Sunday, 18 September 2016


பேயென பெய்யும் மழை

     
      மழை
      மில்லி மீட்டரில்
      பதிவாவதாகச் சொல்கிறார்கள்
      ஆனால்
      அது
      கொல்லி மீட்டரில் பதிவாகிக்
      கொலைகள் தினந்தோறும்!

      பேய்மழையே…
      உன்னால்
      மருத்துவர் காட்டில் நோய்மழை

      சீறிய மழையால் பாதித்த
      சின்னக் கவிஞன் நானும்
      மீள முடியவில்லை
      அதனால்
      கவிதை கொஞ்சம்
      நமுத்துதான் போய்விட்டது!

      மதராஸ் மாநிலத்துக்குத்
      தமிழ்நாடு எனப் பெயர்மாற்றம்
      செய்தவர் கழக அண்ணன்;

      தமிழ்நாடு என்பதை
      மழைநாடு என
      மாற்றியவர் கார்மேக வண்ணன்! 

      நாங்கள்
      வீட்டைவிட்டு
      வெளியே வரமுடியவில்லை
      வெள்ளமாய்
      வீட்டுக்குள் புகுந்த நீ
      வெளியேற வழியில்லை

      எழும்பி நிற்கின்றன
      ஏரி குளங்களில்
      ஆகாயம் தொடும்
      அரசுக் கட்டடங்கள்

      குளத்துப் புறம்போக்கில்
      குடிசை கட்டியவன்தான்
      வெள்ளத்துக்குக் காரணமாம்!

      கோன் எவ்வழி
      குடி அவ்வழி
      கொட்டும் நீர் செல்ல ஏதுவழி?

      நிலங்களையும் பத்திரங்களையும்
      நீ அழித்துவிட்டாய்
      நிலஅபகரிப்பு, நிலமோசடி என
      உன்மீது
      வழக்குகள் தொடுக்க
      வழக்கு மன்றங்கள் போதாது!

      கடும்வெறியோடு
      கல்விச் சான்றிதழ்களையும் அழிக்க
      உன்னால் முடிகிறது என்றால்
      நீ
      பேய்மழை என்பது உண்மைதான்!

      அந்தச் சான்றிதழ்களை வாங்க
      அலையும்போதுதான் தெரியும்
      பேய்மழையை விட
      கொடூரமானது
      அதிகாரிகளின் முகம்!    

-கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment