பொம்மைகள்
நாளை
கொலு கொண்டாட
அட்டைப் பெட்டிகளில்
அடைத்து வைக்கப்பட்டிருந்த
பொம்மைகளைப்
பொறுமையாக எடுத்தாள்
அழகு பார்த்துக்
கொலுமேடையில்
வைத்தாள்
கொண்டு வந்தாள்
கைலாயத்தை
நடுவீட்டில்
கோபியரோடு கொஞ்சும்
கோகுலத்துக் கண்ணனின்
காதல்வனத்தை
கண்காட்சிக்கு வைத்தாள்
தொப்பை செட்டியாரின்
மளிகைக் கடையில்
வண்ணவண்ணக் கூடைகளில்
வகைவகையான பண்டங்கள்
ஆனால்
ஈக்கள் மொய்க்கவில்லை
கல்யாண ஊர்வலம் பாரு
மாப்பிள்ளையும் பெண்ணையும் பாரு
எனப் பாட்டிசைத்து
மேள தாளம்
நாதஸ்வரம் என
நகர்ந்து வரும்
இசைவாசிகளின்
விதவிதமான
முக பாவங்கள்
பெட்ரோமாக்ஸ் லைட்
தூக்கி வரும் மீசைக்காரர்கள்
பாயும் குதிரைகள் பூட்டிய
பல்லக்கு வண்டியில்
மாப்பிள்ளையும் பெண்ணும்
என
அமைத்து மகிழ்ந்தவள்
கடைசியாகக்
கல்யாண மேடை அமைத்தாள்
ஐயர் மந்திரம் ஓத
உற்றோர் பெற்றோர் சூழ
நாதஸ்வரக்காரர், தவில்காரர்,
ஒத்து ஊதுபவர் முதலியோர்
ஜமக்காளத்தில் அமர்ந்தபடி
ஜமாய்க்க
மணப்பெண்ணுக்குத் தாலி கட்டும்
மாப்பிள்ளை பொம்மையை எடுத்தபோது
அது
கைதவறி உடைந்து நொறுங்கியது…..
அந்த
முதிர்கன்னியின்
மனத்தைப் போலவே!
சோதிடம்
சொல்லுமோ
சுடுமண் பொம்மைகளும்?
-கோ. மன்றவாணன்