்று சொல்வதைவிட ஒரு மனித படத்தைத் துண்டுதுண்டாக வெட்டி, பிறகு ஒன்று சேர்ப்பதுபோல் உறுப்புகள் அடுக்கப்பட்டிருந்தன. தலை தனியாக இருந்தது. கைகளும் கால்களும் துண்டுத்துண்டுகளாகச் சிதைந்து கிடந்தன. உள்ளே நுழைந்ததும் கிழிந்து சிதைந்த டீ சர்ட்டும் பேண்டும் ரமேசை நிலைகுலையச் செய்துவிட்டது. அது தன்மகனின் டீ சர்ட்டுதான். அந்தப் பேண்ட் அவன்படித்த பள்ளிக்கூட சீருடைதான்.

ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற உடல்பருமனும் மனபலமும் கொண்ட ரமேஷ் வாய்விட்டுக் கதறி அழுதார். அவரை அருகில் இருந்த அய்யாசாமி தாங்கிப் பிடித்துப் பிணவறையிலிருந்து வெளியில் அழைத்துவர முயன்றார். ஆனால் அவர் மீறி மீறி உள்ளே சென்று பார்த்துக் கதறினார். அங்கிருந்த மற்ற ஊழியர்கள் சமாதானம் சொல்லி அவரை வெளியே அழைத்து வந்தார்கள். அவர் அழுவதைப் பார்த்து அய்யாசாமியின் கண்களிலும் கண்ணீர்த் திவலைகள். வெறுங்கையால் துடைத்துக் கண்ணீரை மறைக்க முனைந்தார்.

“எம்மகன் மேல ஒரு துரும்புகூட விழாம பாத்துக்கிட்டிருந்தேனே. அவன எதிர்த்து ஒரு வார்த்த கூட  நான் சொன்னதில்லையே. ரயில்முன் விழ எப்படித் துணிஞ்சான்? என்ன கஷ்டம் பட்டிருப்பான்?” என்று சொல்லிச் சொல்லி அழுதவரை சமாதானப்படுத்த முடியாத நேரம் அது. அழுது தீர்த்த பிறகுதான் சமாதானப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்த அய்யாசாமி, “போஸ்ட்மார்ட்டம் முடிச்சு நாங்க கொண்டாந்துடுறோம். டூவீலரை நான் எடுத்துட்டு வரேன். நீங்க இந்த ஆட்டோவுல வீட்டுக்குப் போங்க” என்று ஒருவாறு சொல்லி ஒப்பேத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வியக் கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். ஒரு பூங்குடுவைக்குள் கொத்தாகச் செருகப்பட்டிருந்த தூரிகைகளில் ஒன்றை எடுத்து வண்ணம் தோய்த்து வெள்ளட்டையில் ஓடவிட்டேன். என்ன வரையப் போகிறேன் என்ற திட்டம் எதுவும் எனக்கில்லை. வரைந்தபின்தான் உணர்ந்தேன். என்னை அறியாமல் நான்வரைந்தது ஒரு சிறுவனின் படம். அதுவும் நான் அடிக்கடி கடந்துபோகும் திருப்பாதிரிப்புலியூர் ரயில்பாதையில்... அடிபட்டுச் சிதைந்து கிடக்கும் சிறுவனின் படம். எப்படி இதை நான் வரைந்தேன் என்று இன்றுவரை புலப்படவில்லை. நான் வரைந்த படத்தைப் பார்த்து நானே அழுதேன்.  படமாக வரையப்பட்ட சிறுவன் எனக்கு வேண்டியவன் இல்லை. என் கண்களில் ஏன் நீர்பெருக்கெடுக்கிறது? அப்போது எழுத்தாளர் வளவ. துரையன் வந்தார். நான் கண்ணீரைத் துடைத்து மறைத்தேன். அதை அவர் கவனித்திருக்க முடியாது. மேசையின் மீது விரித்து வைத்திருந்த சிறுவனின் படத்தைப் பார்த்த அவர், “அட படம் தத்ரூபமாக இருக்கிறது” என்று பாராட்டியதோடு இதை அடுத்த ‘சங்கு” இதழுக்கு அட்டைப்படமாக வச்சிடுங்க. படத்துக்கேற்ப கதையோ கவிதையோ எழுதித் தந்துடுறேன்” என்றார். அவருக்கு வீட்டிலிருந்து போன் வந்தது. “ரமேஷ்... வீட்டுல கூப்புடுறாங்க. நான் அப்பறம் வந்து பாக்குறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். மீண்டும் நான் படத்தைப் பார்த்தேன். படத்தில் இருந்த சிறுவன் என் மனதுக்குள் நுழைந்து என்னமோ பண்ணுகிறான் என்பது தெரிகிறது. எத்தனையோ படம் வரைந்துள்ளேன். எதுவும் இதுபோல் என்மனதைப் பாதித்ததில்லை. படத்தைச் சுருட்டி வைத்தேன். அந்தப் படம் மனதுக்குள் விரிந்தது. அந்தச் சிறுவன் என்னிடம் பேசுவதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது.

ரயில்மோதி இறந்தது என் மகன் இல்லை என்பதில் நான் எல்லையில்லாத சந்தோஷம் அடைந்தேன் என்பது உண்மைதான். இதுபோன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட யாரும் மகிழ்ச்சி அடையத்தான் செய்வார்கள். உள்மனம் என்னை விரல்நீட்டிக் குற்றம் சுமத்தியது. “மகன் இறக்கவில்லை என்று மகிழ்கிறாய். தன்மகன் எனக்கருதி இறந்த யாருடைய மகனுக்காகவோ அழுது புரண்டாய். இப்போதும் அந்த யாரோ ஒருவரின் மகன் இறந்து கிடக்கிறான். ஏன் அவனுக்காக இப்போது கவலைப்படவில்லை. தன் வீட்டில் நடந்தால் அது துக்கம். அடுத்த வீட்டில் நடந்தால் அதைத் துக்கமாக ஏன் கருதுவதில்லை. என்ன இருந்தாலும் ஓர் அரைமணிநேரம் இறந்த சிறுவனை மகனாகக் கருதி அந்தத் துயரை... துக்கத்தை... வலியை நீ அடைந்திருக்கிறாய். இன்னும் அடக்கம் செய்யாமல்  அந்தச் சிறுவன் பிணமாகத்தான் கிடக்கிறான். இந்த நேரத்தில் நீ மகிழ்ச்சியாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்” என்று நீதிக்கூண்டில் ஏறி மனசாட்சி உரக்கப் பேசியது.

ஜெகதீசன் இப்போது என் கடைக்கு வந்தார். அவர் அமைதியாக இருந்தார். “இப்பத்தான் எனக்கு நிம்மதி” என்றார். ஆனால் எனக்கு நிம்மதி இல்லை என்பதை அவர் அறிய மாட்டார். மேலும் சொன்னார்.

“ரயிலில் அடிபட்ட சிறுவனின் இறுதி ஊர்வலம் அஞ்சு மணிக்காம். அந்த இன்னொரு ரமேசும் எனக்கு நண்பர்தான். போய் பாத்துட்டு வந்துடலாமா?.”

நான் எதுவும் சொல்லவில்லை. கடையை விட்டு இறங்கி ஜெகதீசனுடன் புறப்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் சுரங்கப்பாதை தாண்டியதும் வண்டியை நிறுத்தச் சொன்னேன். பூக்கடையில் நிறைய மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. இருந்ததிலே பெரிய மாலையை பேக் செய்யச் சொன்னேன். என்ன விலை என்று ஜெகதீசன் கேட்டார். 350 ரூபாய் என்றார். பேரம் பேசிய ஜெகதீசனைத் தடுத்தேன். பூக்கடைக்காரர்கள் அதிகம் விலை சொல்வது வழக்கம்தான். பேரம் பேசி வாங்குவதும் அங்கு இயல்பான நடைமுறைதான். நான் பூக்கடைக்காரர் கேட்ட விலையை அப்படியே குறைக்காமல் கொடுத்துவிட்டு மாலையை வாங்கிக்கொண்டேன். நான் சாதாரணமாகப் பஸ்நிலையத்தில் கூறுகட்டிக் கொய்யாப்பழம் விற்கும் பாட்டிகளிடம் அடாவடியாகப் பேரம் பேசி மிகக்குறைந்த விலையில் வாங்குபவன்தான். பேரம் பேசுவதில் நான் தேர்ந்தவன் என்பதால் என் நண்பர்கள் எந்தப் பொருள் வாங்கப் போனாலும் என்னை அழைத்துக்கொண்டு போவார்கள். இது ஜெகதீசனுக்கும் தெரியும் என்பதால் என் நடவடிக்கையை விநோதமாகப் பார்த்தார்.

கம்யூனிஸ்ட் ரமேஷ் வீட்டுத் தெருவில் நுழைந்தோம். ஏராளமான கூட்டம். ட்ரம் மற்றும் கிளாரினெட் வைத்து ஒரு இசைக்குழு சோக இசையைக் காற்றில் கரைத்தபடி இருந்தது. “நாதர்முடி மீதிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே” என்று பாடிக் கொண்டிருந்தார். அதில் “நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு” “நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு” என்று உச்ச ஒலியில் வாசித்தார். அதைக் கேட்டதும் கண்ணுக்குள் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது. கண்ணில் அழுகையோடும் கையில் மாலையோடும் வீட்டுக்குள் நுழைந்த நான், சிறுவன் கிடத்தப்பட்டிருந்த குளிர்ப்பெட்டியின் மீது மாலையை வைத்து அதன்மீதே விழுந்து அழுதேன். இறந்த சிறுவன் வீட்டாருக்கு நான் உறவினன் இல்லை. அந்தச் சிறுவனை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. கம்யூனிஸ்ட் ரமேஷ் எனக்குப் பழக்கமில்லை. ஆனால் பீறிட்டு வந்த அழுகையைத் தடுக்க என்னால் முடியவில்லை.

மகனைப் பறிகொடுத்த துயரத்தில் இருந்த கம்யூனிஸ்ட் ரமேஷ், என்னைத் தாங்கிப் பிடித்து அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்காரவைத்தார். அப்போதும் என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

நான் ஏன் இப்படி அழுகிறேன் என்று யாருக்கும் தெரியவில்லை. எனக்கும்தான்.

தினமணி கதிர், 28-10-2018

புத்தகம் உள்ள வீடு














புத்தகம் உள்ள வீடு

வழக்கறிஞர் கோ. மன்றவாணன் 

வ்வொரு வீட்டிலும் சமையலறை, துயிலறை, பூஜையறை, கழிப்பறை, வரவேற்பு அறை, பொருள்வைப்பறை போன்ற அறைகள் உள்ளன. ஆனால் நூலக அறையென்று ஏதும் இல்லை.

எல்லாருடைய வீட்டிலும் பாடப்புத்தகங்கள் இருக்கும். அதைத்தாண்டி இலக்கியம், வரலாறு, அரசியல், சமயம், சமுதாயம், உளவியல், அறிவியல் சார்ந்து ஏதேனும் புத்தகங்களை வாங்கி நம் வீடுகளில் வைத்திருக்கிறோமா? அப்படிக் கேட்டால் “அதற்குத்தான் ஊருக்கு ஊர் நூலகங்கள் இருக்கின்றனவே. நாம் ஏன் புத்தகங்கள் வாங்க வேண்டும்” என்று எதிர்க்கேள்வி கேட்பவர்களே அதிகம். ஒவ்வோர் ஊரிலும் கோவில் இருக்கிறதுதான். அங்குக் கடவுள் உண்டுதான். இருப்பினும் நம் வீட்டில் கடவுள் சிலைகளை வைத்தும் படங்களை வைத்தும் பூசையறை வைக்கவில்லையா? அப்படித்தான் நூலறையோ நூல்அலமாரியோ ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் நம் வீடுகளில் திருக்குறள் புத்தகமாவது உண்டா என்றால் பெரும்பாலும் இல்லை.  புத்தகம் படிப்பது என்பது ஒருசிலரின் பொழுதுபோக்கு என்று பலரும் படிக்காமல் ஒதுங்கிவிடுகிறார்கள். நம் வீட்டுப் பெண்கள் கதைப்புத்தகம் படித்தால்... அது சோறு போடாது என்று தடுக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் உங்கள் வாழ்வில் ஒருநாள் உங்களுக்குத் துணைவரும். அது உங்களுக்கே தெரியாது.  கதைகூட உங்கள் வாழ்க்கையின் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும். நாம் படிக்கின்ற விஷயங்கள் நம்மூளையில் பதிவாகித் தேவைப்படுகிற காலத்தில் நம்மை அறியாமல் சிக்கலைத் தீர்க்க, நன்முடிவுகள் எடுக்க, வாழ்வில் முன்னேற வழிகாட்டும். புத்தகம் படிக்கின்ற சமுதாயமே அறிவார்ந்த சமுதாயம்.

பொருட்களைத் தாள்களில் மடித்துத் தந்தார்கள் அன்றைய வணிகர்கள். அந்தத் தாள்களில் உள்ளவற்றைப் படிப்பது என்பதே சுகமாக இருந்தது. அதைப்படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் உண்டு. அந்த வாசிப்பையும் அழித்துவிட்டன பாலித்தீன் பைகள்.  

நம் வீடுகளில் புத்தகங்களை அடுக்கி வைத்துப் பாருங்கள். அறிவு வெளிச்சம் வீடு முழுவதும் மட்டுமல்ல... நம்வாழ்வு முழுவதும் ஒளிவீசும். நம் வீட்டில் நூலக அறை இருந்தால் அது நமது மதிப்பைப் பிறரிடத்தில் உயர்த்தும். நூலறை இல்லாவிட்டாலும் வரவேற்பறையிலாவது நூல்களை அழகான முறையில் அடுக்கி வைக்கலாம்.

ஆயுத பூசை, சரஸ்வதி பூசையின்போது புத்தகத்தில் பூசையிடப் பாடப் புத்தகங்களின்றி வேறு புத்தகம் இல்லை. விஜயதசமியை முன்னிட்டுப் பல வீடுகளில் பொம்மைகளை அடுக்கிக் கொலு வைப்பார்கள். அதுபோலவே படித்தட்டுகளில் புத்தகங்களையும் அடுக்கிப் புத்தகக் கொலு கொண்டாடினால் வெள்ளைத் தாமரையில் அமர்ந்துள்ள கலைவாணி கொள்ளை மகிழ்ச்சி அடைவாள். பாரதி பிறந்த நாளிலாவது நம் வீடுகளில் புத்தகக் கொலு கொண்டாடினால் தமிழ்த்தாயும் மகிழ்வாள்.

படிக்கும் பழக்கம் பல்கிப் பெருக வேண்டும்; பல்வேறு புத்தகங்கள் பலருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையிலுள்ள குவிகம் இலக்கிய வாசல் அமைப்பினர், புத்தகப் பரிமாற்றம் எனும் நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துகின்றனர். அந்நிகழ்ச்சியில் நிறைய புத்தகங்களைக் காட்சிப் படுத்துகிறார்கள். படித்ததைப் போட்டுப் பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். இதில் காட்சிப் படுத்தப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை குறைவதே இல்லை. ஒன்று கொடுத்தால் ஒன்று கிடைக்கும் என்ற திட்டத்தை இந்தப் புத்தகப் பரிமாற்றத்தில் கையாளுகிறார்கள். இதுபோன்ற நூல்பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஊரிலும் குடியிருப்புப் பகுதியிலும் தொடர்ந்து நடத்திவந்தால் வீடுகள் தோறும் வெவ்வேறு புத்தகங்கள் அறிவுலா செல்லும்.

தூத்துக்குடியில் பொன்.மாரியப்பன் என்பவர், தன் முடித்திருத்தகத்தில் இருநூறு நூல்கள் கொண்ட நூலகத்தை வைத்திருக்கிறார். வாடிக்கையாளர்கள் வீணே காத்திருக்காமல் நல்ல புத்தகங்களைப் படித்து நாலும் தெரிந்துகொள்ளச் செய்கிறார். அதனால் அந்தச் சலூனில் சிகையும் அழகாகிறது. சிந்தனையும் சீராகிறது. இந்த நல்வழியைப் பின்பற்றும் வகையில் காத்திருக்கும் நேரங்களில் வாடிக்கையாளர்களை வாசிப்பாளர்களாக மாற்ற அலுவலகங்களில் சிறு நூலகங்களை அமைக்கலாம்.

எந்த மருத்துவ மனைக்குச் சென்றாலும் காத்திருப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அத்தகைய தருணங்களில் நாமே புத்தகம் கொண்டுசென்று படிக்கலாம். வாசிப்புகூட மனநலத்தை மேம்படுத்தி உடல்நலத்தைச் சீராக்கலாம்.

பிறந்தநாள் திருமண நாள் போன்ற நிகழ்வுகளில் புதுப்புத்தகங்களைப் பரிசளிக்கலாம். அப்படிப் பரிசளிக்கையில் ஒரே தலைப்புள்ள புத்தகங்கள் பல வந்து சேரலாம். அவற்றைப் பிறருக்குக் கொடுத்து உதவலாம்.

நம் பிள்ளைகளைப் பாடப் புத்தகங்களைப் படிக்கச் செய்வதும் கல்வியில் கவனம் செலுத்தச் செய்வதும் முக்கியமானதுதான். வேலை பெறுவதற்காகத்தான் படிப்பு என்று நினைத்துப் பிள்ளைகளை இயந்திரங்களாக ஆக்கிவிட வேண்டாம். பிறப் புத்தகங்களையும் ஓய்வான நேரங்களில் பிள்ளைகள் படிக்க உதவுங்கள். பெற்றோர் புத்தகங்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் வீட்டில் நூலறை வைத்துப் புத்தகங்களை வாங்கி வைத்தால் அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் வாசிப்பாளர்களாக மாறிப் பிற்காலத்தில் விருதுகள் பெறும் படைப்பாளிகளாகவும் மாறுவார்கள். படைப்பாளியாக மாறாமல் போனாலும் புத்தகங்களால் பெறும் அறிவினால் வாழ்வில் சிறந்தவர்களாக வளர்வார்கள்.

நூலகம் ஒன்று திறப்பது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுவதற்குச் சமம் என்பார்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை நூலகம் செல்லப் பழக வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும் நூலகத்தைப் பூட்டி வைத்திருப்பார்கள். அதை இயங்கச் செய்ய வேண்டும்.. வாரம் ஒருமுறையாவது நூலக நேரம் ஒன்றை ஒதுக்கி மாணவர்களை வாசிக்கத் தூண்ட வேண்டும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நகரங்களிலும் கிராமங்களிலும் அரசியல் கட்சியினர் படிப்பகங்களை நடத்தி வந்தனர். சிவாஜி ரசிகர் மன்றம் என்று வைத்திருப்பார்கள் அதனோடு சேர்ந்து காமராஜர் படிப்பகம் வைத்திருப்பார்கள். இத்தகைய படிப்பகங்கள் சிறு கீற்றுக் கொட்டகைகளில் இயங்கும். அங்கு நான்கு சவுக்குக்கால்கள் நட்டு, அதன்மேல் பலகை பொருத்தி இருப்பார்கள். குறுக்கும் நெடுக்குமாக கொடிக்கயிறுகள் கட்டி, நாளிதழ்கள் வார மாத இதழ்களைத் தொங்க விட்டிருப்பார்கள். ஒவ்வோர் இதழையும் ஒவ்வொருவர் நன்கொடையாகப் படிப்பகத்துக்கு வழங்கிவந்தார்கள். அத்தகைய படிப்பகங்கள் இன்றில்லை. ஆனாலும் தேநீர்க்கடைகளில் தினத்தந்தி படிக்கும் வழக்கம் அன்று தொட்டு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. என்றென்றும் அது தொடரும். வெகுசாதாரண மக்களையும் நாளிதழ்களைப் படிக்கச் செய்தவர் சி. பா. ஆதித்தனார். படிப்பறிவு குறைந்த அந்தக் காலத்தில் பாமர மக்களிடம் வாசிப்பைக் கொண்டுசென்று சாதனை படைத்த அவரைச் சரித்திரம் மறக்காது.

புத்தகங்களை வாங்கினால்தான் தமிழில் தரமான சிறப்பான நிறைய நூல்கள் வெளிவரும். வாங்கிப் படியுங்கள். வழங்கிப் படிக்கச் செய்யுங்கள். வாசிப்பது என்பது சுவாசிப்பது போன்ற அனிச்சை செயலாக மாற வேண்டும்.

தினத்தந்தி 23-02-2019



புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதிகள்
























புதுப்பிக்கப்படாத 
இருபெரும் அகராதிகள் 

கோ. மன்றவாணன் 

சென்னைப் பல்கலைக் கழகம் இருபெரும் அகராதிகளை உருவாக்கியது. ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அறிவதற்கான இருமொழி அகராதி. அடுத்தது, தமிழ்ப்பேரகராதி என்ற தமிழ்ச்சொற்களுக்குப் பொருள்தரும் தமிழ் அகராதி. இதனைத் தமிழ் லெக்சிகன் என்று பரவலாகக் குறிப்பிடுவார்கள். இன்றுவரை இந்த இரு அகராதிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமான- ஆதாரப்பூர்வமான- மேம்பட்ட அகராதிகளாகக் கருதப்படுகின்றன.

நாளுக்கு நாள் ஆங்கிலத்தில் புதுச்சொற்கள் வந்தபடியே இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது ஆங்கில அகராதிகள் தம்முள் இணைத்துக்கொண்டு என்றும் புதுமிளிர்வுடன் உள்ளன. தமிழிலும் ஆயிரக்கணக்கான புதுச்சொற்கள் உருவாகித் தமிழை மெருகேற்றி வருகின்றன. புதுச்சொற்களின் சேர்க்கைதான் எந்த மொழியையும் காலத்துக்கேற்ப வளர்ச்சியடையச் செய்யும். மொழியை அடுத்த அடுத்த நூற்றாண்டுகளுக்கு அழைத்துச் செல்லும்.

1959ல் தொடங்கி 1965ல் நிறைவெய்திய ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம்தான் இன்றுவரை நம்பகமான, தலையாய அகராதியாக விளங்குகிறது. ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு எத்தனை பொருள்கள் உண்டோ அத்தனை பொருள்களிலும் தமிழ்ச்சொற்கள் தொகுக்கப்பட்டிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். பிற அகராதிகளிலோ ஓரிரு பொருள்களுக்கு மட்டுமே தமிழ்ச்சொற்கள் வழங்கப்பட்டிருக்கும். முனைவர் ஆ. சிதம்பரநாதன் (செட்டியார்) அவர்கள் முதன்மை ஆசிரியராகவும், பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரை அவர்கள் உதவி ஆசிரியராகவும் இருந்த அகராதி உருவாக்கக்குழுவில் மேலும் சில அறிஞர்கள் இருந்தனர். இரா. பி. சேது(ப்பிள்ளை), மு. வரதராசனார்,    தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (பிள்ளை) போன்ற தமிழ்ப்பேரறிஞர்கள் பலரும் அறிவுரைக்குழுவில் இடம்பெற்று அகராதிக்கு வளம்சேர்த்துள்ளனர்.

ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கவும், புதுச்சொற்களை உருவாக்கவும் பலருக்கும் இந்த அகராதிதான் பெரிதும் துணைபுரிகிறது. தனிமாந்தராக நின்று, நூற்றுக்கணக்கான சட்டங்களை அவற்றின் நுண்பொருள்கள் திரியாமல் மொழிபெயர்த்து வெளியிடுகிற சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்களிடம் நான் பேசிய போது, சட்ட நூல்களைத் தமிழில் கொண்டுவருவதற்கு இந்த அகராதிதான் அடிப்படை என்றார். மேலும் ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பலதமிழ்ச் சொற்களில் ஏதாவது ஒருசொல் பொருத்தமாகக் கிடைத்துவிடும். அல்லது அந்தச் சொல்லிலிருந்து நீ்ட்டியோ குறுக்கியோ சற்று மாற்றியோ புதுச்சொல்லை உருவாக்கிவிடமுடியும் என்றார்.

ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தமிழிலும் ஆங்கிலத்திலும் புதுச்சொற்கள் குவிந்துவிட்டன. மேலும் அந்த அகராதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல தமிழ்ச்சொற்கள் கூட, இன்றைய அளவில் மாற்றப்பட்டுப் புழக்கத்தில் வழக்கத்தில் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக license என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணக்க முறி, இணக்க ஆணை, இசைவுரிமை என்றவாறு பொருள்தரப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில் லைசன்ஸ் என்ற அந்தச் சொல்லுக்கு உரிமம் என்ற இன்னும் பொருத்தமான தனிச்சிறப்பான சொல் வந்துவிட்டது. அதுபோல் Bus என்பதற்கு விசைக்கலம் உந்துவண்டி ஆகிய தமிழ்ச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் Bus என்பதற்குப் பேருந்து என்ற சொல் வந்து நிலைத்துவிட்டது. ஆனால் இந்த உரிமம், பேருந்து ஆகிய சொற்கள் இன்றுவரை அந்த அகராதியில் ஏறவே இல்லை. இவைபோன்ற திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட வேண்டியுள்ளன. 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்ட எந்த ஆங்கிலச் சொல்லுக்கும் இந்த அகராதியில் இடம்இல்லை. அகராதியைப் புதுப்பிக்க எந்த நடவடிக்கையையும் சென்னைப் பல்கலைக் கழகம் எடுக்கவில்லை. இருந்தாலும் நல்வாய்ப்பாக அந்த அகராதியை ஒளிவருடல் செய்து மறுபதிப்பு செய்து வந்துள்ளனர். ஆனாலும் பரவலாக விற்பனைக்குக் கிடைப்பதில்லை என்பது ஒருகுறைதான்.

தமிழ்ப்பேரகராதி

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழில் நிகண்டுகள் என்ற பெயரில் அகராதிகள் இருந்தன. எட்டாம் நூற்றாண்டில் திவாகரம் என்ற நிகண்டு உருவாகி உள்ளது. பிங்கலம், சூடாமணி, பாரதி தீபம், அகராதி நிகண்டு என ஏராளமான நிகண்டுகள் இருந்துள்ளன. அகர வரிசையைப் பின்பற்றி, சிதம்பர இரேவண சித்தர் என்பவரால் 1594ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றஅகராதி நிகண்டுஎன்பதே உலகின் முதல் அகராதி என்று கூறுகிறார், அகராதிக் கலை என்ற நூலை எழுதிய சுந்தர சண்முகனார். ஆனால் இந்த அகராதி செய்யுள் நடையில் இருந்தது. மேலும் முதலெழுத்து ஒன்றியே அந்த அகராதி அமைந்தது. அடுத்தடுத்த எழுத்துகள் ஒன்றியவாறு அமையவில்லை.  அதன்பின்தான் 1612ஆம் ஆண்டில் இத்தாலி மொழியில் முதல்முதலாக அகரவரிசையில் அகராதி தோன்றியது. அகராதிக் கலையில் ஐரோப்பியர்கள் செல்வாக்குச் செலுத்தியவர்கள் என்றாலும், அகராதிக்கலையைத் தொடங்கியவர்கள் தமிழர்களே!

தமிழில் அகராதி என்ற சொல்லையும் முதன்முதலாகக் கையாண்டவர் சிதம்பர இரேவண சித்தராக இருக்கலாம். அகரத்தை முதலாகக் கொண்டு தொகுக்கப்படுவதால் அகராதியெனப் பெயர்சூட்டி இருக்கலாம். இருபதாம் நூற்றாண்டில் அதையே அகரமுதலி என அழைத்தார் பாவாணர்.

தமிழுக்குச் சற்றும் தொடர்பில்லாத இத்தாலி மொழிபேசிய வீரமாமுனிவர் தமிழ்கற்று, தமிழ்காப்பியம் படைத்து, தமிழ்எழுத்துச் சீர்திருத்தம் செய்து, தமிழ் உரைநடை வளர்த்துள்ளதோடு மட்டுமல்லாமல் சதுரகராதி என்ற தமிழ்அகராதியை 1732 ஆம் ஆண்டில் முதன்முதலில் உரைநடையில் உருவாக்கித் தந்துள்ளார். இதுதான் முழுமையான அகர வரிசையில் உருவான முதல் அகராதி ஆகும். தற்கால அகராதிகளுக்கு எல்லாம் இதுவே முன்னோடி. தமிழ் – இத்தாலி  இரு மொழி அகராதி, தமிழ் - இத்தாலி – போர்ச்சுகீசியம் என்ற மும்மொழி அகராதி ஆகியவற்றையும் உருவாக்கித் தமிழ்பரவப் பாடுபட்டுள்ளார். அதனால்தான் வீரமாமுனிவரை அகராதியின் தந்தை என அழைக்கிறோம். அவரைப் போலவே தமிழ்கற்றுத் தேர்ந்த பல பாதிரியார்களின் பெருமுயற்சிகளால் பல தமிழ் - ஆங்கிலம் அகராதிகள் வெளியிடப்பட்டுள்ளன. பேப்ரீசியஸ் அகராதி, வின்சுலோ அகராதி, ராட்லர் அகராதி ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இந்தக் காலக் கட்டத்தில் நம்நாட்டுப் பேரறிஞர்கள் பலர், தங்களின் தனிப்பட்ட முயற்சிகளால் சிறப்பான அகராதிகள் பலவற்றை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்துள்ளனர்.

இந்நிலையில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை அரசும் சென்னைப் பல்கலைக் கழகமும் இணைந்து தமிழ்ப்பேரகராதியை ஒரு லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் உருவாக்கத் திட்டமிட்டது. நிறைவடையும் போது ரூ. 4,10,000 செலவாகி இருந்தது. இந்த அகராதிக்காகப் பல்வேறு குழுக்கள் நிறுவப்பட்டன. அக்குழுக்களில் பல்வேறு மொழிப்புலவர்கள், சமய அறிஞர்கள், தமிழறிஞர்கள், வழக்கறிஞர்கள் இடம்பெற்று நற்பணிக்கு- சொற்பணிக்குத் துணைநின்றுள்ளனர். முதன்மை ஆசிரியராக சாண்ட்லர் என்பவர் 1913 முதல் 1922 வரை பணியாற்றியுள்ளார். இறுதியாக ச. வையாபுரி பிள்ளை அவர்கள் முதன்மை ஆசிரியராக 1926 முதல் பணியாற்றி அகராதித் தொகுப்பை 1939ல் நிறைவு செய்துள்ளார். ஆற்றல் வாய்ந்தவர்களின் அரும்பெரும் முயற்சிகளால் இணைப்புத் தொகுதியையும் சேர்த்து ஏழு  தொகுதிகளாகத் தமிழ்ப்பேரகராதி உருவாக்கப்பட்டது. இதில் 1,24,405 சொற்கள் உள்ளன. அந்தத் தமிழ்ச்சொற்களுக்கு உரிய தமிழ்ப்பொருள்கள் மட்டுமன்றி ஆங்கிலப்பொருள்களும் தரப்பட்டுள்ளன என்பது தனிச்சிறப்பு. ஒவ்வொரு சொல்லுக்கும் இலக்கியச் சான்றுகள் உள்ளிட்ட பல குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரகராதியும் கால வளர்ச்சிக்கு ஏற்பப் புதுப்பிக்கப்படாமல் அப்படியே உள்ளது. மேலும் மறுபதிப்புகளும் அவ்வளவாக வரவில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டில் பேரகராதியின் முதல்தொகுதியை மட்டும்  சென்னைப் பல்கலைக் கழகம் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. பிற தொகுதிகள் விற்பனைக்கும் இல்லை. மறுபதிப்பும் காணவில்லை.

ஆனாலும் தற்காலச் சூழலுக்கேற்பத் தனிஆர்வலர்கள் சிலர் தமிழ் – தமிழ் அகராதிகளை உருவாக்கி உள்ளனர். அதில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடத்தக்கது. அதுவும் மறுபதிப்புக் கண்டபோது மேலும் பல சொற்களை இணைத்துக்கொண்டது போற்றற்குரியது.  1925ஆம் ஆண்டிலே கூட ச.பவானந்தம் (பிள்ளை) முயற்சியில் தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியொன்று வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சையில் இயங்கும் தமிழ்ப்பல்கலைக்கழகமும் குறிப்பிடத்தக்க அளவில் பெருஞ்சொல்லகராதி, கலைச்சொல் அகராதி உள்ளிட்ட பல அகராதிகளை வெளியிட்டுள்ளன. அவற்றுள் பல அகராதிகள் பதிப்பகத்துறையில் இருப்பு இல்லை. மேலும் தமிழக அரசின் கலைச்சொல்லாக்கக் குழுவின் முயற்சியால்  கலைச்சொல் பேரகராதி 14 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.  சென்னைப் பல்கலைக் கழகத்தின் இரு பேரகராதிகளும் தமிழக அரசின் கலைச்சொல் பேரகராதியும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய தளத்தில் காணக் கிடைக்கின்றன என்பது பேராறுதல்,

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், அண்மைக்காலமாகத் தான் எழுதிவரும் படைப்புகளில் கட்டுரைகளில் புதுப்புது நேர்த்தியான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி வருகிறார். மேலும் பிறமொழிச் சொற்களுக்கு உரிய அழகிய தமிழ்ச்சொற்களை உருவாக்கித் தருகிறார். அந்தப் பிறமொழிச் சொற்களைப் பெரும்பாலும் அவர் அடைப்புக்குறிக்குள் எழுதுவதில்லை. அப்படி எழுதாமலே அந்தச் சொற்கள் நமக்குள் நுழைந்து அறிமுகமாகி உடன்பழகிவரும் தோழர்கள்போல் மாறிவிடுகின்றன. தேய்வழக்காகிப் போன தமிழ்ச்சொற்களுக்குக்கூடப் புதுச்சொற்களைப் படைத்து வருகிறார். இவரைப் போலவே நம் மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள், பல்வேறு தளங்களில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், புதுச்சொற்களை உருவாக்கி வருகின்றனர். தற்போது நிகழ்ந்துவரும் நவீன கவிதைப் போக்கில் புதுப்புதுச் சொல்லாட்சிகள் உருவாகி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தனித்தமிழைக் கொள்கையாகக் கொண்டவர்களின் சொல்லாக்கங்கள் நிறைந்துள்ளன. தினமணியின் தமிழ்மணியில் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன், தமிழறிஞர் தெ. ஞானசுந்தரம் ஆகியோரைக் கொண்டு சொல்வேட்டை நடந்தது. தினமணியின் இந்த முயற்சியால் பல புதுச்சொற்கள் உருவாக்கப்பட்டு நாளிதழ்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.

தன்னார்வமாய் வட்டாரச் சொற்களைத் தொகுத்துப் பலர் வெளியிடுகின்றனர். துறைதோறும் உள்ள கலைச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைப் பலர் தாமாக உருவாக்கியும் தொகுத்தும் சொந்தச் செலவில் வெளியிட்டும் வருகின்றனர் என்பது ஆறுதல் தரக்கூடியது. பல்வேறு துறைகளின் கலைச்சொற்களுக்கு இணையாகத் தமிழில் சொற்களைப் படைத்தளித்தவர்களில் மணவை முஸ்தபா மற்றும் புலவரும் பொறியாளருமான செந்தமிழ்ச் சேய் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இச்சொற்களை எல்லாம் ஒருங்கிணைத்து அதிகாரப் பூர்வமான அகராதிகளை உருவாக்க வேண்டியது அதிகார அமைப்பின் கைகளில்தான் உள்ளது.

ஒரு கோவில் என்றாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு என்ற பெயரில் கட்டாயம் புதுப்பிக்கும் பணியைச் செய்கிறார்கள். அதனால்தான் அந்தக் கோவில்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்று வருகின்றன. அதுபோல்தான் அகராதிகளும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

தமிழுலகில் எத்தனை அகராதிகள் வந்திருந்தாலும் இன்றளவும் அறிஞர்களால் பெரிதும் ஆளப்படும் அகராதிகள் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப்பேரகராதி மற்றும் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம் மட்டும்தாம். முன்னரும் பின்னரும் வந்த அகராதித் தொகுப்புகளையும் இன்னும் தொகுக்க வேண்டிய சொற்களையும் உள்ளிட்டு மேலும் சிறப்பான முறையில் மேற்கண்ட இரு அகராதிகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

பள்ளங்களா? பலிபீடங்களா?
















பள்ளங்களா? பலிபீடங்களா?



சாலை விபத்துகள் நடக்காத நாளில்லை. சாலையில் நடப்பதே ஆபத்தாகவும் விபத்தாகவும் முடிகிறது. அதைமீறி நடந்து வீடுவந்து சேர்வதே சர்க்கஸ் வித்தை ஆகிவிட்டது. காலையில் தொலைக்காட்சியில் ராசிபலன் சொல்பவர்கூடச் சாலையில் செல்பவர்கள் கவனமாகச் செல்லுங்கள் என்று எச்சரிக்கிறார். .மிகுவேகமும், கவனக்குறைவும், பின்விளைவுகள் பற்றிக் கவலைப்படாத முரட்டுத்தனமான ஓட்டும் முறையும்தாம் விபத்துகளுக்குக் காரணங்கள் என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். எல்லா விபத்துகளுக்கும் ஏதோ ஒரு வாகனத்தின் ஓட்டுநர்தான் காரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. விபத்துகளுக்குச் சாலைகளும் காரணம் என்பதை நாம் அறவே மறந்துவிடுகிறோம்.

சாலைகளில் உள்ள சரிசெய்யப்படாத பள்ளங்களால் 2013 முதல் 2017 வரை 14,926 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.  இதற்காக வருந்துகிறோம் என்று அண்மையில் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. சிந்தித்துப் பார்த்தால் அந்த இறப்புகளின் பின்னணியில் 14,926 குடும்பங்கள் தங்களின் எதிர்காலத்தைத் தொலைத்திருக்கின்றன.

சாலையில் ஒருபள்ளம் ஏற்பட்டால் அதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை. வாகனம் ஓட்டிவரும்போது அருகில் வந்த பின்புதான் அந்தப் பள்ளம் இருப்பதே தெரியவரும். நாம் சமாளித்து பிரேக் பிடிப்பதற்குள் விபத்து நடந்து நினைவுதவறி மருத்துவ மனையில் படுத்திருப்போம். மழைபெய்துவிட்டால் எங்கே பள்ளம் இருக்கிறது என்பதே தெரியாது. மிகப்பெரும் நகரங்களிலும் மழைநீர் வழிந்தோட சரியான கால்வாய்கள் இல்லை. சிறுமழை பெய்தாலே முழங்கால் ஆழத்துக்குச் சாலைகளில் தண்ணீர் நிற்கிறது. இரவு நேரம் என்றாலும் என்னதான் முகப்பு விளக்கு எரிந்தாலும் பள்ளங்களைச் சரியாகக் கவனிக்க முடிவதில்லை. அவ்வாறு சாலையில் ஒருபள்ளம் ஏற்படும்போது நித்தம் நித்தம் ஒருசிலர் விழுந்து கைகால்கள் உடைந்து, ரத்தம் சிந்துகின்றனர். அடிபட்ட பிறகு மருத்துவ மனைக்கு நடையாக நடந்தும் அல்லது தூக்கிச் செல்லப்பட்டும், மணிக்கணக்கில் காத்திருந்தும், கடன்வாங்கிச் செலவு செய்தும், வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானம் இழந்தும் வாடுகின்றனர். இத்தகையப் பள்ளங்களைப் பலரும் பார்த்தபடியேதான் போய்வருவார்கள். யாருக்கும் அக்கறை இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கார்களும் அச்சாலையில் போய்வந்தபடிதான் இருக்கும். அப்படிப்பட்ட சாலைகளில் நானும்தான் போய்வந்து கொண்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் நான்பார்த்த சம்பவம் ஒன்று. சாலையோரக் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். அந்தச் சாலையில் ஒரு பள்ளம் இருந்தது. வாகன ஓட்டிகள் தடுாறிச் சென்றார்கள். பிச்சை எடுத்து வாழ்வு நடத்தும் ஒரு மூதாட்டி, நீண்ட குச்சியைக் கொண்டுவந்து அதில் அழுக்கடைந்த சிவப்புநிறக் கந்தல் துணியைக் கட்டி, அந்தப் பள்ளத்தில் செருகிச் சென்றார். அதைப்பார்த்துப் பல ஆண்டுகள் ஆனபின்னும் ஒருவிதக் குற்ற உணர்வு என்மனதை அரித்துக்கொண்டுதான் இருக்கிறது. விபத்து நடக்கக் கூடாது, யாரும் பாதிக்கக் கூடாது என்ற எண்ணம் அந்த மூதாட்டிக்கு இருப்பதைப் பாராட்ட யாருமில்லை. அதுபோன்ற பள்ளத்தில் விழுந்து யாரேனும் இறந்துபோனால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளது.

சாலைகளை அமைப்பதற்கு ஒப்பந்ததாரர்களை அரசு நியமிக்கிறது. அதிகாரிகள் ஒப்பந்தப் பணிகளைக் கண்காணிக்கிறார்கள். அரசு ஒதுக்கீடு செய்யும் பெருந்தொகை பல படிகளைக் கடந்து வரவேண்டி இருக்கிறது. படிப்படியாகப் பணம்கரைந்து கடைசியில் கட்டுமானத்தில் சிறுதொகைதான் செலவிடப்படுவதாகச் சொல்கிறார்கள். யாமறியோம் பராபரமே. இருபதுபேர் இருக்கும் ஒருவரிசையில் ஒரு ஐஸ்கட்டியை முதலில் இருப்பவரிடம் கொடுத்து அடுத்தடுத்து அதைக் கைமாற்றச் சொன்னால், அந்த ஐஸ்கட்டி கடைசி நபரிடம் வரும்போது ஒருசொட்டு நீராக மாறி இருக்கும். திட்டங்களுக்காக அரசு ஒதுக்கும் பணமும் இப்படித்தான் கடைசியில் சொட்டு நீராகிவிடுகிறதோ... என்னவோ? ஆனால் சாலைகள் தரமானதாக இருப்பதில்லை. சில நாட்களிலேயே பல்லாங்குழிகளாகி விடுகின்றன. ஒரு மழைக்கு நம் சாலைகள் தாங்கவில்லை என்றால் யாரிடத்தில் குறை? இதற்கென்ன தீர்வு என்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். ஐநூறு ரூபாய்க்கு வாங்குகிற ஒருபொருளுக்கு அந்நிறுவனம் ஓராண்டோ இரண்டாண்டோ உத்தரவாதம் தருகிறது. உத்தரவாதம் உள்ள பொருட்களைத்தான் நாம் வாங்குகிறோம். இலட்சக் கணக்கில் செலவு செய்து போடப்படும் சாலைகளின் தரத்துக்கு மூன்றாண்டுகள் உத்தரவாதத்தை ஒப்பந்ததாரர்கள் தரவேண்டும். அந்த மூன்றாண்டுகளுக்கும் அந்தச் சாலையின் பராமரிப்பை ஒப்பந்ததாரர்களே ஏற்க வேண்டும். சாலைத் தரத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

சாலைகளை அரசுதான் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஒருநியதி உண்டு என்றாலும் பொதுமக்களுக்கும் அக்கறை வேண்டும். கல்யாணங்கள், கட்சிக் கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறுகிற போது புதிதாகப் போடப்பட்ட சாலைகளில்கூடக் குழிகள் தோண்டி வரவேற்பு வளைவுகள் வைக்கிறார்கள். கட்சிக்கொடிகள் நடுகிறார்கள். சாலைகளைச் சேதம் செய்கிறார்கள். விழா முடிந்ததும் அந்தப் பள்ளங்களை மூடவும் செய்யாமல் கழிகளையும் துணிகளையும் பிரித்து எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். அந்தப் பள்ளங்கள் நாளடைவில் பெரும்பள்ளங்களாக வளர்ச்சி அடைகின்றன. அவற்றால் ஏற்படும் விபத்துகளும் ஏராளம்.

அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சாலைகளில் பள்ளங்கள் தோண்டிப் பணிசெய்கிறார்கள். பலநாட்கள் மூடாமலே இருக்கிறார்கள். பின்னர் பள்ளங்களை மேலோட்டமாக மூடிவிட்டுப் போய்விடுகிறார்கள். அவை அடுத்தடுத்த நாட்களில் மரணக்குழிகளாக மாறி அச்சுறுத்துகின்றன. சிறுபள்ளம்கூடப் பெருவிபத்துகளை ஏற்படுத்திவிடுகின்றன.

சாலையில் பள்ளம் படுகுழிகள் ஒரு பக்கம் என்றால் ஆக்கிரமிப்புகள் மறுபுறம். சாலையோரம் கல்கட்டடத்தில் கடைவைத்திருப்பவர், வெயிலை மறைக்கக் கடையின் முன்னால் ஆறடி நீளத்துக்குத் தகரப்பந்தல் அல்லது பிளாஸ்டிக் பந்தல் போட்டிருப்பார்கள். அதற்கடுத்துக் கொஞ்ச தூரத்தில் இருபக்க விளம்பரப் பலகையை நிற்கவைத்து இருப்பார்கள். பிறகு அந்த விளம்பர போர்டுக்கு அருகிலும் அதற்குப் பின்னாலும் வாகனங்களைப் பொதுமக்கள் தாறுமாறாக நிறுத்தி இருப்பார்கள். சிலர் தரைக்கடைகள் தள்ளுவண்டிக் கடைகள் வைத்திருப்பார்கள். எண்பதடி சாலைகள் இருபதடியாகக் குறுகிப்போகும். இதற்குப் பொதுமக்களாகிய நாம்தான் காரணம். இத்தகைய ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்ளாமல் பொதுமக்களை ஊக்குவிக்கும் அரசுத் துறைகளும் காரணம். இப்படிச் சாலை குறுகி விடுவதாலும் வாகனப் பெருக்கத்தாலும் சாலைவிதிகளை மதிக்காததாலும் விபத்துகள் நடந்துவிடுகின்றன.

அகலமான தரமான மழைநீர் தேங்காத சாலைகள் அமைக்க வேண்டும். அதிகப் போக்குவரத்துப் பகுதிகளில் சாலைப்பிரிப்பு மதில்கள் நிறுவ வேண்டும். அதில் யாரும் தாண்டிக் குதித்துச் செல்லாதவாறு தடுக்க வேண்டும். சாலைகளின் இருபுறங்களிலும் நடைபாதைகள் இருக்க வேண்டும். சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் அகற்ற வேண்டும். தயவு தாட்சண்யத்துக்காகப் பல உயிர்களைப் பலிகொடுக்க வேண்டியதில்லை. சாலைகளில் பள்ளம் ஏற்படும்போது உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்து விபத்தைத் தடுக்கச் சில சாலைகளை ஒருவழிச் சாலைகளாக மாற்றிட வேண்டும். சுற்றிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஒருவழிச் சாலையில் மீறி நுழையும் மனப்பான்மை மக்களுக்கு இருக்கக் கூடாது. நெரிசல் மிகுந்த சாலைகளில்... மற்றும் மருத்துவமனை, கல்வி நிலையங்கள் உள்ள பகுதிகளில் சாலையைக் கடப்பதற்கு நடைமேம்பாலங்களோ சுரங்கப்பாதைகளோ அமைத்தல் வேண்டும்.

வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் சாலைவிதிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். சாலைகளில் எங்கேனும் பள்ளம் இருப்பதைக் கண்டால் கைகளால் மண்ணிட்டு மூடுங்கள். இயலாவிட்டால் சிவப்புத் துணி கட்டிய குச்சியையாவது அந்தப் பள்ளத்தில் நட்டுச் செல்லுங்கள். உயிர்கள் உங்களை வணங்கும்.