எழுதும் பேசும் சொற்களின்
இடைவெளியை நிரப்பும்
மவுனமாய் மலரும் கவியொன்று
முதுகில் ஒட்டிப் பிறந்தவைதாம்
வடதுருவமும்
தென்துருவமும்
இடைவெளி எனும் சொற்கூட்டில்
வெளியேறிப் போனது
இடைவெளி
என்
தோட்டத்துப் பூவின் பனித்துளியில்
சுடர்ந்தது
தூரத்து மலைக்கோவில்
நிலவுக்கும்
நிலத்துக்கும் பிரிவில்லை
குளத்தில் நீராடுது நிலா
என்னைப் பிரிந்து எங்கோ சென்றாள்
கண்தொலைவுக்கு அப்பாலும்
கடல்தொலைவுக்கு அப்பாலும்
எங்களுக்குள்
இடைவெளியை உருவாக்கவிடாமல்
காவல் புரிகின்றன
காதல் நினைவுகள்
இடைவெளியின் இருபுறங்களையும்
இணைத்தபடியே இருக்கும்
கண்ணுக்குத் தெரியாத
காந்தக் கோடுகள்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment