Tuesday, 29 September 2020

கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்


கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்

கோ. மன்றவாணன்

ள் என்றாலே மயக்கம் தருவது. “கள்” விகுதியும் நம் புலவர் பெருமக்களுக்கு மயக்கம் தந்துள்ளது.

எழுத்துகள் என்று எழுத வேண்டுமா? எழுத்துக்கள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துகள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துக்கள் என்று எழுத வேண்டுமா? என்றெல்லாம் இலக்கணப்போர் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போர் முடிவதுபோல் தெரியும். ஆனால் முடிவது இல்லை.

“முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்” என்றொரு திரைப்பாடலைக் கண்ணதாசன் எழுதி இருந்தார். “சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன்” என்று அவரே இன்னொரு பாடலும் எழுதினார். இவற்றுள் முத்துக்கள் சரியா? முத்துகள் சரியா? இசையின் தேவைக்கே முதன்மை தரும் திரைப்பாடல்கள் ஆக்கத்தில் யாரும் இலக்கணத்தைக் கறாராகக் கடைப்பிடிப்பது இல்லை. ஆகவே அவற்றை எடுத்துக் காட்டுகளாகக் காட்ட வேண்டியது இல்லை என்பாரும் உண்டு. இங்கேயும் கேள்விகள் எழுகின்றன. எடுத்துக் காட்டுகளா? எடுத்துக் காட்டுக்களா?

‘கள்” விகுதி பின்னர் வந்தது என்று புறக்கணிப்போர் உண்டு. அப்படியானால் வாழ்த்து என்பதற்கும் எழுத்து என்பதற்கும் பன்மைச்சொற்கள் என்ன என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். பின்னர் வந்தது என்று எதிர்ப்போர் யாரும் மொழியின் வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் ஆவார்கள்.

தமிழின் ஒருமை பன்மைக் குழப்பத்தைத் தீர்க்கவே ‘கள்” விகுதியைத் தமிழியல் அறிஞர்கள் சேர்த்து இருக்கின்றனர். தமிழைச் செம்மைப்படுத்திய செயலே அது.

1330 குறள்கள் எழுதிய திருவள்ளுவர், ஏன் திருக்குறள்கள் என்று பெயர் சூட்டாமல், திருக்குறள் என்றார் என்று எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு உரிய பதிலை அவர் தரவில்லை. ஆனால், கள் என்பது வள்ளுவர்க்கு எதிரானது என்று நகைச்சுவையாகவும் நயமாகவும் சொல்லி நகர்ந்துள்ளார்.

இந்தக் கட்டுரையில் அடிக்கடி வன்தொடர்க் குற்றியலுகரம் என்ற இலக்கணப் பெயர் வரும். அப்படி என்றால் என்ன என்று பலருக்குத் தெரியாது. பள்ளிக் கூடத்தில் இலக்கணத்தை நாம் புரிந்து படித்ததில்லை. மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெற்றோமே அன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே....

ஒருசொல் உகர ஓசையில் முடிய வேண்டும். எடுத்துக் காட்டு : குறுக்கு. இந்தச் சொல்லில் வரும் ‘கு” என்பதில் உகர ஓசை இருக்கும். இப்படி வரும் உகர ஓசை எழுத்துக்கு முன் க், ச், த், ப், ற் ஆகிய மெய் எழுத்துகளில் ஒன்று வரும். எடுத்துக் காட்டுகள் : முறுக்கு, மெச்சு, வெறுத்து, பொறுப்பு, கற்று. இப்படிச் சொற்கள் வந்தால் அவற்றைக் குற்றியலுகரச் சொற்கள் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

எழுத்து என்பதும் வாழ்த்து என்பதும் வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும். வன்தொடர்க் குற்றியலுகரம் நிலைமொழியாக இருக்கும்போது வரும்மொழியாக, க, ச, த, ப ஆகிய வகையறாவின் எழுத்துகளில் தொடங்குகிறச் சொற்கள் வந்தால் ஒற்று மிகும். இந்த இலக்கண விதியை அடிப்படையாகக் கொண்டே நம் புலவர் பெருமக்கள் வாழ்த்துக்கள் என்றும் எழுத்துக்கள் என்றும் எழுதி வந்துள்ளனர். இவை புழக்கத்திலும் உள்ளன. இக்கட்டுரை எழுதுவதற்கு முன்பாகப் பலரைப் பேசச் சொல்லிக் கேட்டேன். அவர்கள் “வாழ்த்துக்கள்” என்றே சொல்லிக் கை குலுக்கினர். அவர்களையே பாராட்டு என்பதற்கான பன்மைச்சொல் என்ன என்று கேட்டேன். அனைவரும் பாராட்டுகள் என்றுதான் உச்சரித்தார்கள்.

வாழ்த்துக்கள் என்று  சொல்லும் போது.... அதில் ஓர் அழுத்தம் இருக்கிறது. ஆழம் இருக்கிறது. அன்பின் வலு இருக்கிறது என்று சிலர் கூறி வருகிறார்கள். அதை அவர்கள் பாணியிலேயே மறுக்கலாம். அன்பு என்பது மென்மையானது. அன்பின் வலிவைக் காட்ட, அதை அழுத்தமாக வலுவாக உச்சரிக்கக்கூடாது என்று சொல்லலாம். இவையெல்லாம் வாதத் திறமையை வெளிப்படுத்துமே தவிர... உண்மை கண்டறிவதற்கு உதவாது. இப்படிப் பேசுவதில் நயம் காண முடியுமே தவிர, ஞாயம் காண முடியாது.

திருக்குறளுக்கு உரை எழுதிய  பரிமேலழகர், பேராசிரியர் மு.வரதராசனார், புலவர் குழந்தை, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர்எழுத்துக்கள்” என்றுதான் எழுதியுள்ளனர்நன்னூல் விருத்தி உரைக்கு விளக்கவுரை எழுதியுள்ள பெரும் புலவர் பேராசிரியர் .தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். கற்றறிந்த தமிழறிஞர்களாகிய அவர்களின் அடியொற்றி எழுத்துக்கள், வாழ்த்துக்கள் என்று எழுதலாம் என்கிறார்கள். இதில் இருந்து வேறு ஒன்றும் தெளிவாகிறது. இந்த அறிஞர்கள் யாவரும் கள் விகுதியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பின்னர் வந்தது என்று புறக்கணிக்கவில்லை.

சொல்லோடு சொல் சேர்வதற்கு மட்டுமே இந்த வன்தொடர்க் குற்றியலுகர விதி பொருந்தும். விகுதிக்குப் பொருந்தாது. எனவே எழுத்துகள், வாழ்த்துகள் என்று எழுதுவதே சரி என்று வாதிடுவோர் உள்ளனர்.

இரண்டு சொற்கள் இணையும் போதுதான் ஒற்று மிகுமா மிகாதா எனப் பார்க்க வேண்டும்.

“கள்” என்பது சொல் இல்லை. அது விகுதிதான். ஆகவே “கள்” என்ற விகுதி வரும்போது ஒற்று மிகாது என்றே தமிழ் இலக்கணம் சொல்வதாகச் சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். அதற்கான இலக்கணச் சான்றுகள் என்ன என்று காட்டவில்லை. அவர்கள் சொல்வது சரியில்லை என்றே கருதுகிறேன்.

நன்னூல் வகுத்த விகுதிகளில் “ப“ என்பதும் ஒரு விகுதி. நட + ப என்பன சேர்ந்து நடப்ப... என்று வருகிறது. இந்த இடத்தில் விகுதிக்கு முன் ஒற்று மிகுந்துள்ளது.

நிலா, பலா, தாத்தா, ஆயா என ஆகாரம் ஈற்றாக வரும் சொற்களில் “கள்“ விகுதி சேரும் போது ஒற்று மிகுகிறது.

எ.கா. : நிலாக்கள், பலாக்கள், தாத்தாக்கள், ஆயாக்கள்

கணு, மரு, பசு, கரு, உரு, பரு, உடு என வரும் ஈரெழுத்து உகர ஈற்றுச் சொற்களில் “கள்” விகுதி இணையும் போது ஒற்று மிகத்தான் செய்கிறது.

எ.கா. : கணுக்கள், மருக்கள், பசுக்கள், கருக்கள், உருக்கள், பருக்கள், உடுக்கள்.

பூ, ஈ போன்ற ஒற்றை நெடிலெழுத்துச் சொற்களில் கள் விகுதி சேரும் போது ஒற்று மிகுகிறது.

எ.கா. : பூக்கள், ஈக்கள்

ஆக... பலவாறு சிந்தித்தாலும் “கள்“ விகுதிக்கு முன் ஒற்று மிகும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சொல்லும் ஒரு விகுதியும் சேரும் போது ஒற்று மிகாது என்று இவர்கள் எப்படி அடித்துச் சொல்கிறார்கள்?

ஃஃஃ

வாழ்த்து, எழுத்து ஆகிய வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களோடு “கள்” விகுதி இணையும் போது ஒற்று மிகும் என்று சொல்கிற மறுதரப்பினர் இருக்கிறார்கள்.  

கணக்கு, நாக்கு, சிரிப்பு, வளர்ப்புப் போன்ற வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களோடு “கள்” விகுதியைச் சேர்த்து எழுதவோ பேசவோ சொல்லிப் பாருங்கள். அவர்கள் அத்தனை பேரும் கணக்குகள், நாக்குகள், சிரிப்புகள் வளர்ப்புகள் என்றே எழுதுவார்கள்; பேசுவார்கள்.

தோப்பு என்பதன் பன்மையாகத் தோப்புகள் என்றே எழுதுகின்றனர். தோப்புக்கள் என்று எழுதுவது இல்லை. தோப்பிலுள்ள கள் என்று மற்றொரு பொருள்தரும் என்பதால் அப்படி எழுதுவது இல்லை என்கிறார்கள். வாழ்த்துக்கள் என்றாலும் வாழ்த்து எனும் கள் என்று பொருள்தரும். சொற்களில் சிலேடை காண்பது புலவர்களின் நுண்திறன். அதை இலக்கண விதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டியது இல்லை. ஆனால் கருத்துத் தெளிவுக்காக இருபொருள் குழப்பம் தவிர்க்கலாம்.

வாழ்த்து, எழுப்பு, நொறுக்கு, முறுக்கு, நிரப்பு, பரப்பு ஆகிய வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுடன் “தல்” விகுதி சேரும்போது வாழ்த்துதல், எழுப்புதல், நொறுக்குதல், முறுக்குதல், நிரப்புதல், பரப்புதல் என்றே வருகின்றன. வாழ்த்துத்தல், எழுப்புத்தல், நொறுக்குத்தல், முறுக்குத்தல், நிரப்புத்தல், பரப்புத்தல் என்று எழுதுவது இல்லை. வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுடன் “தல்” விகுதி சேரும்போது ஏன் ஒற்று மிகவில்லை என்று இந்த மறுதரப்பினரும் சிந்திக்கட்டும்.

இலக்கிய அன்பர்கள் இடையே வாழ்த்துகளா... வாழ்த்துக்களா... எழுத்துகளா... எழுத்துக்களா... என்ற விவாதம், தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. இந்தக் குழப்பம் களைய அவ்வப்போது சிலர் முயன்று வருகின்றனர்.

இப்படியும் எழுதலாம்... அப்படியும் எழுதலாம்... என்று சில பெரும்புலவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள்தாம் உண்மையிலேயே நடுநிலை வகிப்பவர்கள்.

இப்படியும் எழுதலாம் அப்படியும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என்று சொல்வது விதியில்லை, நல்ல வழிகாட்டல் இல்லை. இரண்டில் ஒன்று தெளிவாகத் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்போரும் எதிர்க்குரல் கொடுப்போரும் உண்டு.

குழப்பங்களைத் தீர்க்கவும் தெளிவு பிறக்கவுமே இலக்கண விதிகள் வகுக்கப்படுகின்றன.  காலத்துக்கு ஏற்ப இலக்கண விதிகளை ஆராய்ந்து அவற்றில் மாற்றங்கள் கொண்டு வரலாம். புது விதிகளும் உருவாக்கலாம். இலக்கியம் வளர்வதுபோல் இலக்கணமும் வளர வேண்டும்.

இந்தச் சிக்கலுக்கு என்ன செய்வது?

“கள்” விகுதி வந்தால் ஒற்று மிகும் என்று ஒற்றை விதியை வகுத்துவிட வேண்டும். அப்படிச் செய்தாலும் சில இடங்களில் இடிக்கின்றன.

“கள்” விகுதி வந்தால் எந்த இடத்திலும் ஒற்று மிகாது என்று சொல்லிவிட வேண்டும். அப்படிச் செய்தாலும் நிலா, பலா, உரு, உடு போன்ற சொற்கள் வந்து இடித்துரைக்கின்றன.

இப்படியும் போக முடியவில்லை. அப்படியும் போக முடியவில்லை. குழம்பிப்போய்த் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்துவிடுவதா என்றும் தெரியவில்லை.

ஆக, “கள்” விகுதி ஒற்று மிகுந்தும் வருகிறது. ஒற்று மிகாமலும் வருகிறது. கள் என்பதால்தான் இப்படித் தடுமாறுகிறதோ என்னவோ?

ஆழ்ந்து சிந்தித்தால் வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களில் மட்டும்தாம் “கள்” விகுதி, குழப்பத்தை விளைவிக்கிறது.

மொழி என்பது ஆய்வகத்தில் வைத்து உருவாக்கப்பட்டது இல்லை. மொழி என்பது முன்திட்டம் இட்டுக் எழுப்பப்பட்ட கட்டடம் இல்லை. இயற்கையாகத் தோன்றும் மொழிகளுக்கு இலக்கண விதிகளை வகுக்கும்போது விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்யும். அந்த அடிப்படையில் கீழ்க்கண்டவாறு ஒரு முடிவுக்கு வரலாம்.

ஓரெழுத்து ஒரு மொழியாக இருக்கும் பா, பூ, ஈ போன்ற நெடில் எழுத்துச் சொற்களோடும்- நிலா, பலா, தாத்தா, ஆயா போன்ற ஆகார ஈற்றுச் சொற்களோடும்- உரு, உடு போன்ற ஈரெழுத்து உகர ஈற்றுச் சொற்களோடும் “கள்” விகுதி சேரும்போது ஒற்று மிகும். வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் உட்பட வேறு எந்தச் சொற்களோடும் “கள்” விகுதி சேருகிற போது ஒற்று மிகாது.

மேலே சொன்னவற்றுள், ஒற்றை நெடிலெழுத்துச் சொற்களில் ஐ இனத்தைச் சேர்க்கவில்லை என்பதை அறிக. பைகள், கைகள் என்றே அவை ஒற்று மிகாமல் வருகின்றன. ஐ என்பதை யாப்பிலக்கணத்தில் குறிலாகவும் கொள்வார்கள் நெடிலாகவும் கொள்வார்கள். அதன்படி ஐ என்பதைக் குறிலாகக் கருதலாம். அல்லது ஐ என்பதை விதிவிலக்காக வைக்கலாம்.

எந்த விளக்கம் சொன்னாலும் அதிலிருந்து ஒரு கேள்வி கிளைத்துக் கொண்டே இருக்கும். அதிலிருந்து ஒரு விதிவிலக்கு முளைத்துக்கொண்டே இருக்கும். இந்தக் கள் மயக்கத்தை எப்படித்தான் தெளிய வைப்பது?

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களோடு “கள்” விகுதி சேரும்போது மட்டுமே குழப்பம் வருகிறது. வேறு எந்த இடத்திலும் “கள்” மிகுமா மிகாதா என்ற மயக்கம் நமக்கு ஏற்படுவதில்லை. வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களைத் தவிர்த்துப் பிற சொற்களைக் கையாளும்போது இயற்கையாகவே “கள்” விகுதியைச் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம்.

எனவே,

குழப்பத்துக்குக் காரணம் வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்தாம் என்பதால், “கள்” விகுதி வருகிறபோது வன்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி விதி பொருந்தாது என்று அறிவித்துவிடலாம்.

வாழ்த்துகள் என்றே வாழ்த்துங்கள்.

எழுத்துகள் என்றே எழுதுங்கள்.

இன்றைய மொழிப்பயன்பாட்டு முறைமைக்கும் கற்றலின் எளிமைக்கும் இதுவே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். எனினும் ஒருபோதும் புலவர்களின் சண்டை ஓய்வதே இல்லை, அலைகளைப் போலவே...

 

Tuesday, 15 September 2020


யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?

கோ. மன்றவாணன்

ந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாப்புக்கு ஏது எதிர்காலம் என்று கேள்வி வடிவிலேயே பதிலைச் சொல்வீர்கள்.

சங்கம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் ஒருபகுதி வரை நம் கவிதை இலக்கியங்கள் யாவும் யாப்பு முறையில் எழுதப்பட்டவையே. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் யாப்புக் குறித்து எழுதப்பட்டுள்ளதால், அதற்கு முந்தைய காலங்களில் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்றவை இருந்துள்ளன என்பதை ஊகித்து அறிய முடியும்.

தம் படைப்புகளை வெளிப்படுத்தவும், அவற்றைப் பிறரின் நினைவில் பதிப்பதன் வழியாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லவும், நம் மூதாதையர் கண்ட முறைமையே யாப்பு ஆகும். அதாவது எளிதாக மனதில் பதிவதற்கும் மனப்பாடமாகச் சொல்வதற்கும் ஏற்றவை யாப்புக் கவிதைகளே. முதல்வரியோ முதல்சொல்லோ நினைவுக்கு வந்துவிட்டால் முழுப் பாடலையும் எளிதில் சொல்லிவிட முடியும். அது அந்தக் காலத்துக்குத் தேவையாக இருந்திருக்கிறது.

திருக்குறளில், தேவாரத்தில், திருவாசகத்தில், கம்ப ராமாயணத்தில், திருஅருட்பாவில் உள்ள கவிதைகளை நம் முன்னோர் மனப்பாடமாக ஓதி வந்துள்ளார்கள். இன்றும் சிலர் ஏடு புரட்டாமல் நினைவைப் புரட்டியே அந்தக் கவிதை வரிகளை அருவியெனக் கொட்டுகிறார்கள். இதற்குக் காரணம் யாப்புக் கட்டுமானமே.

பாமர மக்களிடத்தில் புழங்கும் பழமொழிகள் பல தலைமுறைகளாக மக்களிடத்தில் தொடர்வதற்கு, அவற்றில் அமைந்துள்ள யாப்பு ஒழுங்கும் ஒரு காரணம் ஆகும். ஓசை ஒழுங்கில் பாடுகிற நாட்டுப்புறப் பாடல்களில் இயற்கையாக அமையும் யாப்புக் கட்டுமானம் உண்டு.

இன்றும் பாரதியார் கவிதைகளை, பாரதிதாசன் கவிதைகளை, கண்ணதாசன் கவிதைகளை முழுமையாகச் சொல்வோர் உண்டு. ஆனால் வசன கவிதைகளையோ புதுக்கவிதைகளையோ நவீன கவிதைகளையோ வரிமாறாமல் மனப்பாடமாகச் சொல்ல முடியாது. வேண்டுமானால் ஓரிரு வரிகளை மட்டும் சொல்ல முடியும். இருப்பினும், மோனை அழகோடு எழுதப்படும் புதுக்கவிதைகள் சிலவற்றை மனப்பாடமாகச் சொல்ல முடியும். அதற்கும் யாப்பின் ஒரு கூறாகிய மோனை உதவுகிறது.

அச்சுப் பதிவுகளும் எண்மப் பதிவுகளும் எளிதாக உள்ள இந்தக் காலத்தில் எதையும் நினைவில் சுமக்க வேண்டியதில்லை. அதனால் புதுக்கவிதைகளையும் நவீன கவிதைகளையும் நினைவில் வைத்துப் பாதுகாக்காமல் தேவையான போது ஏடு திறந்தோ, கணினி திறந்தோ, திறன்பேசி திறந்தோ பார்த்துக்கொள்ள முடிகிறது.

இருபதாம் நூற்றாண்டில்தான் வசன கவிதைகளும் புதுக்கவிதைகளும் நவீன கவிதைகளும் மலர்ந்தன. இக்காலக் கட்டத்திலும் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் என மரபுக் கவிஞர்கள் பெருஞ்செல்வாக்குப் பெற்றுள்ளனர். இவர்களைப் படித்துக் கவிஞர்கள் ஆனவர்கள் அதிகம்.  இதே இருபதாம் நூற்றாண்டில் அப்துல் ரகுமான், மேத்தா, மீரா, வைரமுத்து போன்றவர்கள், மரபுக் கவிதைகளையும் எழுதினார்கள். புதுக்கவிதைகளையும் எழுதினார்கள். புதுக்கவிதைகளின் வளர்ச்சியில் பெரும்பங்கு இவர்களுடையது. இவர்களைப் பார்த்துத்தான் ஏராளமானோர் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். கவிஞர்கள் தொகை வளர்ச்சிக்குப் புதுக்கவிதை இயக்கம் ஒரு காரணம். மேலும் ந. பிச்சமூர்த்தி, நகுலன், பசுவய்யா, பிரமிள் போன்றவர்கள், புதுக்கவிதை வீச்சுகளைத் தாண்டியும் கவிதை படைத்தார்கள்.

இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டிலும் புதுக்கவிதை செல்வாக்கு கொண்டுள்ளது.  என்றாலும், நவீன கவிதையின் வளர்ச்சியும் மேலோங்கி வருகிறது. தற்காலத்தில் புதுக்கவிதைகளை விடவும் நவீன கவிதைகளையே தரம் மிகுந்த இலக்கிய இதழ்கள் வெளியிடுகின்றன. இந்தக் கவிதைப் போக்குகள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதோடு புதுமையையும் சேர்க்கின்றன. நவீன கவிதை நூல்கள் நிரம்ப வருகின்றன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்புக் கொண்டதாக உள்ளது.

யாப்பு வடிவத்தைப் புறக்கணித்து விட்டாலும் புதுக்கவிதைகளில் மரபின் நீட்சி உண்டு. இன்றைய நவீன கவிதைகளிலும் சங்க இலக்கியத் தாக்கங்கள் உண்டு.

காலம் தோறும் கவிதை வடிவங்களும் போக்குகளும் மாறித்தான் வந்துள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று எனப் புதுவடிவம் தோன்றுவது இயற்கையானது. அப்படித்தான் இப்போது நவீன கவிதை உருவாகி வந்துள்ளது. நவீன கவிதைக்குப் பிறகும் இன்னொரு நனிநவீன கவிதையோ வேறொன்றோ நிச்சயமாக வரும். அதையும் வரவேற்போம்.

எனினும்-

எல்லாக் கவிதை வகைப்பாடுகளும் மதிப்புக்கு உரியவை. ஒரே வகைப்பாட்டில் கவிதை எழுதி அலுப்புவதைவிட எல்லா வகைப்பாடுகளிலும் கவிதை எழுதலாம். இங்கு நவீன கவிதை எழுதுபவர்கள், புதுக்கவிதையையும் மரபுக் கவிதையையும் ஒதுக்குகிறார்கள். புதுக்கவிதை எழுதுபவர்கள், மரபுக் கவிதையையும் நவீன கவிதையையும் வெறுக்கிறார்கள். சிலர் ஒரே வகைப்பாட்டில் பழகி விட்டதால் பிற வகைப்பாடுகளில் எழுதத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் புதுக்கவிதையும் நவீன கவிதையும் நல்ல நிலையில் வளர்ந்து வருகின்றன. ஆனால் மரபுக் கவிதைக்கு எதிர்காலம் இருக்குமா என்பதுதான் கேள்விக்குறி. இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கும் மேலாக நிலைத்து நீடித்து வந்த யாப்புக் கவிதை மரபு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் அழிவு நிலையில் உள்ளது. யாப்புக் கவிதை எழுதும் யாரோ சிலரையும் ஏளனமாகப் பார்க்கும் நிலையும் இலக்கிய நிகழ்வுகளில் காண முடிகிறது.

மரபுக் கவிதைகள் எழுதுவோர் குறைந்து வருகிறார்கள் என்பதைவிட மறைந்து வருகிறார்கள் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மரபுக் கவிதை ஏன் இந்த நிலையில் இருக்கிறது என்று கவிதை நண்பர்களிடம் கேட்டேன்.

இன்றும் மீன்விழி மான்விழி என்றே எழுதிக் குவிக்கிறார்கள். உவமைகளில் புதுமை இருப்பதில்லை. புதிய பாடுபொருள்கள் இல்லை.  சொல்லும் முறையில் புதுக்கோணம் காண்பதில்லை. காலம் என்ற சொல்லில் தொடங்கினால் ஞாலம் பாலம் நீலம் சூலம் ஜாலம் என்று ஒரே மாதிரியான எதுகை போட்டு எழுதி எழுதித் தமிழைத் தேய்த்துவிட்டார்கள் என்று நண்பர் ஒருவர் சொன்னார். இதில் உண்மை இல்லாமல் இல்லை.

யாப்புச் சட்டகத்துக்குள் சொற்களை அடைத்துவிட்டால் அது கவிதை ஆகிவிடாது. அப்படிச் சொற்களை அடைத்ததனால்தான் மரபுக் கவிதை வீழ்ச்சி அடைந்தது என்று ஒரு தோழி சொன்னார். இதிலும் மெய் இருக்கத்தான் செய்கிறது.

பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களுக்கே இன்னமும் இலக்கணம் பிடிபடவில்லை. அதிலும் யாப்பு இலக்கணம் சொல்லித் தரும் அளவுக்கு திறன் உள்ளவர்கள் இல்லை. ஒரு பொருளில் ஒருவருக்கு முழுப்புரிதல் இருந்தால்தான் அடுத்தவர்க்குப் புரியும்படிச் சொல்லித்தர முடியும். ஆசிரியருக்கே புரியவில்லை என்றால் மாணவர்களுக்கு எப்படிப் புரியும்?  நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என்று மனப்பாடம் செய்யச் சொல்லி அடுத்த பாடத்துக்குத் தாண்டுகிறார்களே தவிர, மாணவரை யாப்பு வடிவில் கவிதை எழுதத் தூண்டுவதில்லை என்று தமிழாசிரியர்கள் மீது பழி சுமத்தினார் இன்னொரு தோழர்.

யாப்புக்குள் கவிதை எழுதும்போது, அதில் நம் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. யாப்பு, நம் சுதந்திர சிந்தனைக்குத் தடை போடுகிறது. இதனால்தான் கட்டற்ற கவிதைபாட புதுக்கவிதைகளும் நவீன கவிதைகளும் மலர்ந்தன என்று வாதிடுவோர் உண்டு.

இது குறித்துச் சில மரபுக் கவிஞர்களிடம் பேசிய போது, யாப்பே நம் சிந்தனையைத் தூண்டும் என்று சொன்னார்கள். எதுகைக்கு ஏற்பவும் மோனைக்கு ஏற்பவும் கருத்துகள் உருவாகிவரும் என்றார்கள்.

யாப்பு அழிவதால் கவிதை இலக்கியத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது என்று துடிப்பான இளைய கவிஞர் ஒருவர் சொன்னார்.

யாப்பு முதுமுதுமை அடைந்துவிட்டது. யார் தூக்கி நிறுத்தினாலும் அதனால் நடமாட முடியாது. அது தானாகவே மறைந்து போகும். ஒரு பழைமை அழிந்தால்தான் ஒரு புதுமை நிலைகொள்ள முடியும் என்றும் ஒருவர் சொன்னார்.

பழைமை என்பதால் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட முடியாது. புதுமைகளுக்கு இடம் அளித்தபடிச் சில பழைமைகள் காலம் தோறும் உடன்வரும். அந்த வகையில் யாப்பையும் பேணிப் பாதுகாக்கலாம் என்றார் ஒரு கவிதை ரசிகர்.

புதுக்கவிதைகள் எழுதிவரும் பலரிடம் பேசி இருக்கிறேன். அவர்களில் சிலருக்கு மரபுக் கவிதைகள் எழுத ஆசை இருக்கிறது. ஆனால் அதன் இலக்கணம் புரிபடவில்ல; புரிய வைப்பாரும் இல்லை என்கிறார்கள். புதுக்கவிதை எழுதும் சிலர், பாரதியார் பாரதிதாசன் கவிதைகளைப் படித்துவிட்டு, அதே வடிவத்தில் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் அதில் வடிவம் இருக்கிறதே தவிர அதற்குரிய இலக்கணம் இல்லை. வெண்பா போல விருத்தம் போல சிலர் எழுதுகிறார்கள். ஆனால் வெண்பாவில் தளை தட்டுப்படும். விருத்தத்தில் சீர்குறையும் அல்லது நீளும். குறைசொல்லியே பேர் வாங்கும் புலவர்களுக்கு அது அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிடும். தவறுகளைச் சுட்டிக் காட்டி, அந்த இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கத்தான் தகுந்த கவிஞர்கள் இங்கு இல்லை. “நாம் கற்றுக் கொடுத்தால் அவன் நன்றாக எழுதிப் பேர் வாங்கி விடுவான்” என்று சிலர் கற்றுத் தருவதும் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன், மரபுக் கவிதைக்கு மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என மெனக்கீடு செய்து வைரமுத்து அவர்கள் மரபுக் கவிதைகளை எழுதி வந்தார்கள். அதுதான் “ரத்த தானம்” என்ற கவிதை நூலாக வந்தது என்று கருதுகிறேன். கல்கியில் மரபுக் கவிதைப்  போட்டிகூட வைத்தார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், பல இலக்கிய இதழ்களில் வெண்பா போட்டி நடத்தி வந்தனர். ஈற்றடி கொடுத்துவிடுவார்கள். மீதி மூன்று அடிகளை எழுதி அனுப்ப வேண்டும். கண்ணதாசன் நடத்திய தென்றல் இதழில் வந்த வெண்பா போட்டிகள் மிகவும் புகழ்பெற்றவை. எழுபதுகளில் தமிழக அரசு வெளியீடான தமிழரசு இதழில் வெண்பாப் போட்டிகள் நடந்தன. மரபுக் கவிதைக்காகவே தெசிணி என்பவர், கவிதை என்ற இதழைப் பல ஆண்டுகாலமாக நடத்தி வந்தார். தலையங்கம், பேட்டிகள், எல்லாம் கவிதையாக வடித்து நடத்தி வந்தார்.

இவை எல்லாம் மரபுக் கவிதையைப் காப்பாற்றவும் வளர்க்கவும் எடுத்த முயற்சிகள். இப்போது இந்த முயற்சிகள் எங்கோ இரண்டோர் இதழ்களில் இருக்கக் கூடும். ஆனால் இளைஞர்களை ஈர்க்கக் கூடிய அளவுக்கு முயற்சிகள் இல்லை. புகழ்மிகு இலக்கிய அச்சிதழ்களும் மின்னிதழ்களும் மரபுக் கவிதைகளை வெளியிடுவதில்லை. நம் கண்முன்னே யாப்பு, நம்மைவிட்டுப் பிரிவதைக் காண முடிகிறது.

வள்ளுவர், இளங்கோ, கம்பர் போற்றிய யாப்புக்கு இன்று செல்வாக்கு இல்லை என்று நினைக்கிற போது வருத்தமாகத்தான் இருக்கிறது. வள்ளலார், பாரதியார், பாரதிதாசன் கொண்டாடிய யாப்பு, இன்று வழக்கொழிந்து வருகிறது என்பதைப் பார்க்கிற போது ஒரு பெருங்கொடையை இழப்பதுபோல் ஆகிறது என்ன செய்வது? காலத்தின் முன்னால் கைபிசைந்து நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை..

இன்றைய புதுக்கவிதை எழுதும் கவிஞர்களும் நவீன கவிதை எழுதும் கவிஞர்களும் புதுப்புது உத்திகளைக் கையாளுகிறார்கள். யாரும் நினைக்காத கோணத்தில் சிந்திக்கிறார்கள். யாரும் பாடாத பொருள்களில் கவிதை எழுதுகிறார்கள். நுண்சித்தரிப்புகளில் வியப்பின் உயரத்தைத் தாண்டுகிறார்கள். தமிழின் தேய்வழக்குகளை விட்டுவிலகிப் புதிய சொல் இணைவுகளையும் சொற்றொடர்களையும் உருவாக்குகிறார்கள். இதுவரை இல்லாத புதிய தமிழ் அழகை... கவியழகை இன்றைய இளைய கவிஞர்களிடம் கண்டு மகிழ முடிகிறது. இந்த இளைஞர்களுக்குத் திரைப்பாடல் எழுதவும் ஆசை இருக்கிறது. எந்தக் கவிஞருக்குத்தான் திரைப்பாடல் எழுத ஆசை இருக்காது என்று நீங்கள் கேட்பதும் கேட்கிறது. யாப்பு இலக்கணம் கற்றிருந்தால் திரைப்பாடல் எழுதுவது எளிதாகும்.

நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகன் அவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் வெண்பாக்கள் எழுதி அசத்தினார்கள். எதுகை மோனையைப் பற்றிக் கவலைப் படாமல் ஞானக் கூத்தன் எழுதிய பல கவிதைகளில் யாப்புக் கட்டுமானம் உண்டு.

இளைஞர்கள் கொஞ்சம் யாப்புக் கற்றுக்கொண்டால் நவீன கவிதைகளோடும் புதுக்கவிதைகளோடும் மரபுக் கவிதைகளையும் எழுதலாம். யாப்புக் கவிதை எழுதும் மூப்புக் கவிஞர்களிடத்தில் புதுவீச்சுக் காண முடியாது. இளைஞர்கள் எழுதினால் யாப்புக் கவிதைக்குள் புதிய கோள்களைப் படைத்து ஒளிவீசச் செய்ய முடியும்.

யாப்புக் கவிதை எழுதுவது கடினம் என்று யாரும் கருத வேண்டாம். யாப்பு இலக்கணத்தைக் கண்டு மிரளவும் வேண்டாம். புலவர் குழந்தை அவர்கள் “யாப்பதிகாரம்” என்ற நூலையும்- கி.வா.ஜகந்நாதன் அவர்கள் “கவி பாடலாம்” என்ற நூலையும்- மருதூர் அரங்கராசன் அவர்கள் “யாப்பறிந்து பாப்புனைய” என்ற நூலையும் எழுதி இருக்கிறார்கள். மரபுக் கவிதைகள் எழுதுவது குறித்துப் பல வலைப்பூக்கள் இணையத்தில் உள்ளன.  இவற்றை முழுமையாகப் படிக்க வேண்டாம். அசை, சீர், எதுகை, மோனை பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொண்டால் போதும். இதில் எதுகை மோனை பற்றி நம் கவிஞர்களுக்கு ஏற்கனவே புரிதல் உண்டு. விருத்தப்பாவுக்கு உரிய வாய்ப்பாடுகளில் ஒன்றிரண்டு தெரிந்துகொள்ளுங்கள். இவற்றைக் கொண்டு விருத்தங்கள் எழுதிவிட முடியும். கம்பனைப் போல் காவியமும் படைக்க முடியும். தேர்ந்த கவிஞர்கள் எழுதிய ஆசிரியப்பாவில் அமைந்த கவிதைகள் சிலவற்றைப் படித்தால் போதும். இலக்கணம் படிக்காமலேயே ஆசிரியப்பா எழுதிவிட முடியும். இணைக்குறள் ஆசிரியப்பா என்று ஒன்று இருக்கிறது. இதைவிட எளிய யாப்பு எதுவும் இல்லை. இன்றைய புதுக்கவிதைகளையும் நவீன கவிதைகளையும் இணைக்குறள் ஆசிரிப்பாவுக்குள் அடக்கிவிட முடியும்.

இளைய கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

புதுக்கவிதை நூல்கள், நவீன கவிதை நூல்கள் என ஏராளமான நூல்களை வெளியிடுங்கள். உலகக் கவிதைத் தரத்தைத் தாண்டியும் பயணியுங்கள். உங்கள் வாழ்வில் ஒரேஒரு மரபுக் கவிதை நூலாவது வெளியிடுங்கள். இரண்டாயிரம் அகவை தாண்டிய உங்கள் தாய்க்கு நீங்கள் செய்யும் குல மரியாதையாக அது இருக்கட்டுமே.

நன்றி :

திண்ணை, 06-09-2020





 

Monday, 7 September 2020

 

மனம்... மனம்...

அது கோவில் ஆகலாம் 

கோ. மன்றவாணன் 

கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருந்த நம் நாடு, ஐந்து மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. எப்பொழுதுதான் மீட்சி என்று யாருக்கும் தெரியவில்லை. மக்கள் மட்டும்தாம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றில்லை. தெய்வங்களுக்கும் அதே நிலைதான். நூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளைநோய்க் காலத்தில்கூடக் கோவில்கள் மூடப்பட்டதாகக் குறிப்புகள் இல்லை.

அரசுச் சம்பளம் வாங்குவோர், ஓய்வூதியம் பெறுவோர் சமாளித்துக் கொள்கிறார்கள். பணச்செழுமை மிக்கவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். நடுத்தரத்தினர் சிலபல இடையூறுகளைத் தாண்டி வாழ்வை நகர்த்திக் கொள்கிறார்கள். அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் அந்தந்த நாள் வாழ்க்கையை நடத்த முடியும் என்றிருக்கும் ஏழை மக்களின் நிலையை எத்தனைபேர் உணர்ந்து வருந்தி இருப்பார்கள் என்று தெரியாது.

வறியவர்களின் குரல் எவர் காதில் விழுகிறது? ஏழைகளின் கண்ணீர் எவர் இதயத்தை நனைக்கிறது?

வேலை இல்லை. வருமானம் இல்லை. வயிற்றுக்குச் சோறு இல்லை. வாழ்வதற்கு வாய்ப்பு ஏதும் தொலைதூரம் வரை புலப்படவில்லை. கோவில்களில் பகல் வேளைகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதுவும் நின்று போனது. பள்ளிகளில் உணவு அளிக்கப்பட்டது. அதுவும் தடைப்பட்டுவிட்டது. யாரேனும் உணவுப் பொட்டலம் வழங்க மாட்டார்களா என்று கை ஏந்தியபடி நாளைத் தள்ளுகிறவர்கள் பெருகிவிட்டார்கள்.

அரசியல் கட்சியினர், தொண்டு அமைப்பினர் பலர் பொருள்திரட்டி, ஏழை எளிய மக்களுக்குக் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வழங்கி வந்தனர். அதுவும் தற்போது படிப்படியாகக் குறைந்து பல இடங்களில் இல்லாமலேயே போய்விட்டது.

தனிப்பட்ட சிலர் தங்கள் சொந்தப் பணத்தில் தினந்தோறும் மக்களுக்குக் கபசுரக் குடிநீர் அளித்து வருகின்றனர். முகக்கவசங்களைச் சிலர் வழங்கி வருகின்றனர். விளம்பர வெளிச்சத்துக்கு வராமலேயே ஏராளமானோர் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அருந்தொண்டு ஆற்றுகின்ற இவர்கள் எல்லாரையும் பாராட்ட வேண்டும்.

இந்தக் கொள்ளைநோய்க் காலத்தில் ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளங்களை ஊடகங்களின் வழியாக அறிந்து வருகிறோம். என் பார்வையில் பட்ட ஊடகத் தகவல்களின் அடிப்படையில் அவர்களில் சிலரை மனதார நினைத்துப் போற்றவே இக்கட்டுரையில் பதிவிடுகிறேன்.

ஃ ஃ ஃ  

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்துள்ளவர் மோகன். அவருடைய அன்புமகளின் படிப்புச் செலவுக்காக ஐந்து லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் இந்தியா முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அவர் வாழ்ந்த பகுதியில் ஏழை எளிய மக்களே மிகுதி. அவர்களின் பசிக்குரல் அவருக்கும் அவரின் அன்பு மகள் நேத்ராவுக்கும் கேட்டது. அங்குள்ள குடும்பங்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றைப் பல நாட்களாகத் தொடர்ந்து வழங்கி மகிழ்ந்தனர். அடுத்தடுத்த மாதங்களில் தம் நிலைமை என்னாகும் என்று தெரியாத நிலையிலேயே தங்கள் சேமிப்பை ஏழை மக்களின் பசிப்பிணி போக்கவே செலவு செய்துள்ளனர் அப்பாவும் மகளும்.

தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் படிப்புச் செலவுக்கான பணத்தை ஏழைகளுக்காகச் செலவிட்டு உதவிய அந்த இளம்பெண்ணை எவ்வளவு போற்றினாலும்  தகும். நம் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மோடி அவர்களும் மனதின் குரல் நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணைப் பாராட்டிப் பேசி உள்ளார்.

ஃ ஃ ஃ

கருநாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் தாஜ்முல் பாஷா மற்றும் முஸாமுல் பாஷா என்று இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்தே தொழில்செய்து வந்தனர். இந்தக் கொள்ளைநோய்க் காலத்தில் ஏழை மக்கள் படும் அல்லல்களை நேரில் கண்டு மனம் உருகினர். தம் குழந்தைப் பருவத்தில் தாய்தந்தை இழந்து பாட்டியிடம் வளர்ந்த இவர்களுக்கு மதவேற்றுமை பாராது பலர் உதவி உள்ளனர். அதன் நன்றிக் கடனாகவோ என்னவோ... ஏழை மக்களுக்கு உதவ விரும்பினர். அவர்கள் வாழ்ந்த பகுதியில் உள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் ஊரடங்கு முடியும்வரை உணவளிக்க முடிவு செய்தனர். தம் வீட்டருகே ஒரு கூடாரம் அமைத்து அங்கே சமையல் கூடம் ஒன்றை உருவாக்கினர். மளிகைப் பொருட்கள், காய்கறிகள் யாவையும் வாங்கிக் குவித்தனர். நாள்தோறும் உணவு சமைத்து அந்த மக்களுக்கு வழங்கினர். இவர்கள் இவ்வளவு செய்வதற்கு ஏது அவ்வளவு பணம் என்று யாரும் கேட்கலாம். தம்முடைய நிலத்தை 25 லட்சத்துக்கு விற்றுத்தான் இந்த அருந்தொண்டைச் செய்துள்ளனர்.

இவர்களைப் போலவே பலர், தமிழகத்தின் பல பகுதிகளில் வறியவர்களுக்கு உணவு சமைத்து வழங்கி இருக்கிறார்கள். வழங்கியும் வருகிறார்கள்.

ஃ ஃ ஃ

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர். பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருபவர். பொதுமுடக்கக் காலத்தில் அவர் மதுரையில் இருக்க வேண்டியதாயிற்று. அங்குள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் தங்கியபடி, மதுரை மாநகரில் பிச்சை எடுத்து வந்துள்ளார். அதில் சேர்ந்த பத்தாயிரம் ரூபாயைக் கொரோனா நிதியாக மதுரை ஆட்சித் தலைவரிடம் வழங்கினார். அத்தோடு விட்டுவிடவில்லை. அதுபோல் எட்டு முறை வழங்கினார். இதுவரை பிச்சை எடுத்தே எண்பதாயிரம் ரூபாய்வரை கொரோனா நிதியாக ஆட்சியரிடம் அளித்துள்ளார். இவரை ஊடகத்தினர் விசாரித்த போது, இதற்கு முன்பேகூட அவர் தன் பிச்சை வருமானத்தில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மேசைகள் நாற்காலிகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரிந்தது. வயது முதிர்ந்த ஒரு பிச்சைக்காரர், தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தான் சேர்த்த எண்பதாயிரம் ரூபாயையும் கொரோனா நிதிக்காக அரசிடம் கொடுத்துள்ளார் என்பதை நினைத்தால், கடையேழு வள்ளல்களையும் வென்ற வள்ளல் இவர் அல்லவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இவருக்குப் பணம்கொடுத்தால் நல்ல செயலுக்குச் சென்று சேரும் என்று மக்களும் இவருடைய பிச்சைத் தட்டில் தாராளமாகப் பணம் போட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் நடந்த சுதந்திர நாள் விழாவில் இவருக்கு விருது வழங்க மதுரை ஆட்சியர் முடிவு செய்துள்ளார். அரசு அலுவலர்கள் அவரைத் தேடித் தேடி அலைந்தனர். அவருக்கேது முகவரி? அவருக்கேது அலைபேசி? அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுதந்திர நாளில் அவருக்கு விருது வழங்க முடியாமலேயே விழா நடந்து முடிந்தது. மறுநாள் இது ஊடகங்களில் செய்தியாக வெளியானது. அதன் பின்னரே அவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த விருதை அளித்துள்ளார்.

ஃ ஃ ஃ

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். குழந்தைப் பருவத்தில் இருக்கும் போதே பெற்றோரை இழந்தவர். அருப்புக்கோட்டையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். அங்கிருந்தே படித்தவர். இளம்அறிவியல் பட்டம் பெற்றவர். வேலை தேடிச் சென்னை சென்றுள்ளார். பகலில் வேலை தேடுவதும் இரவில் மெரீனா கடற்கரையில் படுத்து உறங்குவதுமாக இருந்தார். அவ்வாறு படுத்திருந்த போது அவருடைய சான்றிதழ்கள் உள்ளிட்ட உடைமைகள் கொண்ட பையை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். பணி கிடைக்காததால் பல பகுதிகளில் பிச்சை எடுத்துள்ளார். பின்னர் மதுரையில் தொடர்வண்டி நிலையத்தில் தங்கியபடிப் பிச்சை எடுத்து வாழ்வை நகர்த்தி உள்ளார். குப்பை பொறுக்கி விற்றும் உள்ளார். காவல் துறையினர் விரட்டியதால் அங்கிருந்து நடந்தபடியே அலங்காநல்லூர் வந்த போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. தேநீர்க் கடை திறக்கப்படவே இல்லை. கையில் வைத்திருந்த கொஞ்ச பணத்தைக் கொண்டு தேநீர் விற்கத் திட்டம் இட்டார். மிதிவண்டியையும்  தேநீர்க் குடுவையும் வாடகைக்கு வாங்கித் தேநீர் தயாரித்துத் தெருதோறும் சென்று விற்றார். எங்கும் தேநீர்க் கடை இல்லாததால் வியாபாரம் நன்றாக நடந்தது. தொடக்கத்தில் முந்நூறு ரூபாய் வரை ஊதியம் கிடைத்தது. அப்போது தெரு ஓரங்களில் வறுமை வாழ்வை நடத்தியவர்களுக்கு இலவசமாகவே தேநீர் வழங்கி உள்ளார். சற்று வருமானம் கூடுதலாகக் கிடைத்ததும் அதைக்கொண்டு  உணவுப் பொட்டலங்களை வாங்கி அந்தச் சாலையோர மக்களுக்குக் கொடுத்துள்ளார். பின்னர் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஊரில் தேநீர்க் கடைகள் திறக்கப்பட்டன. அதனால் முன்போல் அவருக்கு வியாபாரம் ஆகவில்லை. இருந்தாலும் அலுவலகங்களில், நிறுவனங்களில், பட்டறைகளில் உள்ளோர் தேநீர் வாங்கி ஆதரித்தனர். உணவை வாங்கித் தருவது கட்டுப்படி ஆகவில்லை என்பதால், தான் தங்கி இருந்த இடத்தில் தானே உணவு சமைத்து அந்த மக்களுக்கு அளித்து வந்துள்ளார். ஆதரவற்று வளர்ந்த பிள்ளைக்குத்தான் ஆதரவற்றவர்களின் துயரங்கள் யாவும் தெரியும் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இந்தச் சேவைகளுடன் இன்னொரு உதவியையும் அவர் செய்துள்ளார்.

சோழிங்க நல்லூரில் உள்ள சூர்யகலா என்ற பெண்மணி வீட்டுவேலை செய்து வந்துள்ளார். கொரோனா அச்சத்தால் வீட்டுவேலை யாரும் தரவில்லை. தன் பிள்ளைகளோடு வாடி வதங்கிய அந்தப் பெண்மணியின் கதறலை வாட்ஸப் வழியாகத் தமிழரசன் அறிந்துள்ளார். அந்தப் பெண், தனக்குத் தையல் வேலை தெரியும் என்றும் யாரேனும் தையல் இயந்திரம் வாங்கித் தந்தால் பிழைத்துக் கொள்வேன் என்றும் சொல்லி உள்ளார். சென்னையில் உள்ள தன் நண்பர் வெங்கடேசனுக்குப் பணம் அனுப்பி ஒரு தையல் இயந்திரமும் அதனுடன் துணைப்பொருட்களையும் வாங்கி சூர்யகலாவுக்குத் தரச் செய்துள்ளார். அது மட்டுமின்றி வீட்டுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களையும் வாங்கித் தந்துள்ளார். இந்த உதவிகளைச் செய்த கையோடு அவருடைய நண்பர் அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்த படியே காணொளி அழைப்பு மூலம் பேசி உள்ளார். தனக்கு உதவி செய்த தமிழரசனையும் அவருடைய நிலைமையையும் பார்த்த அந்தப் பெண், கண்ணீர் பெருகி அழுதுள்ளார்.

ஃ ஃ ஃ

ஆயிரம் கல் தொலைவுக்கு அப்பால் இருக்கும் தம் வீடுகளுக்கு நடந்தே சென்ற தொழிலாளர்களின் பாதங்கள் வலித்த போது, சிலரின் இதயங்கள் வலித்துள்ளன. அவர்களுக்காக நெடுஞ்சாலைகளில் காத்திருந்து தண்ணீர், உணவு, பழங்கள் வழங்கிய அந்த நெஞ்சங்கள் யார்யார் என்று யார் அறிவார்?  

பொதுமுடக்கக் காலத்தில் ஏழைகள் படும் துயரங்களைச் சொல்லத் தொடங்கினால் முடிக்க முடியாது. இந்நிலையில் நம்மையே நம்பி வாழும் சில விலங்குகளுக்குத் தாம் படும்பாட்டைச் சொல்ல மொழி தெரியவில்லை. சுற்றுலா இடங்களில் மக்கள் தரும் உணவை நம்பித்தான் குரங்குகள் உள்ளன. ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவில்லை. அதனால் அவற்றுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை. காட்டுக்கும் செல்லவில்லை. நம்மிடையே அவை பழகிவிட்டன. பசியால் அலையும் குரங்குகளுக்காகச் சிலர் பழங்கள் வாங்கித் வழங்கி இருக்கிறார்கள். சிலர் உணவு சமைத்துத் தந்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் பல பகுதிகளில் சிலர், தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வந்துள்ளார்கள்.

இத்தகையோரின் பேரன்பை மனிதநேயம் என்ற சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது. அவர்களின் இதயங்கள் விலங்குகளுக்கும் இரங்குவதால் அந்த அன்பை உயிர்நேயம் என்றுதான் சொல்ல வேண்டும்..

தன்னைப் போலப் பிறரை எண்ணும் நெஞ்சம் கொண்டவர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவானவர்கள். அவர்களால்தாம் அடுத்தவர்களின் துயரைத் தம் துயர்போல் உணர முடியும்.

இந்த ஊரடங்குக் காலத்தில் இத்தகைய இதயங்கள் உருகி உருகிப் பிறருக்குச் செய்த தொண்டுகளைக் காலம் மறந்துவிடக் கூடும். ஆனால் கதிரும் நிலவும் சாட்சிகளாக என்றும் இருக்கும்.

 

நன்றி :

திண்ணை

30-08-2020