Saturday, 8 February 2025

ஞாயிறாய் ஒளி வீசும் தமிழ் அறிஞர்


 

ஞாயிறாய் ஒளி வீசும்

தமிழ் அறிஞர்



முன்சொல் கேளீரோ...

 

தமிழில் இப்படி ஒரு மொழி அறிஞர் இவருக்கு முன் இல்லை. இவருக்குப் பின்னும் இல்லை. எனினும் பாவாணரை அடிஒற்றி மொழியியல் ஆய்வாளர்கள் மிகச் சிலரே உள்ளனர்.

உரிய அளவில் பாவாணரைப் போற்றிக் கொண்டாடத் தவறிவிட்டது தமிழ் உலகம் என்பதில் வருத்தம் உண்டு. தமிழ்படித்த பலருக்கே பாவாணரைத் தெரியவில்லை என்பது பெருந்துயர்.

பாவாணர் யார்? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் இந்நுால்.

பாவாணரின் வாழ்வும் பணியும் குறித்து அறிமுகம் செய்கிறது இந்த மின்நுால்.

இந்த வரலாற்றுக் கட்டுரையைச் சங்கொலியில் வெளியிட்ட மக்கள் நேயர் வைகோ, திராவிட வரலாற்று ஆய்வாளர் க. திருநாவுக்கரசு ஆகியோர்க்கு இந்த நேரத்தில் நன்றி.

இந்நுாலைப் படிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தமிழ்ப்பேரறிஞரைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் நேரமும் இருந்தால் படியுங்கள்.

பணிவுடன்


கோ. மன்றவாணன்.

  

 


ஞாயிறாய் ஒளி வீசும்

தமிழ் அறிஞர்

 

ஒருவரை நிரந்தரமாக மறந்துவிடுவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று பொன்னாடை போர்த்துவது; இன்னொன்று நுாற்றாண்டு விழா கொண்டாடுவது என்று கண்ணதாசன் சொன்னதுபோல், தேவநேயப் பாவாணர் மறக்கப்படக் கூடியவர் அல்லர்.

     இவர்  போன்ற மொழிநுால் அறிஞர்கள் இந்த உலகில் மிகமிகக் குறைவு. இவர்க்கு இணையான மொழிநுால் அறிஞர்கள் இதுவரை இல்லை. இனிப் பிறக்கப் போவதும் இல்லை என்ற அளவுக்கு மொழி அறிவில் முத்திரை பதித்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

 


வாழ்க்கைக் குறிப்பு

     திருவள்ளுவர் ஆண்டு 1933 சுறவம் (தை), திங்கள் 26 ஆம் நாள் (07-02-1902) அன்று திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள பெரும்புத்துார் என்ற ஊரில் பாவாணர் பிறந்தார். அவரின் இயற்பெயர் தேவநேசன்.

     அவரின் தந்தையார் பெயர் ஞானமுத்து. தாயார் பரிபூரணம் அம்மையார். தம் ஐந்தாம் அகவையில் தந்தையைப் பறிகொடுத்தார். அடுத்த சில காலத்திற்குள் அன்னையையும் இழந்தார். அதன்பின் தன் மூத்த அக்காவின் பாதுகாப்பில் வளர்ந்தார்.

     பாவாணரின் முதல் மனைவி எசுதர் ஆவார். மணவாள தாசன் என்ற ஆண்மகவை ஈன்ற பிறகு எசுதர் இறந்துவிட்டார். அதன்பிறகு தன் அக்காள் மகள் நேசமணியை மணந்துகொண்டார். தேவநேசன் – நேசமணி இணையர்க்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.

     வறுமைப் புயல்காற்று வீசிய போதும் கல்வி விளக்கை அணையாமல் பாதுகாத்துக் கொண்ட பாவாணர், பள்ளிப் படிப்பு முதல் பல்கலைக் கழகப் படிப்பு வரை கல்வியில் சிறந்து விளங்கினார்.

     பாவாணர், பல்வேறு ஊர்களில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் தமிழாசிரியர் பணியைத் தனித்திறத்தோடு ஆற்றினார். அவர், ஓராண்டு நடுநிலைப் பள்ளியிலும்; இருபத்து இரண்டு ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளியிலும்; பன்னிரண்டு ஆண்டுகள் கல்லுாரியிலும்; ஐந்தாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பணி புரிந்தார்.

 

 கல்வித் தகுதி

    

     தமிழ்ப் புலமைக்காகக் கீழ்க்காணும் கல்விப் பட்டங்களைப் பாவாணர் பெற்று இருந்தார்.

     1.    மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்

     2.    திருநெல்வேலித் தென்இந்தியத் தமிழ்ச்சங்கப்   புலவர்

     3.    சென்னைப் பல்கலைக் கழக வித்துவான்

     4.    பி.ஓ.எல். என்னும் கீழ்க்கலைத் தேர்வு

     5.    கலை முதுவர்

 

     இவற்றில் 1924 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வு எழுதியவர்கள் பலர். ஆனாலும் அந்த ஆண்டு பண்டிதர் தேர்வில் வெற்றி பெற்றவர் பாவாணர் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

     இதே போல் 1926 ஆம் ஆண்டில் திருநெல்வேலித் தமிழ்ச் சங்கப் புலவர் தேர்வு எழுதியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். அந்த ஒருவர் நம் பாவாணர்தான்.

     அந்தக் காலத்தில் புலவர் – பண்டிதர் – வித்துவான் தேர்வுகள் மிகவும் கடுமையாக இருக்கும். அவற்றில் தேர்ச்சி பெறுவது என்பது எளிதல்ல. அத்தகைய தேர்வுகளிலும் வென்று சிறந்து விளங்கியவர் பாவாணர்.

 


பாவாணர்

என்ற பெயர்

    

     அன்றைய காலக் கட்டத்தில் ஒருவரைத் தமிழாசிரியராகப் பணியில் அமர்த்த வேண்டுமானால், “இவர் தமிழ் கற்பிக்கத் தக்கவர்” என்று புகழ் பெற்ற புலவர் ஒருவர் சான்று அளிக்க வேண்டும்.

     அந்த அடிப்படையில் பண்டிதர் மாசிலாமணி என்பவர், “இவர் தமிழ் கற்பிக்கத் தகுந்தவர்” என்று ஒரு சான்றிதழைத் தேவநேசனுக்கு (பாவாணருக்கு) வழங்கினார். அந்தச் சான்றிதழில் தேவநேசனைத் “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் குறிப்பிட்ட “கவிவாணன்” என்னும் பெயரே பின்நாளில் “பாவாணர்” என்று தமிழில் மாற்றப்பட்டு அவருக்கே உரிய சிறப்புப் பெயராக நிலைத்து வருகிறது.

 

முதல் கட்டுரை

 

     1931இல் “செந்தமிழ்ச் செல்வி” என்னும் இதழில்தான் பாவாணரின் முதல் கட்டுரை வெளியானது. அதன் தலைப்பு, “மொழி ஆராய்ச்சி”. அன்று தொடங்கி, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகச் “செந்தமிழ்ச் செல்வியில்” ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் குவித்தார். பாவாணரின் அறிவுத் திறம் வெளிப்படுவதற்குச் “செந்தமிழ்ச் செல்வி” பெரிதும் துணை புரிந்தது.

     பாவாணர் தம் எழுத்து வல்லமையாலும் ஆய்வுத் திறத்தாலும் 35க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டு உள்ளார்.  அந்த ஒவ்வொரு நூலும் ”முனைவர்” பட்டத்துக்கு உரியது. அத்தனையும் தமிழுக்குக் கிடைத்த அரிய கருவூலங்கள்.

  மறுக்க முடியாதபடி- மறக்க முடியாதபடி- தமிழின் அனைத்துப் பெருமைகளையும் நிலை நிறுத்திய பெருமை பாவாணரின் நூல்களுக்கு உண்டு.

          இத்தனை நூல்கள் எழுதித் தொண்டாற்றிய பாவாணர், எந்த ஒரு நூலிலும் தன் ஒளிப்படத்தை (Photo) வெளியிட்டுக் கொண்டதில்லை.

          தமிழ்தான் அவர் முகம் என்பதால், தனியாக ஒளிப்படம் எதற்கு?

 


பன்மொழிப் புலமை

    பாவாணரின் பல்வேறு ஆற்றல்களில் ஓங்கி நிற்பது, அவருடைய பன்மொழிப் புலமை.

     மொழி ஆராய்ச்சியில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் தேவநேயப் பாவாணர். அதனால்தான் “மொழிநுால் மூதறிஞர்” என்றும் மொழி ஞாயிறு” என்றும் பாராட்டப்படுகின்றார்.

     மொழி ஆராய்ச்சி செய்வது என்பது எளிதான ஒன்றன்று. எல்லாராலும் செய்யக் கூடியதும் அன்று. மொழி ஆய்வு செய்வதற்கு- வரலாறு, மாந்தர் இயல், அரசியல், தொல்லியல், பொருளியல் போன்ற பல்துறை அறிவு தேவைப்படுவதோடு பன்மொழிகளையும் அறிந்து இருக்க வேண்டும்.

     அதற்காக அவர் பல்வேறு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சீனம், சமற்கிருதம், அரபு, ஆங்கிலம், செருமன், பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம், மராட்டியம், இந்தி  உள்ளிட்ட 23 மொழிகளில் இலக்கண இலக்கியப் புலமையைப் பெற்று இருந்தார். அவருடைய ஆய்வுகளில் 58 மொழிகளில் இருந்து எடுத்துக் காட்டுகளைக் கையாண்டு இருக்கிறார்.

     அவர் இத்தனை மொழிகளை அறிந்து இருந்தார் என்றால், அவருடைய முயற்சி எத்தகையது? அவருடைய ஆற்றல் எத்தகையது? அவருடைய அளவிட முடியாத அறிவு எத்தகையது? என்று எண்ணிப் பார்க்கும் போது வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுகிறோம்.

 

 பாடல் – இசை

    

     பாவாணர் இளமையிலேயே பாடல் எழுதும் திறம் படைத்தவராக இருந்தார். பல்வேறு யாப்புகளில் ஏராளமான பாக்கள் எழுதி உள்ளார். இசைப் பாடல்கள் எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். “இசைத்தமிழ்க் கலம்பகம்” “இசையரங்கு” “இன்னிசைக் கோவை” ஆகியவை பாவாணரின் இசைப்பாடல் தொகுப்புகள் ஆகும்.

     இசைப் பாடல்கள் எழுதுவது மட்டும் இன்றி, அவற்றைத் தாமே வாய்விட்டுப் பாடுவதிலும் சிறந்து விளங்கினார்.

     இந்தி எதிர்ப்புப் பாடல்களையும் தமிழ் உணர்வு ஊட்டும் பாடல்களையும் தெருதோறும் பாடிச் சென்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தார். தமிழர்களைக் கிளர்ச்சியுறச் செய்தார்.

     மன்னார்குடியில் இருந்த யாழ்புலவர் இராச கோபாலரிடம் முறையாக இசை பயின்றார். கின்னரம் (பிடில்), வீணை, இசைப்பெட்டி (ஆர்மோனியம்), மத்தளம் ஆகிய இசைக் கருவிகளை நேர்த்தியாக இசைப்பதில் தேர்ச்சி பெற்று இருந்தார்.

     தம் துணைவியார் மறைந்த போது துயரத்தில் மூழ்கிய பாவாணர் கின்னரத்தின் துணையைத்தான் நாடினார்.

 

  

தமிழா…?

மதமா…?

    

   கிறித்துவ மதத்தைச் சார்ந்த பாவாணர், மதத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தமிழுக்கே முதல் இடம் கொடுத்தார். அவருடைய பிள்ளைகளுக்கு அவர் சூட்டிய அழகு தமிழ்ப் பெயர்களே அதற்குச் சான்று. அந்தத் தமிழ் மணக்கும் பெயர்கள் இதோ…

     மணவாள தாசன்

     நச்சினார்க்கினிய நம்பி

     சிலுவையை வென்ற செல்வராயன்

     அருங்கலை வல்லான்

     மடம் தவிர்த்த மங்கையர்க்கு அரசி

     மணிமன்ற வாணன்

     பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்

 


சொல்லாக்கம்


    

இக்காலத்தில் ஆங்கிலப் போலித் தனத்துக்குத் தமிழன் அடிமை ஆகிவிட்டான். அதனால் தமிழ், தமிங்கிலம் ஆனது.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ் நுால்களில் தமிழைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை இருந்தது. திட்டமிட்ட சமற்கிருதக் கலப்பால் தமிழ் “மணிப்பவழ நடை” போட்டு நொண்டிச் சறுக்கியது.

இந்த இழிநிலையைத் துடைத்து எறிவதற்காக….

சமற்கிருதம் மற்றும் பிற மொழிகள் துணையின்றித் தமிழ் தனித்து இயங்க வல்லது என்று தமிழ் அறிஞர்கள் மெய்ப்பித்துக் காட்டினர்.

திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களின் எழுத்திலும் பேச்சிலும் தூய தமிழ்ச் சொற்களைக் கையாண்டனர்.

இயக்கத் தோழர்கள் பலர், பெற்றோர் சூட்டிய பிறமொழிப் பெயர்களைத் துறந்து தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்.

அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர், தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பியது.

எனவே தமிழ் மறுமலர்ச்சி பெற்றது.

சமற்கிருதத்தின் பிடியில் சிக்கி மூச்சுத் திணறிய தமிழ் மீட்டு எடுக்கப்பட்டது.

தமிழை மீட்டு எடுப்பது மட்டுமன்று. அந்தத் தமிழைப் புதுப்பிக்கும் பணியையும் செய்வதுதான் தமிழ் வளர்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் என்பதை உணர்ந்தவர் பாவாணர். தமிழுக்குப் புதுப்புதுக் கலைச் சொற்களைப் படைத்து அளித்தார் அவர்.

அந்தக் காலத்தில் பல தமிழ்ச் சொற்களே, வேற்று மொழிச் சொற்களாகக் கருதப்பட்டன. அத்தகைய சொற்களுக்கு வேர் மூலம் கண்டு, அவை தமிழ்ச் சொற்களே என விளக்கம் அளித்து, நுாற்றுக் கணக்கான தமிழ்ச்சொற்களை மீட்டுத் தந்தவர் பாவாணர்.

என்று தோன்றியது என்று தெரியாத தொன்மை வாய்ந்தது நம் தூய தமிழ்மொழி. உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் உயிரோடு உலா வரும் மொழி தமிழ். கணினி காலத்துக்கு ஏற்பவும் தன்னைத் தக்க வைத்துக் கொண்ட மொழி, தமிழ்மொழி. இந்த மொழி இன்னும் இளமையோடும் இனிமையோடும் வாழ வேண்டுமானால், நாளுக்கு நாள் வளர்ந்துவரும் அறிவியலுக்கு ஏற்ப- வாழ்வியலுக்கு ஏற்பப் புதிய புதிய சொற்களைத் தமிழுக்குப் படைத்து அளிக்க வேண்டும்.

“சென்சஸ்” என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் “சிசுபால விருத்த ஸ்திரி புருஷ விருத்தி சங்கியா” என்ற நீ… ண்…ட…. தமிழ் அல்லாத சொல்தொடரைத் தமிழில் புகுத்திய கொடுமை தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. சென்சஸ் என்ற அந்தச் சொல்லுக்குப் பாவாணர் தந்த தமிழ்ச் சொல் “குடிமதிப்பு”

புதிய சொற்கள் ஆயிரக் கணக்கில் சேரச் சேர மொழி மேலும் மேலும் வளம் அடையும். அதற்காகத்தான் பாவாணர் அல்லும் பகலும் உழைத்தார். இன்றும் அவர் அடிஒற்றிப் புதிய புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்கு வந்த வண்ணம் உள்ளன. மருத்துவக் கலைச் சொற்கள், பல்துறைக் கலைச் சொற்கள் எல்லாம் தனித்தமிழில் படைக்கப் படுகின்றன.

இப்படிப் புதிய சொற்களை உருவாக்குவதற்குப் புதிய மலர்ச்சாலை அமைத்து வழி காட்டியவர் பாவாணர்.

 

சொல்லாக்க

வழிமுறைகள்

    

தமிழில் புகுத்தப்பட்ட பிறமொழிச் சொற்களுக்கு உரிய சரியான பொருத்தமான தமிழ்ச் சொற்களை அறிவதில் அவர் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றினார்.

 

1.     பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்தே சரியான சொற்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துதல்.

2.      சிற்றுார்ப் புறங்களில்… மலைப்பகுதிகளில்…     குறிப்பிட்ட வட்டாரங்களில் மக்கள் பேசும்    வழக்குத் தமிழில் இருந்து சரியான சொற்களைக் கண்டுபிடித்துப்   பயன்படுத்துதல்.

3.                     புதயதாகச் சொற்களைப் படைத்து அளித்தல்

 

புதிய கலைச் சொற்களை உருவாக்குவதில் ஏறத்தாழ இருபது முறைகளை வகுத்துக் கொடுத்து உள்ளார். தமிழுக்கு எட்டு இலக்கம் (இலட்சம்) சொற்களைத் தொகுத்தும் உருவாக்கியும் தருவேன் என்று ஒருமுறை பாவாணர் சொல்லி உள்ளார். இதில் இருந்து, மொழித்துறையில் எத்துணை ஈடுபாட்டுடன் அவர் உழைத்து இருக்கிறார் என்பதை நாம் உறுதியாக உணர முடியும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சிற்றுார் மக்களிடத்தில்… மலைவாழ் மக்களிடத்தில் தங்கி இருந்து- அவர்களோடு பழகிப் பேசி- அவர்களின் இயல்பான பேச்சில் இருந்து  அரியபல தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து தொகுத்து உள்ளார் பாவாணர். இதற்காக அவர், குடும்பத்தை மறந்து, வருமானத்தைத் துறந்து, எத்தனை இரவு பகல் செலவிட்டு இருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.

 

 ஒரு நிகழ்ச்சி

     

சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவதற்காகப் பாவாணரை ஓர் அன்பர் அழைத்துச் சென்றார். அப்படி அழைத்துச் செல்லும் போது, வழியில் ஒரு பாம்பாட்டி மக்களைக் கூட்டி வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட பாவாணர், அந்தப் பாம்பாட்டியின் நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு நின்று இருந்து பாம்பாட்டியின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தார். பாம்பாட்டி, நிகழ்ச்சியை முடித்துக் காசு வாங்கிக் கொண்டு “மூட்டை” கட்டும்வரை பாவாணர் அங்கேயே இருந்தார்.

இதுபற்றி அன்பர், “எவ்வளவோ பெரிய அறிஞர் நீங்கள். இப்படித் தெருவில் நின்று  பாம்பாட்டியின் வித்தையைப் பார்க்கிறீர்களே” என்று கேட்டார்.

“தம்பி, ஏட்டில் காணக் கிடைக்காத அரியபல தமிழ்ச் சொற்களை இந்தப் பாம்பாட்டி இயல்பாகப் பேசக் கூடும். எனவேதான் அந்தப் பாம்பாட்டியின் பேச்சை உன்னிப்பாகக் கேட்டேன். பாம்பாட்டி பேசியதில் இருந்து, இன்றுகூட சில சொற்களைக் குறித்துக் கொண்டேன். இவை தமிழுக்கு வலுவூட்டும்” என்றார்.

 

 சொல்லுக்கு


வரலாறு

    

இந்த உலகில் பிறந்த எல்லாருக்கும் வரலாறு உண்டு. அதுபோல் மொழியில் தோன்றிய ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வரலாறு உண்டு.

ஒவ்வொரு சொல்லும் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து விளக்குவதே சொல்பிறப்பியல் ஆகும். அத்தகைய அரிய துறையில் தனித்த பேரரறிவும் பேராற்றலும் பெற்று இருந்தவர் பாவாணர்.

எனவே, செந்தமிழ்ச்    சொற்பிறப்பியல் அகரமுதலியை உருவாக்குவதே தம் வாழ்நாளின் குறிக்கோள் ஆகக் கொண்டிருந்தார் பாவாணர்.

அதற்குப் பொருள்செலவு மிகுதி ஆகும். ஏழை அறிஞரால் எப்படி இந்தப் பணியை நிறைவேற்ற முடியும்? இதற்காகப் பாவாணரின் மாணவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒரு திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தினார்.

     அதன்படி, தமிழ் அன்பர்கள் மாதம் தோறும் கொடுத்து வந்த குறிப்பிட்ட தொகையைக் கொண்டு அப்பணியைச் செய்து வந்தார்.

     இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டில் அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தை” உருவாக்கி, அதற்குப் பாவாணரை இயக்குநராக அமர்த்தினார். இந்தத் திட்டம், பாவாணருக்காவே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் அந்தப் பணி முழுமை அடையவில்லை என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பு ஆகும். அவர் முடித்து வைத்திருந்த அகர முதலியின் ஒரு பகுதியைக் கூட நூலாகப் பார்க்கும் வாய்ப்புப் பாவாணருக்குக் கிடைக்கவில்லை. பாவாணர் மறைந்த பிறகே, “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியின் முதல் மடலத்தின் முதல் பகுதி வெளியிடப்பட்டது.

 


சிறப்புக் குறிப்புகளில்

சில…

 

1. இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது திருவேங்கடமும் திருத்தணியும் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற எல்லை காக்கும் போராட்டத்தில் பாவாணர் ஈடுபட்டார்.

2.     இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இயன்றவரை பங்கு கொண்டார். தம் வீட்டில் தமிழ்க்கொடி ஏற்றினார். இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். “இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?” மற்றும் “The Language Problem of Tamilnadu and its Logical Solution”  ஆகிய நூல்களை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

3.      ஆட்சிச் சொல் தொகுப்பில் பங்கேற்றார்.

4.  தொடக்கத்தில் ஆங்கிலப் பற்று மிக்கவராக இருந்தார். எருதந்துறை (ஆக்சுபோர்டு) பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருந்தார்.

5.  சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியின் குற்றம் குறைகளை அம்பலப்படுத்தி அதனை நூலாகவும் வெளியிட்டார்.

6.    தமிழ், உலகின் முதல்மொழி என்பதையும் செவ்வியல் மொழி என்பதையும் உலக மொழிகள் பலவற்றுடன் ஒப்பிட்டுக் காட்டி, ஆய்வு நோக்கில் நிலை நிறுத்தும் “The Primary Classical Language of the World” என்ற ஆங்கில நூலை எழுதி உள்ளார்.

 7.    பல அறிஞர்கள் எழுதுவார்கள்… பேசுவார்கள். அத்தோடு சரி. செயல்பட மாட்டார்கள். ஆனால் பாவாணர் தம் எண்ணங்களையும்  செயல் திட்டங்களையும் நிறைவேற்ற “உலகத் தமிழ்க் கழகம்” என்ற அமைப்பை நிறுவி, அதன் தலைவராக இருந்து பணி ஆற்றினார். தமிழகம், ஆந்திரம், கருநாடகம், புதுச்சேரி முதலிய பல இடங்களில் ஏராளமான உலகத் தமிழ்க் கழகக் கிளைகள் செயல்பட்டன.

8. 1943இல் திருச்சியில் “தமிழ்ப் புலவர் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

9.    தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடு நடத்தினார்.

10.   முதன்மொழி என்ற மாத இதழை நடத்தினார்.

11.   தென்மொழி ஏட்டின் சிறப்பு ஆசிரியராக இருந்தார்.

12.  பாவாணரின் அனைத்து நூல்களும் நாட்டு உடைமை ஆக்கப்பட்டு உள்ளன.

 

பாவாணரின்

ஆய்வு முடிவுகளில் சில…

 

1.    மாந்தன் பிறந்தகம், குமரிக் கண்டமே.

2.    உலக முதல் மாந்தன் தமிழனே.

3.    தமிழ், குமரிக் கண்டத்தில் தோன்றிய ஞால முதல்        மொழி.

4.    தமிழ், திராவிட மொழிகளின் தாய்.

5.    தமிழ், உலக மொழிகளுக்கு மூலம்.

6.    சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பகுதி தமிழ்.

7.   தமிழில் கலந்துள்ள வடசொற்கள் எல்லாம் தேவை அடிப்படையில் விரும்பிக்      கடன் கொண்டவை அல்ல. அவை, தமிழைக் கெடுப்பதற்கு என்றே ஆரியரால்      புகுத்தப்பட்டவை.

8.    பிறமொழித் துணை இன்றித்  தமிழ் தனித்து இயங்கும்; தழைத்து ஓங்கும்.

9.    மொகஞ்சோதரா, அரப்பா நாகரிகம் பழந்தமிழ்   நாகரிகமே.

 

இறுதிப் பேச்சும்


இறுதி மூச்சும்

    

     கம்ப ராமாயணம், மகா பாரதம் மற்றும் இலக்கியங்களில் இருந்து கதை சொல்லுவோர்… நயம் பாராட்டுவோர்தாம் இந்த நாட்டில் “தமிழ் அறிஞர்களாக” வலம் வருகின்றனர். அவர்கள் போல் அல்லாமல், உண்மையாகவே தமிழ் அறிஞராக வாழ்ந்து, தமிழ் அறிஞர் என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார் பாவாணர்.

     இறுதியாக அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு ஆகும். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சிறப்பாக நடத்திய மாநாடு அது. அந்த மாநாட்டில் “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். அதன்பின் பாவாணருக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

     16-01-1981 அன்று வைகறை 0-30 மணிக்குப் பாவாணரின் உயிர் பிரிந்தது. ஆனால், “பாவாணரின் தமிழ்” நம்மைவிட்டுப் பிரியாது.

     அன்றைய தமிழக முதல்வர்  எம்.ஜி.ஆர். அவர்கள், சென்னை மாவட்ட மைய நுாலகத்துக்குத் தேவநேயப் பாவாணர் நூலகம் எனப் பெயர் சூட்டினார்.

 

 

பாவாணரின்


நினைவைப் போற்ற…

 

1.    தாய்மொழியாம் தமிழ்மீது பற்றுக் கொள்வோம்.

2.    குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவோம்.

3.    பிறமொழி கலவாது தமிழ் பேசுவோம். எழுதுவோம்.

4.   புதிய சொற்களைப் படைத்துத் தமிழை மேலும் மேலும் வளப்படுத்துவோம்.

5.    மொழி ஆய்வுப் பணி தொடரத் துணை நிற்போம்.

6.    தமிழ்வழிக் கல்விக்கு வழி செய்வோம்.

7.    அனைத்துத் துறைகளிலும் தமிழை உயர்த்துவோம். நாமும் உயர்வோம்.

 

 


தமிழ்அயரத் தாழ்ந்தான் தமிழன்; அவனே


தமிழ்உயரத் தான்உயர்வான் தான்.

                     - பாவாணர்

 

 

 

 


Thursday, 19 December 2024

பெரியார் தொண்டர் தி. மாதவன்



கோ. மன்றவாணன்

     திருவாரூர் தங்கராசு கூட்டம் ஒன்று கடலூர் முதுநகரில்  நடந்தது. துறைமுக நகர் என்ற பெயர் அப்போது இல்லை.

   நான் கூட்டத்தில் ஒருவராகக் கலந்து கொண்டேன்.  அவருடைய வாதங்களையும் நகையாடலையும் கேட்டுக் கை தட்டினேன். அப்போது  நான் சிறுவன்.  

          பையில் பத்துக் காசு இல்லை. அந்தப் பேச்சுதான் எனக்கு அன்றைய இரவு உணவு.

            நடு இரவு நெருங்கும் நேரத்தில் கூட்டம் நிறைவடைந்தது.  


            அந்த இரவு நேரத்தில் பேருந்து வசதி  இல்லை. ஆட்டோக்களும் அறிமுகம் ஆகவில்லை.  சாமி லாரி புக்கிங் ஆபிஸ் எதிரில் ஜட்கா ஸ்டாண்ட் இருக்கும் அது வேறொன்றும் இல்லை. குதிரை வண்டி நிலையம்தான்.

அங்கிருந்து குதிரை வண்டிகள் முதுநகருக்கும் திருப்பாதிரிப்புலியூருக்கும் ஓடிக்கொண்டிருக்கும். அதில் பயணம் செய்ய காசு வேணுமே!

வரும்போது நடந்துதானே வந்தேன். திரும்பும் போதும் நடந்துதானே போக வேண்டும். ஏழ்மை நடக்க வைத்தது காலில் செருப்பும் இல்லாமல்.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் இருள் சூழ்ந்த சாலையில் நடந்து கொண்டிருந்தேன். இடையிலே மோகினி பாலம் குறுக்கிட்டது. 

திகில் பற்றி எரிய எரிய மோகினி பற்றிய பல கதைகளைப் பலர் சொல்லக் கேட்டு நடுங்காதவர்களே அன்று இல்லை. அந்தக் கதை மன்னர்களிடத்தில் பேய்க்கதை மன்னன் பி டி சாமியே தோற்றுப் போய்விடுவார்.

ஒரு பக்கம்... பேய் இல்லை என்று அறிவு சொல்கிறது. மறுபக்கம்... ஒரு வேளை பேய் இருந்துவிட்டால் என்று பயம் கவ்வுகிறது. இந்த நிலையில்… என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... என்று எம்ஜிஆர் பாட்டைப் பாடியபடி   திருப்பாதிரிப்புலியூர் நோக்கி  நடந்து கொண்டிருந்தேன். 

எனக்கு முன்னே குள்ளமான ஓர் உருவம் நடந்து போய்க் கொண்டிருந்தது. அந்த உருவம்தான் மாதவன். அவரும் அன்றைய கூட்டத்தில் என்னைப்போல் கலந்துகொண்டவர். ஆனால் அவருடன் பேசியதில்லை அப்போது.


அந்தக் காலத்தில் இருந்தே அவர் கருப்புச் சட்டைதான் அணிந்திருப்பார். நான்  கருப்புச் சட்டை அணிந்ததில்லை. பிறர் கொடுக்கும் பழைய சட்டைகளையே போட்டு வந்ததால்,   கருப்புச் சட்டை அணியும் வாய்ப்பை யாரும் தரவில்லை.

அவர் அதிர்ந்து பேசி நான் கேட்டதில்லை. அவர் கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை.

அவரால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வார். பெரும்பாலோர் அவரை எடுபிடியாகவே நடத்தினார்கள். ஆனாலும் அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. எப்படியோ யாருக்கோ இந்த சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதே அவர் நோக்கமாக இருந்தது. 

கடலூரில் எந்தக் கூட்டம் நடந்தாலும் அங்கே மாதவன் இருப்பார். எளிய தோற்றம் என்பதால் அவரை அலட்சியமாகப் பார்த்துச் செல்வார்கள் பலர். 

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் ஊரில் உள்ள பெரிய மனிதர்களைச் சிலர் போய்ப் பார்த்து மரியாதை செய்வது உண்டு. எனக்கு அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் அது போன்ற ஒரு புத்தாண்டு தினத்தில் நானும் ஒரு பெரிய மனிதரைப் பார்த்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 

யாருக்கு மரியாதை செய்வது? இந்தக் கேள்விக்கு எனக்கு உடனே பதில் கிடைத்தது. அவர்தான் மாதவன். 

யாரோ கொடுத்த பழத்தை அல்ல, பணம் கொடுத்து ஓர் ஆப்பிள் பழத்தை வாங்கிக் கொண்டு, அவர் வீட்டுக்குப் போய் வாழ்த்தினேன். பழத்தையும் கொடுத்தேன். சத்தம் இல்லாத சிரிப்போடு அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விழுப்புரம் மற்றும் கடலுார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அஞ்சல் கொண்டு செல்பவராகக் கொஞ்ச காலம் பணி புரிந்தார். அரசு நியமன வேலை இல்லை அது. கூலிக்கு வைத்துக் கொள்ளும் வெளிஆள் வேலை.

கடலூர் பெரியார் நூலகத்தில் நூலகராகவும் பணி செய்தார். திராவிடர் கழகம் அவருக்குச் செய்த கவுரவம் அது. அவருக்கு அந்த வேலை பிடித்திருந்தது. அந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்க வேண்டி இருந்ததால் இடித்துவிட்டார்கள். புது கட்டுமானப் பணியும் தடைபட்டது. அதன்பின், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் நூல்களை எல்லாம் கூட்டங்களின் போது விற்பனை செய்து வந்தார். 

அவரிடத்தில் பலர் புத்தகங்களை வாங்கிக்கொண்டு பின்னர் பணம் தருவதாகச் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் அவர்கள் தரவில்லை. இவரும் கேட்கவில்லை.  

ஒரு பெருமழையின் பொழுது அவருடைய ஓட்டு வீட்டுக் கூரை ஒழுகியதால் ஏராளமான புத்தகங்கள் வீணாகிவிட்டன. அவற்றுக்குரிய பணத்தை, நிறுவனத்துக்குச் செலுத்த முடியவில்லையே என்று வருந்தினார். 

பின்னர் நியூ சினிமா அருகில் இருந்த இந்திரா டிராவல்ஸில் இரவுக் காவலராகவும் பணிபுரிந்தார்.

தி.க., தி.மு.க., கூட்டம் மட்டுமல்லாமல் இலக்கிய கூட்டங்கள், பொதுநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் என்றாலும் அங்கே மாதவன் இருப்பார். பொதுநலப் போராட்டம் ஒன்றில் பங்கேற்றதால் நீதிமன்றத்துக்கு நடையாய் நடந்தார். வழக்கின் கடுமை அவருக்குப் புரிந்ததே இல்லை. நீதிமன்றத்தில் சிரித்தபடி நின்றிருப்பார்.

பல இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களை… பல்வேறு அமைப்புகளின் அழைப்பிதழ்களை… அவர்தான் நடையாய் நடந்து, வீடு வீடாகச் சென்று கொடுப்பார்.  ஆனால் எந்தக் கூட்ட அழைப்பிதழிலும் அவர் பெயர் இருக்காது. கூட்ட நிறைவில் நன்றி சொல்லுகின்ற பொழுது,  அழைப்பிதழைக் கொடுத்த மாதவன் பெயரை மறந்திருப்பார்கள்.  

கூட்ட அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்க்க வருவார். அழைப்பிதழை வாங்கிப் படித்தபடியே தேநீர்க் கடைக்கு அவரை அழைத்துச் செல்வேன். தேநீர் அருந்துவோம்., எனக்கு முந்திச் சென்று தேநீருக்குப் பணம் கொடுக்க முயலுவார். நான் தடுத்துவிடுவேன். 

(அப்பொழுது எல்லாம் நினைத்துக் கொள்வேன். ஒரு காலத்தில் நடந்த தி.க., தி.மு.கழகக் கூட்டங்களில் மூவர் கட்டாயம் இருப்போம். இரும்புக் கடையில் வேலை செய்யும் தங்கத் தமிழன் என்ற இராமலிங்கமும்- செருப்புக் கடையில் வேலை செய்யும் நானும்- எந்த வேலையிலும் இல்லாத மாதவனும்தாம் அந்த மூவர். கொடுத்துச் சிவந்த கரங்கள் என்று வள்ளல்களைப் பாராட்டுவார்கள். பொதுக்கூட்டங்களில் கைதட்டி கைதட்டியே சிவந்தன எங்கள் கரங்கள்.  மாதவனும் இராமலிங்கமும் அழுக்கு வேட்டி அணிந்திருப்பார்கள். அவர்களில் நான் வேறுபட்டு இருப்பேன். ஆம். அழுக்குக் கைலி கட்டி இருப்பேன். அந்த நினைவில் இருந்து மீண்டு வருகிறேன்.)

ஒரு கூட்டத்தில் அரங்கின் ஓரமாக மாதவன் நின்றுகொண்டிருந்தார். பார்வையாளராக வந்திருந்த ஓர் இலக்கிய அன்பர், “மாதவன் இந்த டீ கப்பு எல்லாம் எடுத்துப் போடக் கூடாதா,” என்று தன் வீட்டு வேலைக்காரர் போல் தாழ்த்தி அதட்டினார். மாதவனும் அந்த டீ கப்புகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய் வெளியில் போட்டார். அதையும் அவர் மகிழ்ச்சியோடுதான் செய்தார். 

தோற்றத்தை வைத்தே ஒருவரை உலகம் மதிக்கிறது. குள்ளமான உருவம். அழுக்கடைந்த ஆடை. முடிமழிக்காத முகம். தெளிவில்லாத பேச்சு என்று இருந்தால், மதிப்பார் யார்?

யாருக்கும் எந்த உதவியும் ஒருவர் செய்ய வேண்டியது இல்லை. மேக்கப் சகிதம் வந்தால் போதும். அவருக்கு மரியாதை உண்டு. மாதவனுக்கு எப்படி மரியாதை கிடைக்கும்?

மாதவனைப் பார்த்து நாம் பரிதாபப் படலாம். ஆனால் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. தன் தோளில் துண்டு அணிந்து கம்பீரமாகவே இருந்தார். 


அவர் மேடை ஏறி முகம் காட்டியதில்லை. யாரிடத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. எந்த விளம்பரமும் தேடிக் கொண்டதில்லை. ஆனாலும் கடலூரில் உள்ள பொதுநலம் சார்ந்த பிரமுகர்களுக்கு அவரைத் தெரியும். அதுவே அவருக்குக் கிடைத்த பெரும் புகழ்.

மாதவன் அவர்களின் மணிவிழாவைத் திராவிடர் கழகத் தோழர்கள் எழிலேந்தி, தென். சிவக்குமார், சின்னதுரை உள்ளிட்டோர் நடத்தினார்கள். வெண்புறா குமார் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும் மாதவனுக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். இலக்கிய அமைப்பினர் சிலரும் வேறு அமைப்பினர் சிலரும் நிகழ்வுகளில் மாதவனுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்துள்ளார்கள். இவர்கள்தாம் சேவையை மதிக்கத் தெரிந்தவர்கள். உருவத்தைப் பார்க்காது உள்ளத்தைப் போற்றியவர்கள்.

பலருக்குப் பல பதவிகளும் பட்டங்களும் கிடைத்திருக்கலாம். அந்தப் பதவிகளையும் பட்டங்களையும் விடவும் உயர்ந்தது ஒன்று உண்டு. அது, பெரியார் தொண்டர் என்ற பெருமை!

பெரியார் தொண்டர் தி. மாதவன் அவர்களுக்குக் கண்ணீர் மாலை சூட்டுகிறேன்.

கோ. மன்றவாணன்

 


Monday, 16 December 2024

வழி அடைக்கும் கல்லா? வழி அமைக்கும் கல்லா?

 


வழி அடைக்கும் கல்லா...

வழி அமைக்கும் கல்லா...


-கோ. மன்றவாணன்-


திருக்குறள் அறன் வலிஉறுத்தல் அதிகாரத்தில் ஒரு குறள்.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃது ஒருவன் 

வாழ்நாள் வழிஅடைக்கும் கல். 

வீழ்நாள் என்றால் வீணான நாள் அல்லது நாள் தவறாமல் எனப் பொருள்படும். வீழ்நாள் படாஅமை நன்று ஆற்று என்றால் நாள் தவறாமல் அறம் செய்க என்பதாகும். வள்ளுவர் நமக்கு அறிவுறுத்தும் செய்தியும் அதுதான். 

ஆனால், அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்ற வரிக்கு உரை எழுதும் பொழுதுதான், பலர் வழி தடுமாறுகின்றனர்; வழுக்கியும் விழுகின்றனர்.

மணக்குடவர், காளிங்கர், பரிமேல் அழகர், பரிதியார் உள்ளிட்ட பழம் உரையாசிரியர்கள், வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்பதற்கு அடுத்தடுத்து பிறக்கும் பிறவியைத் தடுக்கும் கல் எனப் பொருள் கூறி உள்ளனர். இதற்கு ஆதரவாகப் பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரை சேரலாம் என்ற இன்னொரு திருக்குறளையும் துணைக்கு அழைக்கலாம். அந்தக் குறளின் மெய்ப்பொருள் என்னவென இன்னொரு கட்டுரையில் ஆராயலாம்.

எல்லாரும் சொர்க்கத்துக்குப் போக ஆசைப்படுகிறார்கள். அதே வேளையில் இறந்து போக யாருமே விரும்புவது இல்லையே. இந்த முரணை எண்ணிப் பாருங்கள். ஆக எல்லா மனிதர்களும் வாழவே ஆசைப்படுகிறார்கள் 

நீடு வாழ்வார் என்ற சொல்தொடரை எழுதியவரும் வள்ளுவர்தான். அதன்படி, மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம்.  வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

“இந்த உலகம் துன்ப மயமானது.”

“மறுபிறவி உண்டு.”

நாம் இந்தப் பிறவியில் அறம் செய்தால் இறைவனை அடையலாம்.  பாவம் செய்தால் மீண்டும் மீண்டும் இந்த உலகில் நாயாய் நரியாய்ப் பிற உயிரியாய்ப் பிறந்து துன்பம் அடைய நேரிடும். 

இந்த உலகில் நாம் தீமை செய்தால் நரகத்தில் தண்டனை கிடைக்கும். நன்மை செய்தால் சொர்க்கத்தில் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

இந்தக் கருத்துகள் எல்லாம் காலம் காலமாக நம் மக்களின் மனதில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்க எந்த ஆதாரமும் கிடையாது. 

ஆனால் நம் முன்னோர்கள் ஏன் இந்த அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை மக்கள் மனதில் பதித்து வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? 

ஆனாலும் அதை நல்நோக்கத்தில் சிந்தித்துப் பார்த்தால், அதிலும் ஒரு பயன் இருப்பது தெரியவரும்.

மனித மனம் விசித்திரமானது. ஒன்றை நம்பி விட்டால், அதுவே மெய்யென உறுதி கொண்டுவிடும். அதை மாற்றுவது என்பது எளிதான செயல் இல்லை. அறிவா நம்பிக்கையா என வந்தால் பெரும்பாலும் மனது நம்பிக்கையின் பக்கமே சாய்ந்து விடுகிறது; சார்ந்து விடுகிறது.

ஒரு மனிதரை இயக்க; ஒன்றை நோக்கிச் செயல்படுத்த உளவியலில் இரண்டு வழிமுறைகள் உண்டு. ஆசையைத் தூண்டி நல்வழிப் படுத்துவது ஒன்று. அச்சுறுத்தித் தீயவழியில் செல்வதைத் தடுப்பது இன்னொன்று.

நம் முன்னோர்கள் இந்த இரண்டு வழிமுறைகளையும் கையாண்டு சமூக வாழ்வைச் சீர்படுத்த முயன்றார்கள். சமய அன்பர்களின் நோக்கமும் வள்ளுவர் சொன்னது போல், நாள்தோறும் அறம் செய்க என்பதுதான். அப்படி செய்யாவிட்டால் என்ன என்று எதிர்க் கேள்வி மக்கள் இடையே எழும். அறம் செய்வதை அலட்சியமாக அவர்கள் நோக்கவும் கூடும். 

ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. 

இந்த நிலையில்தான் அறம் செய்தால் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். இறைவனிடம் அடைக்கலம் ஆகலாம் போன்ற ஆசை வார்த்தைகள் கூறி, அறம் செய்யவும்; ஒழுக்கமாக இருக்கவும் ஊக்குவித்தார்கள். அறம் செய்யாமல் போய்விட்டால் நரகத்தில் எண்ணெய்ச் சட்டியில் வறுபடுவாய் எனவும் அச்சுறுத்தினார்கள்; 

ஆனால் இன்றைய அறிவியல்படி சிந்தித்துப் பார்த்தால் அவற்றில் எதுவும் உண்மை இல்லை. கடந்த காலங்களைவிட இன்று மக்கள் மிகுந்த அறிவைப் பெற்று இருக்கிறார்கள். நிறைய சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. 

இந்நிலையில்... ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. அந்த முறையில் திருக்குறளுக்கு உரை காண்பதே சரி என நினைக்கிறேன். அப்படியானால், வழி அடைக்கும் கல் என்பதற்குப் பிறப்பைத் தடுக்கும் கல் என்று பொருள் கொள்ள முடியாது. 

வழக்கறிஞர் கு.ச. ஆனந்தன் அவர்கள், வழி அடைக்கும் கல் என்ற சொல் தொடருக்கு வழிஅமைக்கும் கல் என்று பாடம் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஓலைச்சுவடிகளில் காலம் காலமாய் எழுதி வருகிற பொழுது... படி எடுக்கின்ற பொழுது அவ்வாறு நேரிடவும் வாய்ப்பு உண்டு. தமிழ்த்தென்றல் திரு வி கலியாண சுந்தரம் அவர்களும் வழி அமைக்கும் கல் என்ற பொருளில்தான் இந்தக் குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். அது, அறிவியலுக்கு ஏற்றதாகவும் அமைந்துவிடுகிறது.

புலவர் குழந்தை போன்றோர் வாழ்நாளில் வரும் தீமைகளைத் தடுக்கும் கல் என்று பொருள் கூறி இருக்கின்றார்கள். அதனை ஒட்டியே நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும் உரை எழுதி உள்ளார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல், வழி அடைக்கும் கல் என்பதை நேரடியாகப் பார்த்தால், ஒரு வழியை மூடும் கல் என்றே பொருள் தருகிறது. வாழ்நாள் வழி என்பதைப் பிறவி எடுத்தலுக்கான காரணம் எனச் சமயக் கருத்தோடு பொருத்திப் பொருள்கொள்வது எளிதாக இருக்கிறது. அப்படி இருக்க, இவர்கள் ஏன், தீமை வரும் வழி என்று பொருள் கொள்கிறார்கள்? தீமை என்ற சொல்லாவது அந்தக் குறளில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 

குறளில் வரும் இரு சொற்களுக்கு இடையில் நுழைந்து ஒரு பொருளைத் தருவித்தோ ஊகித்தோ உரை எழுதுவது ஒரு முறை.  மேலும் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தமிழில் உண்டு. ஏழு சீர்கள் மட்டுமே கொண்ட செய்யுள். அதனால் சீர்களுக்கு இடையே சொல்லும் பொருளும் தொக்கிவர வாய்ப்பு உண்டு. குறளின் பொருளை நிகழ்காலத்துக்குப் பொருத்திப் பார்ப்பது தேவை. இந்தக் காரணங்களால்தாம் திருக்குறளுக்குப் புதுப்புது உரை எழுத முடிகிறது. அதற்குத் திருக்குறளும் இசைகிறது. 

அடைக்கும் என்பதற்கு மூடுதல் என்பதோடு துார்த்தல் என்ற பொருளும் உண்டு அடைக்கும் என்ற சொல்லை அப்படியே எடுத்துக் கொண்டு, வேறு வகையில் பொருள் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. 

ஒவ்வொரு பாதையும் கல்பரப்பி அதாவது கல்அடைத்து உருவாக்கப்படுகிறது. நாள்தோறும் அறம் செய்பவர்களின் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்து வாழ்க்கைப் பயணத்தைச் சுகம் ஆக்குவதுதான் அடைக்கும் கல் என்று பொருள்கொள்ள முடிகிறது. வாழ்க்கைப் பாதையில் எதிர்கொள்ளும் துயரப் பள்ளங்களைத் துார்ப்பதையும் அடைக்கும் கல் என்பது   உணர்த்தும்.                   

இந்தக் கருத்துக்கு ஆதரவாகக் கலைஞர் கருணாநிதியின் உரையும் அமைந்து இருக்கிறது. அவருடைய உரை இதுதான் : 

“பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.“

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இந்த உரை ஏற்கத் தக்கது. குறளின் சொற்களை அப்படியே எடுத்துக் கொண்டு, பொருத்தமான உரை எழுதி இருக்கிறார். 

குறளில் வரும் வாழ்நாள் என்ற சொல்லை ஆராய்ந்து பார்ப்போம். இன்பம் - துன்பம், நல்வினை - தீவினை, நன்மை - தீமை என்பன போல்தாம் வாழ்நாள் - வீழ்நாள் ஆகியவை. இவை, எதிர்எதிர்த் தன்மைகள் கொண்டவை.

வீழ்நாள் என்பது வீணான நாள் அல்லது வீழ்ச்சியான நாள் எனப் பொருள் தரும். வாழ்நாள் என்பது பயனுடைய நாள் அல்லது வாழ்ந்து காட்டும் நாள் எனப் பொருள் தரும். இங்கே வாழ்நாளைத்தான் உயர்த்திப் பிடிக்கிறார் வள்ளுவர். எனவே வாழ்நாளைத் தடுக்கச் சொல்லவில்லை. அறம் செய்து ஒவ்வொரு நாளையும் பயனுடையதாக ஆக்கி நீடு வாழ்க என்றுதான் வாழ்த்தி இருக்கிறார். 

மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

திருக்குறளுக்கு இன்றைய வாழ் நிலையில் என்னவாக பொருள் இருக்க முடியும் என்று சிந்திப்பதே நிகழ்காலத் தேவையாகும்.   இந்தக் குறளுக்கு இப்படி எளிதாகப் பொருள் கொள்ளலாம்.

நாள் தவறாமல் நன்மை செய்து வந்தால்… அதுவே, வாழ்க்கைப் பாதையில் படிக்கல் ஆகும்.


                                                    -கோ. மன்றவாணன்


நன்றி

கணையாழி மாத இதழ்

நவம்பர், 2024