Sunday, 18 September 2016



ஒரு
கவிதை(யின்) டைரி


நிறைவான கவிதைகளால்
நிரம்பும் போதுதான்
டைரிக்கு
ஆண்டு முடிந்தாலும்
ஆயுள் அதிகரிக்கிறது

அவளின்
நினைவு இறகுகளை
டைரிக்குள்
அடைகாத்து வைத்தேன்;
அவை
குட்டி போட்டுக் குட்டி போட்டு
வருட முடிவில்
மயில்தோப்பு ஆடக் கண்டேன்

கோடு போட்ட டைரிக்குள்
என்
கைப்பிடித்துக்
கவிக்கோலம் போட்டவள்
அவள் மட்டுமே

அவளின்றி
ஓர் எழுத்தும்
அசைவதே இல்லை
என்
கவிதை டைரியில்

சொத்துப்
பத்திரத்தைப்
பாதுகாப்பது
பயத்தின் அதீதம்

கவிதை டைரியைக்
காவல் காப்பது
காதல் தெய்வீகம்

தனிமையில்
தலையணைக்குள்ளும்
கையணைக்குள்ளும்
வைத்துத் பாருங்கள் டைரியை!
கம்பனும் பாரதியும்
கனவில் வந்து
கைகுலுக்குவார்கள்

கவிதை
கண்சிமிட்டாத
எந்த டைரியும்
வெள்ளையாக இருந்தாலும்
வெறும் இருட்டுதான்

காதல் செய்யும்
ஒவ்வொரு மனசுக்குள்ளும்
ஒரு
கவிதையின் டைரி
எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும்
மாய விரல்களால்!

- கோ. மன்றவாணன்



No comments:

Post a Comment