தேர்தல்
நாள்
வாக்காளர்கள்
“ஒருநாள் நீதிபதிகளாக”
பதவிபெறும் நாள்
ஜனநாயகக் கோவிலுக்கு
ஐந்தாண்டுக்கொருமுறை
குடமுழுக்கு நாள்
பழையக் கொள்ளைக்காரர்களுக்கு விடைகொடுத்து
புதிய கொள்ளைக்காரர்களுக்கு மாலைசூட்டும்
ஏமாளிகள் நாள்
ஒவ்வொரு தேர்தலிலும்….
இனியும்
கருமைதான் வாழ்வென்று சுட்டும்
விரல்மை
பணக்கட்டுகளின்
உயர அகலங்களை வைத்தே
தேர்தல் முடிவு
நம் கண்களில்
புழுதியை வாரி இறைத்துவிட்டுப் போகும்
வேட்பாளர்களின் வாகனங்கள்
தெருவெங்கும்
மதுவின் ராஜ உலா
மதுக்கடைகளுக்கு விடுமுறை விட்டும்..
தேர்தல் பொய்களைத்
தினமும் கேட்கும்
நம்
காதுகளில் பூக்காடுகள்
ஓட்டை விற்று
நாட்டைக் களவு கொடுப்பது
நம் மரபு
நடுநிலையோடு
நல்லவருக்கு வாக்களியுங்கள் என்று
நாலுபேர் சொன்னார்கள்
நல்லவரைக் காணாமல்
வாக்களித்தேன்
நோட்டாவுக்கு
தேர்தல் நாள்
மற்றுமொரு
வழக்கமான நாளானது
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment