“நீ அழகு” எனச் சொல்ல மறந்து
நிலவை அழகென்றேன்
உன் சொல்லமுது இனிதென அருந்தாது
தமிழருந்தினேன்
உன் விழி படபடப்பை ரசிக்காமல்
பட்டாம்பூச்சியின் சிறகசைப்பில்
சிறைபட்டு மகிழ்ந்தேன்
இன்று மலர்ந்த ரோஜாவை
உனக்குச் சூட்டாமல்
அம்மனுக்கு வைத்து அழகு பார்த்தேன்
உன்
பட்டாடையின் வனப்பில் மயங்காது
பஞ்சவர்ணக்கிளியின் நிறத்தில்
மனம்கரைந்து போனேன்.
எல்லாம்
உனக்குள் உள்ளபோது
வெளியில் எட்டிப்பார்த்ததில்
வெளிப்பட்டன மாயைகள்
மன்னிப்பாயா?
-கோ. மன்றவாணன்