Friday, 14 December 2018

வனவாசம்




















அன்பு நிரம்பி வழியும் வீட்டைவிட்டு
அம்மா அவிக்கும் இட்டிலியைத் துறந்து
அயல்நாடு சென்று பொருள்குவித்தாலும்
நவீன வனவாசம்தான்

விடுதியில் தங்கிப் படித்தாலும்
வேறு வேறு நண்பர்கள் சூழ்ந்திருந்தாலும்
சிறுபருவத்தில் தோள்உரசி நடந்த தோழனைச்
சிலகாலம் பிரிவதும் வனவாசம்தான்

கடல்பரப்பில் தொடுவானம் தாண்டும் மீன்களைக்
கண்ணாடிப் பேழையில் வைத்துக் கொஞ்சினாலும்
கயல்களுக்கு வனவாசம்தான்

நேற்று மாலை சந்தித்த காதலியை
இன்று காலை சந்திக்கும் வரை
பதினான்கு ஆண்டு வனவாசம்தான்

சம்பளப்பணிக்குச் செல்லும் தாயின் மடிபிரிந்து
சம்பள ஆயாவின் கைசேரும் பிள்ளைகளுக்குச்
சாயுங்காலம்வரை வனவாசம்தான்

வேரைவிட்டு மரம் நடந்து போவது போல்தான்
நீரைவிட்டு மீன்தாண்டிப் போவது போல்தான்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு வனவாசம்

-கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment