அன்பு நிரம்பி வழியும் வீட்டைவிட்டு
அம்மா அவிக்கும் இட்டிலியைத் துறந்து
அயல்நாடு சென்று பொருள்குவித்தாலும்
நவீன வனவாசம்தான்
விடுதியில் தங்கிப் படித்தாலும்
வேறு வேறு நண்பர்கள் சூழ்ந்திருந்தாலும்
சிறுபருவத்தில் தோள்உரசி நடந்த தோழனைச்
சிலகாலம் பிரிவதும் வனவாசம்தான்
கடல்பரப்பில் தொடுவானம் தாண்டும் மீன்களைக்
கண்ணாடிப் பேழையில் வைத்துக் கொஞ்சினாலும்
கயல்களுக்கு வனவாசம்தான்
நேற்று மாலை சந்தித்த காதலியை
இன்று காலை சந்திக்கும் வரை
பதினான்கு ஆண்டு வனவாசம்தான்
சம்பளப்பணிக்குச் செல்லும் தாயின் மடிபிரிந்து
சம்பள ஆயாவின் கைசேரும் பிள்ளைகளுக்குச்
சாயுங்காலம்வரை வனவாசம்தான்
வேரைவிட்டு மரம் நடந்து போவது போல்தான்
நீரைவிட்டு மீன்தாண்டிப் போவது போல்தான்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு வனவாசம்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment