Wednesday, 29 July 2020

ஏமாறச் சொன்னது நானா...


ஏமாறச் சொன்னது நானா...

கோ. மன்றவாணன்

இந்த உலகம் ஏமாற்றுகளால் நிறைந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அதனால் ஏமாறாதவர்கள் என்று இங்கு யாரும் இல்லை. ஏமாற்றுகிறவரும் இன்னொருவரிடம் ஏமாந்து போகிறார்.

கல்யாணம் பண்ணிப்பார் வீ்ட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி. புதியதாக வீடு கட்டியவர்களைக் கேளுங்கள். அவர்கள் ஏமாந்த கதைகள் நெடுங்கதைகளாக விரிந்து செல்லும். திருமண விழாவை நடத்திப் பாருங்கள். ஏமாறுவதற்குப் பஞ்சம் இருக்காது. ஏன் திருமணமே கூட ஏமாற்றத்தில் முடிந்து விடுகிறது.

ஒருமுறை ஏமாந்தால் மறுமுறை ஏமாற மாட்டோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏமாறுவது நமக்கு நிரந்தரமாகிவிட்டது. ஏமாறும் விதங்களும் ஏமாற்றும் தந்திரங்களும்தாம் புதிது புதிதாக ஊற்றெடுத்துப் பாய்கின்றன.

குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசையே ஏமாற்றும் எண்ணத்துக்குக் காரணம். பல சமயங்களில் ஏமாறுவதற்கும் அதுவே காரணம். இவற்றுக்கு இடையில் சில வேறுபாடுகளும் உண்டு. ஏமாற்றுவதில்... ஆசையின் கூட்டணியாகக் குற்ற எண்ணமும் தந்திரங்களும் ஓங்கி நிற்கின்றன. ஏமாறுவதில் நம் ஆசைகளோடு நம்முடைய நம்பிக்கைகளும் சேர்ந்து உள்ளன.

ஆசையால் மட்டும் நாம் ஏமாந்து விடுவதில்லை. நியாயமான அன்றாடச் செயல்பாடுகளிலும் நாம் ஏமாந்து போகிறோம்.

பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டாம் பூச்சி என்பதுபோல், ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள், புதுப்புது நபர்களைத் தேடி வலை விரிப்பார்கள். மக்கள் தொகை அதிகமானதுகூட ஏமாற்றுவோர்க்கு வசதி ஆகிவிட்டது.

யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே... மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே... என்பார்கள். இது தன்னை நம்பும் விஷயத்தில் மனஉறுதியைத் தரலாம். அடுத்தவர்களை நம்பும் விஷயத்தில் பொருந்துவது இல்லை. சிலரைப் பிறர் ஏமாற்ற வேண்டியது இல்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வோரும் உண்டு. அவர்களுக்கு இருப்பது தன்னம்பிக்கை இல்லை. அளவு மீறிய அகங்கார நம்பிக்கை.

தன்னை நம்புவதற்குக் கூட அடிப்படைத் தகுதிகள் திறமைகள் இருக்க வேண்டும். இல்லை என்றால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது வழக்கமாகிவிடும்.

நம்பு. அதுதான் வாழ்க்கை என்று நம்ப வைக்கிறார்கள்.

நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைக் கவனிக்கும் போது, நம்பிக்கை என்பது பலமா பலவீனமா என்று ஐயம் ஏற்படும். நாம் ஒருவரிடத்தில் வைக்கும் நம்பிக்கைதான், அவர் நம்மை ஏமாற்றுவதற்குத் திறந்து வைத்த கதவு. நம் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். நம்பிக்கை துரோகங்கள்தாம் அரசியலில் லாபம் சம்பாதிக்கும் சூத்திரம் என்று சிலர் சூது செய்கிறார்கள். வெற்றியும் அடைகிறார்கள். நம்பி ஏமாந்தவர்கள் வாழ்வின் அடித்தட்டில் போய் விழுந்து நொறுங்குகிறார்கள். இதனால் யாரையும் நம்ப முடியவில்லை. எல்லாருமே நல்லவர்களாகவே நடிக்கிறார்கள். நடிக்காதவர்கள் என்று இங்கு யாருமே இல்லை.

     யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
     அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

என்று மனம் பாடும் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

அரசியல் கட்சிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்கு அளிக்கும் மக்கள் தோற்றுப் போகிறார்கள்.  வெற்றி பெற்ற கட்சியினர் மக்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. வேலை வாங்கித் தருவதாகச் சொல்பவர்களிடம் பணம்கொடுத்து ஏமாறுவோர் இன்றும் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள். காதல் நடிப்பில் ஏமாந்து போவோர் பெரும்பாலோர் பெண்கள்  என்றாலும் ஆண்களும் உண்டு. சில உயர்தர மருத்துவ மனைகளும் உயிர் அச்சத்தை ஏற்படுத்தி, நியாயமற்ற வழிகளில் பணம் கறக்கும் வழிகளைக் கடைப்பிடிக்கின்றன. வாடிக்கையாளர்களின் பணத்தை வங்கிகள் ஏமாற்றிய நிகழ்வுகளும் உண்டு. இணையவழிப் பணப் பரிமாற்றம் வந்த பிறகு, பணத்தைக் கொள்ளை அடிப்பது எளிதாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் வங்கி மேலாளர் என்று யாரோ பேசி நம்பச் செய்து கடவு எண்ணைக் கேட்டுப் பெறுகிறார்கள். அடுத்த நொடிகளில் பணத்தைப் பறிகொடுக்கும் அப்பாவிகள் நிறைந்த நாடாகிவிட்டது இது.  பெரிய பெரிய வணிக நிறுவனங்களின் விளம்பரங்களும் நம்ப வைத்து ஏமாற்றுபவைதாம். ஏமாற்றுபவர்கள் பெரிதும் பெண்களையே குறி வைக்கிறார்கள். பொதுவாக எதையும் யாரையும் நம்புகிற  இயல்பினராக பெண்கள் உள்ளனர் என்பதே அதற்குக் காரணம்.

நம் வாழ்க்கையில் எங்கோ சில நேர்மையாளர்களைப் பார்த்து வியக்கிறோம். அவர்கள் எல்லா நேரங்களிலும் நேர்மையாளர்களாக இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி. இவரைப் போல நேர்மையாளர் இல்லை என்று உணரும் வகையில் பல காலம் பழகி மெய்ப்பித்தவர்களே, ஒருநாளில் நிறம் வெளுத்துப் போகிறார்கள். சமயம் பார்த்துச் சமாதி கட்டுகிறார்கள்.

நம்பாமல் இருக்க முடியுமா என்று நீங்கள் கேள்வி தொடுப்பீர்கள். முடியாதுதான். ஆனால் ஒருவர் மீது கண்மூடித் தனமாக நம்பிக்கை வைக்க வேண்டாம். முடிந்த அளவு காரண காரியங்களோடு அலசி ஆராய்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும். அது எளிதான ஒன்றல்ல. ஒருவரை எப்படி நம்ப வேண்டும் என்பதற்கான வழிமுறை இதுவென ஒரு சூத்திரம் போலச் சொல்லவும் முடியாது.

எனினும்...
நம்பிக்கை என்ற குதிரையைக் கட்டுமீறி ஓடவிடக் கூடாது. அதனுடைய கடிவாள வார் நம் கைவசம் இருக்க வேண்டும். கடிவாள வாரில் நம் கவனமும் இருக்க வேண்டும். என்னதான் கவனம் இருந்தாலும் அந்தக் குதிரை நம்மைக் கவிழ்த்துவிடவும் செய்யும். அதுபோன்ற நேரங்களில் அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அதைத்தான் சிலர் விதி என்று சொல்லி ஆறுதல் அடைகிறார்கள்.
......
கடந்த இருபது ஆண்டு காலமாக வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் என் மனைவி என்னைப் பார்த்து இந்தச் சொற்றொடரைச் சொல்வது வாடிக்கை ஆகிவிட்டது.

“எல்லாத்திலயும் நான் வெற்றி அடைஞ்சிருக்கிறன். ஒங்களக் கல்யாணம் பண்ணதுலதான் ஏமாந்து போயிட்டம்.”

நன்றி :
திண்ணை, 26-07-2020

Monday, 20 July 2020

உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே...



உண்மை எது பொய்யி எது
ஒண்ணும் புரியல்லே...

கோ. மன்றவாணன்


பாடல் வாய்ப்பு இல்லாமல் வருந்திய வாலி அவர்கள் ஊருக்கே போய்ப் பிழைத்துக்கொள்ள முடிவு எடுத்த போது கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றைக் கேட்டார். அந்தப் பாடல் தந்த ஊக்கத்தால் ஊருக்குச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டார் என்றவாறு ஒரு நிகழ்வை முகநூலில் ஒருவர் எழுதி இருந்தார். அது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவை அப்படியே தருகிறேன்.

“பாடலாசிரியராக வாய்ப்புக் கேட்டு அலைந்து, அலைந்து விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற கவிஞர் வாலி, சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று டிக்கெட் எடுத்தார். அங்குதான் வாழ்வு தொடங்கியது. கண்ணதாசனைப் போல் பெரிய கவிஞர் ஆக வேண்டும் எனக் கனவில் சென்னை வந்தவர்தான் வாலி.  பலவருடப் போராட்டங்கள், கேலிப் பேச்சுகள், பசி, பட்டினி எனப் பல படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது திரையுலகம் . இறுதியில் இந்த திரையுலகமே வேண்டாம் என முடிவெடுத்து விட்டார். இனிமேல் இந்தத் திரையுலகமே வேண்டாம் ஊருக்கு சென்று பிழைத்துக் கொள்ளலாம் என, டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்தார். எடுத்த டிக்கெட்டை உற்றுப் பார்த்துவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றார். ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்லும்போது வாய்ப்புக் கேட்டு அலைந்த கம்பெனிகளை நினைத்துப் பார்த்தார். எத்தனை அவமானங்கள், எத்தனை கேலி பேச்சுகள். பலவருடப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தான் பல வருடங்களாக அலைந்து திரிந்த தன் கால்களைப் பார்க்கிறார்.  சோர்வுற்று நடக்கின்றன. ஊரிலிருந்து எதற்காகச் சென்னை வந்தோம். பெரிய பாடலாசிரியராக வேண்டும், கண்ணதாசனைப் போல...  என எண்ணிக்கொண்டு வந்த நினைவுகளைப் பார்க்கிறார். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று இருக்கையில் அமர்ந்துகொண்டார். இன்னும் தான் செல்ல வேண்டிய ரயில் வரவில்லை என்பதைப் புரிந்து கொண்ட அவர், அங்கும் இங்கும் செல்லும் மக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ரேடியோவில் பல பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறது . இதுபோல நமது பாடல் வராதா என ஏங்கிக் கொண்டு சென்னை வந்தோம். கடைசிவரை வரவில்லை. ஊருக்கே செல்கிறோம் என மனதைத் தேற்றிக் கொண்டார் . தன் பையில் இருக்கும் தனது கவிதைப் புத்தகத்தைப் பார்க்கிறார். உனக்கு அதிர்ஷ்டம் இல்லை. என் பேனா முனைக்கும் அதிர்ஷ்டம் இல்லை. ஊருக்குச் சென்றதும் முதலில் உன்னை அழித்து விடுகிறேன் எனக் கோபமானார். கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டது. தன்னால் முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் மனதைக் கொப்பளிக்க வைத்தது . வாழ்வில் எதற்கும் அதிர்ஷ்டம் தேவை. அது நமக்கு இல்லை எனத் தன்னைத்தானே வருத்திக்கொண்டார். இப்பொழுது தூரத்தில் ரயில் வண்டி வரும் சத்தம் கேட்கிறது.

இப்போதாவது, இங்கே யாராவது திரைப்பட அன்பர்கள் வாய்ப்புத் தருகிறேன். ஊருக்கு செல்லாதே எனக் கூறுவார்கள் என மனம் ஏங்குகிறது. என்ன செய்வது தன் விதி இதுதான் என நொந்து கொண்டார் .

கவிப்பேரரசு கண்ணதாசன் இன்முகம் அடிக்கடி நினைவில் வந்து செல்கிறது. ரயில் வண்டி வந்து நிற்க வேண்டிய இடத்தில் வந்து நின்றது. மனதைத் தேற்றிக்கொண்டு பையைக் கையில் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றார் கவிஞர் வாலி. அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ரேடியோவில் அந்தப் பாட்டு ஒலித்தது. அதைக்கேட்ட கவிஞர் வாலி மனதிற்குள் மின்னல் அடிக்க ஆரம்பித்தது. அந்தப் பாடல் அவர் இதயத்தைத் துளைத்துக் கொண்டே இருந்தது.   100 யானை பலம் பெற்றார். அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பத் தயார் ஆனது. கையிலிருந்த டிக்கட்டைப் பார்த்தார். ரயில் கிளம்பக் கடைசி விசிலும் அடிக்கப்பட்டது. கையில் இருந்த டிக்கெட்டையும் இரயிலையும்  மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தார் கவிஞர் வாலி. ரயில் கிளம்பி விட்டது. கையில் இருந்த டிக்கெட்டைக் கிழித்து எறிந்தார் .

அவர் கேட்ட அந்தப் பாடல் வரிகள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.  நாமும் பெரிய கவிஞன் ஆக வேண்டும். இதுதான் தன் முடிவு என்று  ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து வீறுநடை போட்டார். அவர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தப் பாடல் இதோ....

           மயக்கமா கலக்கமா ..,
           மனதிலே குழப்பமா ..,
           வாழ்க்கையில் நடுக்கமா..,”

....................................


இதைப் படித்ததும் எனக்குள் அதிர்வு உண்டானது. இது தொடர்பாக வாலியே எழுதியதும் பேசியதும் என் நினைவுக்கு வந்தன.

“நானும் இந்த நூற்றாண்டும்” என்ற தலைப்பில் புதிய பார்வை என்ற இதழில் வாலியின் வரலாற்றுத் தொடர் வந்தது. அதில் மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசன் பாடலால் தனக்கு ஏற்பட்ட உந்துதலை எழுதி இருந்தார். அது புத்தகமாகவும் வந்துள்ளது. அதைப் போலவே பொதிகைத் தொலைக்காட்சியில் வெளியான “வாலிப வாலி” என்ற தொடரிலும் அந்த உந்துதலை உணர்வெழுச்சியாய்ச் சொல்லி இருந்தார். இந்தக் கரோனா காலத்திலும் அதை மறுஒளிபரப்புச் செய்து இருந்தார்கள். நானும் பார்த்தேன். கேட்டேன்.

அவர் சொன்னதை என் வரிகளில் சுருக்கமாகத் தருகிறேன்.

“நான் பாடல் எழுதச் சென்னைக்கு வந்து மூன்று நான்கு ஆண்டுகள்வரை ஏழெட்டுப் பாடல்கள்தாம் எழுதி இருந்தேன். வருடத்துக்கு ஒன்றிரண்டு பாடல் எழுதினால் எப்படிக் காலம் தள்ளுவது என்று இருந்தேன். அப்போது மதுரையில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் கணேசன், என்னை மதுரைக்கு வந்துவிடும்படியும், அந்த நிறுவனத்தில் ஒரு வேலை போட்டுத் தருவதாகவும் கூறினார். அதன்படியே நான் மதுரைக்குச் சென்று உத்தியோகம் பார்ப்பது என்று முடிவு செய்தேன். அந்தச் சமயத்தில் என் அறைக்குப் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் எதேச்சையாக வந்தார். அவரிடத்தில் நீங்கள் சமீபத்தில் பாடிய பாடல் எது என்று கேட்டேன். சுமைதாங்கி என்ற படத்திற்காகப் பாடினேன் என்று சொல்லி, மயக்கமா கலக்கமா என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலைக் கேட்டதும் மதுரைக்குச் செல்லும் முடிவை மாற்றிக் கொண்டேன் என்றவாறு சொல்லி இருந்தார். சென்னையிலே இருந்து பாடல் எழுதும் முயற்சியில் வெற்றிபெற வேண்டும் என்று மனஉறுதி கொண்டதை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடலின் சிறப்பைப் பற்றி ஒவ்வொரு வரியாக விளக்கியும் உள்ளார். இந்தப் பேட்டி இணையத் தளத்தில் பலரும் பார்க்க உள்ளது.

நல்ல வேளை வாலியே சொல்லிவிட்டார். அதை வேறொருவர் சொல்லி இருந்தால் நம்பிக்கை இடறி இருக்கும்.

இதுபோல்... ஒரே நிகழ்வை இரு வேறு விதமாக எழுதினால் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் மக்கள் மயங்குவார்கள்.

வாலி சொன்ன உண்மை நிகழ்வுக்கும் முகநூலில் எழுதப்பட்ட நிகழ்வுக்கும் எத்தனை வேறுபாடுகள் என்பதைத் தினமலர் வார மலரில் வரும் எட்டு வித்தியாசங்கள் போல எண்ணிப் பார்க்கலாம். ஏராளமான வித்தியாசங்கள் கிடைக்கும். ஏன் இவர்கள் இப்படி எல்லாம் நம் கண்முன் நடந்த வரலாற்றிலேயே புனைவுகளைக் கலப்படம் செய்கிறார்கள்?

இரு நிகழ்வுகளிலும் மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசன் பாடலால்தான் வாலி ஊக்கம் பெற்றார் என்பது மட்டும் உண்மை. அடிப்படை மாறவில்லை. அதுவரை மகிழ்ச்சிதான். நேரில் பார்த்ததுபோல் கதைகதையாக இட்டுக் கட்டுவதுதான் ஏன் என்று தெரியவில்லை.

இந்த இரு நிகழ்வுகளில் முதலாவதாகக் குறிப்பிட்ட நிகழ்வுதான் பலரையும் கவர்கிறது. நாளை அதுவே நிலைபெறலாம். பொய்க்குக் கவர்ச்சி உண்டு. உண்மைக்குத்தான் ஒப்பனை இல்லையே!

உங்களுக்குப் பிடித்த தலைவரைப் பற்றிய பத்துப் புத்தகங்களைச் சேகரித்துப் படியுங்கள். ஒரே நிகழ்வைக் குறிப்பிடும் போது எத்தனை முரண்கள் என நீங்களே கண்டு திகைப்பீர்கள். தலைகீழாக முரண்படும் பதிவுகளும் உண்டு.

சமூக ஊடகங்களில் தம் கொள்கைகள் சார்ந்தும் தம் தலைவர்கள் பற்றியும் வகைவகையாக வண்ண வண்ணமாகப் பொய் அலங்காரங்கள் செய்து வரலாற்றைக் கட்டி எழுப்புகிறார்கள். இறந்த தலைவர்களின் வாழ்க்கையில் நிகழாதவற்றையும் இவர்களின் எழுத்துகளில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். அப்பாவிகளாகிய நாம் அவற்றை அப்படியே நம்பித்தான் ஆக வேண்டி இருக்கிறது. சரி பார்க்கத் தரவுகளும் இல்லை. சாட்சிகளும் இல்லை. தமக்கு வேண்டாதவர்களைப் பற்றி விதவிதமான விரோதமான புனைவுகளை மெய்போல் தோன்றுமாறு எழுதியும் தாழ்த்துகிறார்கள். போட்டோ ஷாப் என்ற படக்கடை மென்பொருள் வழியாகப் புனைவு ஆதாரங்களை வரைகிறார்கள்.

வரலாறு என்பது ஆடை உடுத்தாமல் நிர்வாணமாகவே இருக்க வேண்டும். ஆல இலையளவு ஆடை உடுத்தினாலும் ஏதோ ஒன்று மறைக்கப்படும். ஆனால் சில வரலாறுகள் ஒப்பனைகளாலும் கற்பனைகளாலும் ததும்பி வழிகின்றனவோ என ஐயுற வேண்டி உள்ளது.

சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களில் உண்மையைப் பிரித்து எடுக்கும் வல்லமை தாராயோ?

நன்றி :
திண்ணை
12-07-2020

Saturday, 18 July 2020

பவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்



பவர் பாயிண்ட் தொடர்பான 
தமிழ்ச்சொற்கள்

கோ. மன்றவாணன்

நம் திரையரங்குகளில் படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பும் இடைவேளையின் போதும் ஸ்லைடு போடுவார்கள். பெரும்பாலான ஸ்லைடுகளில் புகை பிடிக்காதீர்... எச்சில் துப்பாதீர்... முன் இருக்கையில் கால் நீட்டாதீர்... இருக்கை மாறி அமராதீர்... எனக் கட்டளைகள் இருக்கும். பின்னர் ஸ்லைடு வழியாக விளம்பரம் போட்டார்கள். தற்போது விளம்பரங்கள் எல்லாம் குறும்படங்களாக உருவாக்கப்பட்டுத் திரையிடுகிறார்கள். இந்த Slilde என்பதைத் தமிழில் படச்சில்லு என்று சொல்லலாம்.

தற்காலத்தில் பவர் பாயிண்ட் என்ற மென்பொருள் வழியாகவே ஸ்லைடுகளை உருவாக்கிக் காட்சிப்படுத்துகின்றனர். அதனை ஒளிச்சில்லு என்றுகூடச் சொல்லலாம்.

சில்லு என்பதற்கு இணையாக “வில்லை” என்றொரு சொல்லும் உண்டு. அந்த “வில்லை” இங்குப் பயன்படுத்தினால் பொருள் குழப்பம் ஏற்படும். படவில்லை என்று எழுதினால் பட வில்லை என்று பொருள் கொள்ளாமல் “என்மேல் எதுவும் படவில்லை” என்பார்கள். ஒளிவில்லை என்று எழுதினால் ஒளி வில்லை என்று பொருள் கொள்ளாமல் “எங்களிடத்தில் எந்த ஒளிவும் இல்லை” என்று பொருள் கொள்வார்கள்.

பவர் பாயிண்ட் என்பது அந்த மென்பொருளுக்கு இடப்பட்ட பெயர்தான். பயன்பாட்டை அடிப்படையாக வைத்து உருவான சொல் இல்லை. Face Book என்பதை முகநூல் என்றதுபோல்... பவர்பாயிண்ட் என்பதற்குத் திறன்சுட்டி என்றோ திறன்புள்ளி என்றோ திறன்முனை என்றோ தமிழ்ப்பெயர் சூட்டலாம். பயன்படுத்தப் பயன்படுத்த அதுவும் ஏற்கப்படலாம்.  அதைவிடவும் படச்சுட்டி என்ற சொல்லைப் பயன்படுத்தினால் பவர் பாயிண்ட் என்பதன் பயன்பாடும் தெரியும். ஒன்றைச் சுட்டுவதால்... காட்டுவதால்... சுட்டி எனலாம். மவுஸ் என்பதற்கும் சுட்டி என்று சொல்கிறோமே என்பார் உண்டு. படம், திறன் என்பவையோடு சேர்ந்து சுட்டி வருவதால் அவ்வாறு பொருள்குழப்பம் ஏற்படாது.

பவர்பாயிண்ட் என்ற படச்சுட்டி மூலமாக எந்தப் பொருள்குறித்தும் எழுத்துகளாக படங்களாக ஸ்லைடுகள் உருவாக்கப்படுகின்றன. ஸ்லைடு எழுதுவதற்கு உதவியாக, ஆயத்த வடிவங்களும் அந்த மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்லைடுகளைத் தொகுப்பாக அடுக்கி, ஒன்றன் பின் ஒன்றாகக் காட்சிப் படுத்துகிறார்கள். ஆகவே மென்பொருள் வழியாக இத்தகைய ஸ்லைடுகள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படுவதால் அதனைப் படச்சில்லு என்றோ ஒளிச்சில்லு என்றோ சொல்லலாம். ஒளிச்சில்லு என்பதில் பொருள்பொருத்தம் மிகஉண்டு. எனினும் படச்சில்லு என்பதில் இருக்கும் எளிமை ஒளிச்சில்லுவில் இல்லை.

ஸ்லைடு ஷோ என்பதைப் படச்சில்லு காட்சி என்றோ ஒளிச்சில்லு காட்சி என்றோ சொல்லலாம். இதில் இன்னொரு பார்வையும் இருக்கிறது.
பழங்காலத்தில் பனை ஓலைகளைப் பதப்படுத்தி எழுதி நூலாக்கம் செய்தார்கள். பல ஓலை நறுக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கட்டினார்கள். அதனைச் சுவடி என்றார்கள். அதுபோலவே இந்த ஸ்லைடு ஷோக்களில் பயன்படுத்தப்படும் ஒளிச்சில்லுகளும் உள்ளன. ஸ்லைடுகளின் கோப்புக்குப் படச்சுவடி / ஒளிச்சுவடி என்றும் ஸ்லைடு ஷோவுக்குக் படச்சுவடிக் காட்சி / ஒளிச்சுவடிக் காட்சி என்றும் சொல்லலாம்.

பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் என்பதை ஒளிச்சுவடி முன்னிடல் / ஒளிச்சுவடி முன்னிடுகை என்றும் சொல்லலாம். படச்சுவடி முன்னிடல் / படச்சுவடி முன்னிடுகை என்றும் குறிப்பிடலாம்.

இவ்வாறு பல சொற்கள் இருக்கின்றன. இவற்றில் இருந்து, சொல்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் எளிமையாக இருக்கும் சொற்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். அந்த வகையில் கீழ்க்கண்டவாறு சொற்களைப் பயன்படுத்தலாம்.

Slide – படச்சில்லு
Slides in a file format – படச்சுவடி / படச்சில்லுகள்
Slide show – படச்சுவடிக் காட்சி / படச்சில்லு காட்சி
Power Point Presentation : படச்சுவடி முன்னிடல் / படச்சுவடி முன்னிடுகை,
                    படச்சில்லு முன்னிடல் / படச்சில்லு முன்னிடுகை
Power Point (Soft Wear) : படச்சுட்டி,

நன்றி :
திண்ணை
05-07-2020