Thursday, 2 February 2017


மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு

மின்னும் கண்களில்
மிளகாய்ப் பொடிதூவி
மிரட்சியில் அலற வைக்கிறீர்கள்

முரட்டுத் தோல்தான் என்றாலும்
கோணி ஊசியால் குத்தி
ரத்த தரிசனம் காணுகிறீர்கள்

கழுநீர்ப் பானையில்
மதுநீர்க் கலந்து
வெறிகொள்ளச் செய்கிறீர்கள்

நுரைகக்கிச்
சுருண்டு விழும்போதும்
கருணையை மிதித்து
வீரக்கொடி ஏற்றுகிறீர்கள்

எங்களை
வதைப்பதால்தான்
தமிழ்ப்பண்பாடு தழைக்கும் என்றால்
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற
மீசைக் கவிஞனின் மார்பை முட்டுங்கள்

அட..
ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்
உங்கள் தலைகளில்
நஞ்சு தடவிய கொம்புகள் முளைத்திருப்பதைத்
தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் 

ஜல்லிக்கட்டில்
தமிழ்வீரம் பேசும் மாவீரர்களே…
தமிழ்ப்பெண்ணை மணக்கப்
புலியோடு போரிட்டுக்
கூர்ப்பற்களைக்
கொண்டு வாருங்கள்

பிரியாணி சாப்பிட்டபடி
மாடுகளுக்காக அழும் உங்களின்
அருட்பிரகாசத்தின் முன்
அணைந்துபோகலாம்
வள்ளலார் ஜோதி

நவீன நகரங்களை அமைத்தாலும்
உங்களைவிட்டுப் போகவில்லையே
காட்டுமிராண்டி வாழ்க்கை

நனிநாகரிகம் காண
ஜல்லிக்கட்டோடு சேர்த்துப்
பிரியாணிக் கடைகளையும் மூடுங்கள்

இப்படிக்கு
உங்கள் இதய வாயிலில்
ஆராய்ச்சி மணி அடிக்கும்
காளைகள்

- கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment